வெள்ளி, 12 அக்டோபர், 2018

ஒரே நாளில் இரண்டுமுறை கட்சி தாவிய பத்மினி ரெட்டி ...


ஒரே நாளில் இருமுறை கட்சித்தாவல்!மின்னம்பலம்: தெலங்கானாவில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த பெண், மாலையே மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
தெலங்கானா சட்டப்பேரவையை முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த மாதம் கலைத்தார். அம்மாநிலத்திற்கு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரங்களும், எதிர் அணியின் முக்கியத் தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளிலும் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் துணை முதல்வராக இருந்தவர் தாமோதர் ராஜா நரசிம்ஹா. இவரது மனைவி பத்மினி ரெட்டி, காங்கிரஸில் இருந்து விலகி நேற்று (அக்டோபர் 11) காலை தெலங்கானா மாநில பாஜக தலைவர் லட்சுமண் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் ஆகியோரை சந்தித்து பாஜகவில் இணைந்தார். உறுப்பினர் அட்டையும் அவருக்கு வழங்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் சீட் வழங்கப்படாது என்பதாலேயே அவர் பாஜகவுக்கு தாவியதாக கூறப்பட்டது. அவரது வருகை பாஜகவிற்கு வலு சேர்க்கும் என லட்சுமண் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலையே பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தெரிவித்தார். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டேன், எனது முடிவை திரும்பப்பெறுகிறேன். தற்போது காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் திரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். அவரது இந்த யூ டர்ன் தெலங்கானா பாஜகவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

கருத்துகள் இல்லை: