திங்கள், 8 அக்டோபர், 2018

இந்தோனேசியா சுனாமி 1,763 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியா சுனாமி 1,763 பேர் பலி!மின்னம்பலம் : இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,763 பேராக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் செய்தி நிறுவனமான ஏஎஃப்பி நேற்று (அக்டோபர் 7) செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: செப்டம்பர் 28 ஆம் தேதியன்று இந்தோனேசியாவிலுள்ள சுலாவேசி தீவை பூகம்பமும் அதனைத் தொடர்ந்து சுனாமியும் தாக்கியதில் 1,763 பேர் உயிரிழந்துள்ளனர். 5,000 பேர் காணாமல் போய் உள்ளனர் என அந்நாட்டின் தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அரசு அதிகாரிகள் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையையும் கிடைத்துள்ள விவரங்களையும் ஒப்பிட்டு உறுதிபடுத்திக் கொண்டிருக்கின்றனர். நிலச்சரிவுகளினாலும் சுனாமி பேரலைகளினால் வந்த சகதியிலும் சிக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கையைக் கண்டறிவது அவ்வளவு சுலபமாக இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 5)வரை தேடுதல் பணிகள் நடைபெற்றன. அதற்கு அடுத்த நாட்களில் கண்டறியப்படாதவர்களை இறந்து விட்டதாக அனுமானிக்கப்படுகிறது அல்லது காணாமல் போய் விட்டவர்கள் எனப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெட்டோபோ மற்றும் பாலரோ ஆகிய பகுதிகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் இடிபாடுகளில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த இரண்டு பகுதிகளையும் பெரிய இடுகாடாக அறிவிக்கலாமா என்று அரசு ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் விரன்ட்டோ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: