வெள்ளி, 28 செப்டம்பர், 2018

5 மனித உரிமை போராளிகள் பிணை கோரலாம் .. உச்சநீதிமன்றம்

ஐவர் ஜாமீன் கேட்க அனுமதி!மின்னம்பலம்: கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் விசாரணைக் குழு அமைக்கமுடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பீமா-கோரேகான் போர் வெற்றியின் 200ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, வெர்னான் கன்சால்வஸ், அருண் பெரைரா, கவிஞர் வரவர ராவ் ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி புனே காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், இது தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், வரலாற்று ஆசிரியர் ரோமிலா தாப்பர் உள்ளிட்ட 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 28) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டிய அவசியமில்லை, கைது செய்யப்பட்டவர்கள், எந்த மாதிரியான விசாரணை அமைப்பு வேண்டும் என்பதைக் கோர முடியாது. வேறுபட்ட அரசியல் கருத்து காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற வாதத்தை ஏற்க முடியவில்லை. விசாரணையை மகாராஷ்டிரா மாநில போலீஸாரே தொடரலாம்” என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 2 நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதி சந்திரசூட், “மாறுபட்ட கருத்து என்பதால் எதிராளிகளின் கருத்தை நாம் கேட்காமல் மறுக்கக் கூடாது. காலம் தாழ்த்தப்பட்டு தரப்படும் நீதியால் எதையும் சமன் செய்துவிட முடியாது. ஏற்கெனவே இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில காவல்துறை ஆதாரங்களை ஊடகத்திடம் வெளியிட இருப்பதாகக் கூறி, மக்கள் மனதில் சார்புத்தன்மையை ஏற்படுத்த முயற்சி செய்ததையும் இனியும் அவர்கள் இந்த விசாரணையைத் தொடர உகந்தவர்களா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
எனவே, சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். நீதிமன்றம் அதனை கண்காணிக்க வேண்டும்”என்று தனது தீர்ப்பை வாசித்தார்.
எனினும், அதிகபட்ச நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது என்பதால், 5 பேரின் வீட்டுக் காவலை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தும். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய் அமைக்க வேண்டிய தேவையில்லை எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

கருத்துகள் இல்லை: