ஞாயிறு, 7 அக்டோபர், 2018

குஜராத் . பாலியல் வல்லுறவு: பயத்தில் தொழிலாளர்கள்!

பாலியல் வல்லுறவு: பயத்தில் தொழிலாளர்கள்!
மின்னம்பலம் : 14 மாத பெண் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் எதிரொலியாக குஜராத்தில் பிற மாநிலத்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.
குஜராத் மாநிலத்துக்கு வேலைத் தேடி நாள் தோறும் உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து செல்கின்றனர். அவர்கள், அங்குக் கட்டட வேலை, ஓட்டல்களில் சப்ளயர், வியாபாரம் போன்ற பலதொழில்களைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் குஜராத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் 14 மாத பெண் குழந்தை பிகாரைச் சேர்ந்த ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்.
இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் வல்லுறவைக் கண்டித்து குஜராத் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் தீவிரமடைந்ததை தொடர்ந்து, பாலியல் வல்லுறவு போன்ற பிற வழக்குகளில் சுமார் 150 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்த பெரும்பாலானவர்கள் ,உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதனால் பிறமாநிலத்தவர்களை கண்டாலே குஜராத் மக்கள் அடிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்குப் பயந்து அங்கு வேலை செய்யும்பிற மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குஜராத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், தாகூர் சேனா என்ற அமைப்புதான் வெளிமாநிலத்தவர்கள் மீது இந்த தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதற்கு குஜராத் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், தாகூர் சேனா குழுவின் தலைவருமான அல்பேஷ் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், “இது துரதிர்ஷ்டமானது, நாங்கள் வன்முறைக்கு வித்திடவில்லை, சமாதானத்தைப் பேசினோம், குஜராத்தில் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: