சனி, 17 ஆகஸ்ட், 2019

மோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்சரிக்கை!

மோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்சரிக்கை!

மின்னம்பலம் : பொருளாதார வல்லுநர் ஜெ.ஜெயரஞ்சன் உடன் ஒரு நேர்காணல்! மதரா
நாட்டின் முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் வேலை நாள்களை குறைத்து வருகின்றன. மூன்று நாள்களிலிருந்து சில நிறுவனங்கள் 20 நாள்கள் வரை தங்கள் தொழிற்கூடங்களை மூடுகின்றன. வியாபார மந்தநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனைத்து நிறுவனங்களும் தெரிவிக்கின்றன. அதிக மக்கள் தொகை கொண்ட , தொழில்வளர்ச்சி பெற்ற நாட்டில் மோட்டார் வாகன சந்தை வீழ்ச்சியை நோக்கி செல்வது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுபற்றிய விரிவான தகவல்களைப் பெற பொருளாதார வல்லுநர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.
வியாபார மந்தநிலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
விற்பனையை ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுவர், அல்லது இந்த காலாண்டை இதற்கு முந்தைய காலாண்டோடு ஒப்பிடுவர். இப்படி பார்க்கும் போது கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு இப்போது மோட்டார் வாகன விற்பனை குறைந்துள்ளது. அதிலும் கடந்த 15லிருந்து 20 மாதங்களில் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதையே வியாபார மந்தநிலை என்று கூறுகிறார்கள். மோட்டார் வாகன உற்பத்தி துறை மட்டுமல்ல பல துறைகள் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அந்த வீழ்ச்சியின் அளவு வேறுபடுகிறது.

மோட்டார் வாகன உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலைக்கான காரணம் என்ன?
சாதாரண மக்கள் உபயோகப்படுத்தும் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்கள், அதற்கு பின் கார், ஆடம்பர கார், லாரி, பஸ், டிராக்டர் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான் மோட்டார் வாகன உற்பத்தித் துறை. இதில் உள்ள ஒவ்வொரு வாகனப் பிரிவுகளும் ஒவ்வொரு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
உதாரணமாக டிராக்டர் உற்பத்தியில் மந்தநிலை ஏற்படுகிறது என்றால் கிராமப்புறங்கள் நன்றாக இல்லை என்று அர்த்தம். விவசாயம் செழிப்பாக இல்லை என்றால் டிராக்டர்கள் வாங்குவது குறைந்து போகும். கிராமப்புற, நகர்ப்புறங்களைச் சார்ந்த கீழ் நடுத்தர வகுப்பினரிடம் வேலை வாய்ப்பு, பணப்புழக்கம் இல்லை என்றால் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை இருக்காது. உயர் நடுத்தர வர்க்கத்தினரிடம் பணப்புழக்கம் குறைகிறது என்றாலும் கார்கள் விற்பனை குறைந்துவிடும். புதிய தொழில் தொடங்கப்படவில்லை என்றால், தொழிலுக்கான மூலதனங்கள் குறைந்து போனால் சரக்கு போக்குவரத்துக்கான லாரிகள் விற்பனை குறைந்து போகும். ஆக ஒட்டுமொத்தமாக மோட்டார் வாகன உற்பத்தித் துறையின் வியாபாரம் மந்தநிலையை அடைந்ததற்கு காரணம், அனைத்து தரப்பிலும் பணப்புழக்கம் இல்லை, பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்துள்ளது.

இந்தத் துறையில் உள்ள சுமார் பத்து நிறுவனங்கள் சில நாள்கள் தொழிற்கூடங்களை மூடுவதால் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்?
ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கு பின்னாலும் ஆயிரம் சிறிய நிறுவனங்கள் உள்ளன. உதாரணத்துக்கு ஒரு பிரபல நிறுவனம் கார் தயாரிக்கிறது என்றால், முழு காரையும் அந்த நிறுவனம் தயாரிப்பதில்லை. காரில் உள்ள உதிரி பாகங்கள் அனைத்தும் தனித்தனி நிறுவனங்களில் தயாராகி பெரிய நிறுவனத்திற்கு வரும். அதாவது ஒரு நிறுவனம் காரின் டயரை மட்டும் தயாரிக்கும், இன்னொரு நிறுவனம் பிரேக்கை மட்டும் தயாரிக்கும், மற்றொரு நிறுவனம் எலெக்டிரிக் பாகங்களை தயாரித்து அனுப்பும். காருக்கு தேவையான இரும்பு தகடுகள் ஒரு தொழிற்சாலையில் தயாராகும். அந்த இரும்பு ஒரு சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும்.
பெரிய நிறுவனம் அந்த பாகங்களை எல்லாம் சேர்த்து காரை உருவாக்கும். இந்நிறுவனம் சில நாள்கள் தொழிற்கூடத்தை மூடினால் அதற்கு பாகங்களை விநியோகிக்கும் ஆயிரம் நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தவேண்டும். அந்த நிறுவன ஊழியர்களும் குடும்பங்களும் வேலையிழப்பை சந்திக்கவேண்டிவரும்.
இந்த தற்காலிக வேலையிழப்பு நிரந்தர வேலையிழப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறதா?
இது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. இந்த தற்காலிக வேலையிழப்பால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வருவாய் பறிபோகிறது. இவர்கள்தான் சந்தையில் மோட்டார் வாகனங்களை வாங்க வேண்டும். பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள இவர்கள் சந்தையில் எப்படி வாகனங்களை வாங்குவார்கள்? அப்படியெனில் மேலும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் வியாபாரம் மந்தநிலையை அடையும். அதனால் அதை நம்பியுள்ள நிறுவனங்கள், அதைச் சார்ந்த லட்சக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த இவர்களுக்கு நிரந்தர வேலையிழப்பு ஏற்படும். இதற்கு மல்டிபிளேயர் என்று பெயர். அடுக்கிவைக்கப்பட்ட சீட்டுகளில் ஒன்றை அடித்தால் ஒன்று மற்றொன்றை அடித்து சாய்த்துக்கொண்டே போகுமே அப்படியானது இது.
அப்படியானால் ஒட்டுமொத்தமாக அத்தனை தரப்பையும் பதம் பார்த்துவிடுமா இந்த வியாபார மந்தநிலை?
இல்லை. அதைத் தடுக்க வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு சரிந்துகொண்டே வரும் சீட்டுகட்டில் இடையில் இரண்டு சீட்டுகளை உருவிவிட்டால் போதும், பின்னால் உள்ள சீட்டுகள் விழாமல் தடுக்கலாம். அதைப் போல் வியாபார மந்தநிலையைப் போக்க நிறுவனங்களுக்கு அரசு, வங்கிகள் மூலமாக நிதியை அளிக்க வேண்டும். மேலும் இந்த வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் இந்த மந்தநிலையை குறைக்கலாம்.

மிக முக்கியமாக கிராமப்புற வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும், அரசு அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் தேக்கநிலை ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக நாட்டின் அனைத்து துறைகளையும் பாதிக்கும். வாங்கும் திறன் அதிகரித்தால் தானே சந்தையில் விற்பனை இருக்கும். அதைவிடுத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எவ்வளவு சலுகைகள் அளித்தாலும் அவர்கள் தொழில் தொடங்க முன்வரமாட்டார்கள். தங்கள் பொருள்களை விற்கமுடியாவிட்டால் எப்படி வருவார்கள். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தாவிட்டால் இந்த சீட்டுகட்டு சரிவதை நிறுத்தமுடியாது

கருத்துகள் இல்லை: