திங்கள், 12 ஆகஸ்ட், 2019

வெட்டப்பட்ட மரங்களை கண்டு அழுத சிறுமி ... .. அரசு தூதரானார்

பாண்டியன் சுந்தரம் : ஆசையாக வைத்த குல்முஹர் மரங்கள் வெட்டப்பட்டுக் கிடந்தது; அதைக் கண்டு
அழுததால் அரசுத் தூதரான சிறுமி!
தான் ஆசையாக நட்டு வைத்த மரங்கள் வெட்டப்பட்டதால் அழுத சிறுமி, மணிப்பூர் முதல்வரின் பசுமை மணிப்பூர் திட்ட அரசுத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது வயதாகும் எலங்பம் வாலன்டினா தேவி 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் முதல் வகுப்பு படிக்கும் போது செல்லும் வழியான ஆற்றங்கரையில், இரண்டு குல்முஹர் மரங்களை நட்டு வைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் அந்த மரக் கன்றுகளுக்கு நீர் ஊற்றி பராமரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் எலங்பம்.
ஆகஸ்டு 3-ஆம் தேதியன்று சாலைப் பணிகளுக்காக அந்த மரங்கள் வெட்டப்பட்டன. தான் ஆசையாக பராமரித்து, வளர்த்து வந்த மரங்கள் வெட்டப்பட்டு, வீழ்ந்து கிடப்பட்டதைக் கண்ட அச்சிறுமி பதறினாள்; கதறி அழுதாள்!
இதனை வீடியோவாக எடுத்த ஒருவர், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வைரலான இந்த வீடியோவிற்கு பலரும் பாராட்டுக்களும், அச்சிறுமிக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் மிகவும் துடிப்பாக இருக்கும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கும் இந்த வீடியோவைப் பார்த்துள்ளார். அச்சிறுமியை அழைத்துப் பாராட்டிய அவர், முதல்வரின் பசுமை மணிப்பூர் திட்ட தூதராக இப்போது அவரை நியமித்து விட்டார்.மேலும் அச்சிறுமியை சமாதானப்படுத்தும் விதமாக 2 கி.மீ., தூரத்திற்கு ஆற்றங்கரையில் வனத்துறை சார்பில் 20 மரக்கன்றுகள் நட உத்தரவிட்டார்.மரக் கன்றுகள் உடனே நடப்பட்டன. இளைஞர் அமைப்பு ஒன்றும் 1000 மரங்களை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
மரங்களின் மீதான எலங்பம்மின் ஆர்வமும், அன்பும் பலரிடமும் மரங்களின் மீதான பாசத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது அரசின் மரம் நடும் விழாக்கள் உள்ளிட்டவற்றில் எலங்பம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வருகிறார்!

கருத்துகள் இல்லை: