வியாழன், 15 ஆகஸ்ட், 2019

மாணவர்களுக்கு எச் ராஜா கயிறு கட்டும் போராட்டம்

மாணவர்களுக்குக் கயிறு கட்டும் போராட்டம்: ஹெச்.ராஜாமின்னம்பலம் :மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது என்ற பள்ளிக் கல்வித் துறையின்
அறிவிப்புக்கு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தங்களுடைய சாதி அடையாளங்களைக் குறிக்கும் வகையில் கைகளில் பல வண்ணங்களில் கயிறுகள், ரப்பர் பேண்டுகள் கட்டிக்கொண்டு வருவதாகவும், சாதிக் கொடிகளின் வண்ணங்களில் நெற்றியில் பொட்டு வைத்துவருவதாகவும் தொடர்ச்சியாக புகார் எழுந்தவண்ணம் இருந்தது. இதனால் மாணவர்கள் சாதிக் குழுக்களாகப் பிரிந்து சண்டையிட்டுக்கொள்வதாகவும் இதைத் தடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்தது.

இதுதொடர்பாக சுற்றறிக்கை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை, “பள்ளிகளில் சாதிகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டிவருவதால் பள்ளிகளில் பிரிவினைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்களின் இந்தப் பிரிவினை உணர்வை சாதியவாதிகளும், சில ஆசிரியர்களும்கூட ஊக்குவிப்பதாகத் தெரியவருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமைக் கல்வி அலுவலர் அவ்வாறு இருக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளைத் தூண்டுபவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்புக்கு மக்களவை திமுக குழுத் துணைத் தலைவர் கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பள்ளிகளில் சாதியைக் குறிக்கும் அடையாளக் கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த அறிவிப்புக்கு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நேற்று (ஆகஸ்ட் 14) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகளைக் கட்டக் கூடாது. நெற்றியில் திலகமிடக் கூடாது எனப் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது தனிநபர் உரிமைக்கும், இந்து மத உணர்வுக்கும் எதிரானது. நெற்றியில் திலகமிடுவதும் கையில் கயிறு கட்டுவதும் இந்துக்களின் பழக்க வழக்கம். இதில் சாதி எங்கிருந்து வந்தது” என்று கேள்வி எழுப்பினார்.
சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். இந்து மத உணர்வுக்கு எதிராகச் செயல்படும் பள்ளிக் கல்வி இயக்குநரை முதல்வர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய ஹெச்.ராஜா, “சுற்றறிக்கையைத் திரும்பப் பெறாவிட்டால் மாணவர்களுக்குக் கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “கையில் கயிறு கட்டுவது. நெற்றியில் திலகமிடுவதை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களைத் தடை செய்யும் தைரியம் பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு வருமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை: