திங்கள், 19 ஆகஸ்ட், 2019

ஜார்கண்ட் மளிகைக் கடையிலும் மது விற்பனை செய்யலாம்!

மின்னம்பலம் :
மளிகைக் கடையிலும் மது விற்பனை செய்யலாம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் பெரிய மளிகைக் கடைகளில் இனிமேல் மது விற்பனை செய்யலாம் என்ற புதிய திட்டத்தை கொண்டுவர அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக ரகுபர் தாஸ் இருந்து வருகிறார். இதனிடையே, கடந்த மூன்று ஆண்டுகளாக ஜார்க்கண்ட் மாநில அரசு தனது கலால் வரிக்கொள்கையை இருமுறை திருத்தியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கலால் வரிக்கொள்கை திருத்தத்தின்படி, அரசே சொந்தமாக மதுக்கடைகளைத் திறந்து மது விற்பனை செய்தது. ஆனால், இதில் போதுமான அளவு வருமானம் கிடைக்கவில்லை.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, மதுக்கடைகளைத் தனியாருக்கு ஏலத்தில் விற்பனை செய்ய திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த இரு திருத்ததிலும் அரசு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. அதனால் மதுபானத்தை மளிகைக்கடையிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது ஜார்க்கண்ட் அரசு. இதனை நடைமுறைப்படுத்தினால், ஆண்டுக்கு 1500 கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
அதனடிப்படையில், மாநிலத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் எந்த மளிகைக் கடையும், ரூ.30 லட்சம் வருவாய் உள்ள மளிகைக் கடையும் மது விற்பனை செய்துகொள்ள அரசு சார்பில் உரிமம் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது கலால் வரித்துறை வட்டாரங்கள். மேலும், “இந்த வரைவுத் திட்டத்துக்கு முதல்வர் வாய்மொழியாக உத்தரவு அளித்துவிட்டாலும், சில விளக்கங்களைக் கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார். அதற்கு உரிய விளக்கத்தை நாங்கள் அளித்த பின், 2018 கலால்வரிக் கொள்கையில் திருத்தம் செய்யப்படும். இந்தத் திட்டத்தின்படி பஞ்சாயத்து அளவில் செயல்படும் மளிகைக் கடையில்கூட மது விற்பனை செய்ய முடியும்” என்கிறார்கள்.
ஜார்கண்ட் மாநிலம், 2000ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திருந்து ஒரு பகுதியாக பிரித்தெடுக்கப்பட்ட மாநிலமாகும். பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக பல்வேறு பகுதிகளில் மது விற்பனை நடைபெறுகிறது. பீகாருக்குள் அதிகம் கொண்டுவரப்படும் மதுபானங்கள் அருகிலிருக்கும் ஜார்க்கண்ட்டைச் சேர்ந்தவையே. இதனால் அம்மாநில எல்லைப் பகுதிகளில் சட்டவிரோதமான மது விற்பனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது மளிகைக் கடைகளிலும் மதுவிற்பனை தொடங்கும் நிலையில், இன்னும் எளிதாக அவை பீகாருக்குள் விற்பனைக்கு வரலாம் எனக் கூறப்படுகிறது.
அத்துடன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியினால் ஏற்படும் சீரழிவுகளும், சட்டவிரோதமான ஊழல்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. நிர்ணயித்த விலைக்கு மேல் விற்பனை, மதுவினால் ஏற்படும் வன்முறை என திக்குமுக்காடி வருகிறது ஜார்க்கண்ட்.
இங்குள்ள தலைநகரான ராஞ்சி மாவட்டத்தில் மட்டும் 125 மதுபானக்கடைகள் உள்ளன. அவற்றை பெரும்பாலும் அரசியல்வாதிகள், செல்வாக்கான பிரமுகர்கள் தான் மதுபானக்கடைகளை ஏலம் எடுத்துள்ளனர். இந்நிலையில், தற்போது அரசே ஜி.எஸ்.டி வரி செலுத்தும் மளிகைக் கடைகளில் விற்பனை செய்யலாம் எனக் கூறியுள்ளதால் செல்வந்தர்களுக்கு லாபமும், சாதாரண மக்களுக்கு குடியினால் ஏற்படும் தீங்கும் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: