சனி, 29 செப்டம்பர், 2018

கஞ்சா கறுப்பு :அடுத்த ஜென்மத்துல கூட படம் எடுக்க மாட்டேண்ணே.. எனக்கு இது தேவையாண்ணே''” --கண்ணீர் விடும் கஞ்சா !

Ganja Karuppu
velmurugan-borewellnakkheeran.in-ஈ.பா. பரமேஷ்வரன் சினிமா மார்க்கெட்டில் காமெடி ஃபீல்டில் ஓஹோ என இருந்தவர் கஞ்சா கருப்பு. இப்போது கடனாளியாகி, கொடுக்குற சம்பளத்தை வாங்கிக் கொள்ளும் நிலைமைக்குப் போய்விட்டதாக தகவல் கிடைத்ததும், கஞ்சா கருப்புவுடன் எப்போதும் இருக்கும் கவிஞர் ஜெயங்கொண்டான் மூலம் கருப்புவைத் தொடர்பு கொண்டோம். "வீட்டுக்கு வாங்கண்ணே வௌக்கமாப் பேசுவோம்'' என்றார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கஞ்சா கருப்புவின் "பாலா-அமீர்'’ இல்லத்திற்கு காலை 9 மணிக்குச் சென்றோம்.அப்போது காரில் இருந்து இறங்கியபடியே நம்மைப் பார்த்த கஞ்சா கருப்பு, “"மாங்காடு கோவிலுக்குப் போயி காமாட்சி ஆத்தாள கும்பிட்டு வர்றேண்ணே, இனிமே எல்லாத்தையும் அந்த தாயி பாத்துக்குவா. நீங்க கேக்க வேண்டிய கேள்விய கேளுங்க. அம்புட்டு உண்மையையும் சொல்லிப்புடுறேண்ணே'' என்றதும் பேட்டி ஆரம்பமானது.
 போனமுறை பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனீங்களே, அந்த அனுபவம் எப்படி இருந்தது?
 அதெல்லாம் பெரிய படிப்பினைண்ணே. நல்லவுக யாரு, கெட்டவுக யாருன்னு தெரிஞ்சுக்கிட்டேன். பசியோட வேதனைய தெரிஞ்சுக்கிட்டேன். பெரிய ஜாம்பவான் கமல் அண்ணன்கூட நேருக்கு நேர் பேசும் வாய்ப்பும் கிடைச்சது. எல்லாத்துக்கும் காரணமான பிக்பாஸ்க்கு நன்றி.
 கொஞ்ச நாளா உங்க படத்தையே காணோமே, இப்ப எப்படி இருக்கு உங்க மார்க்கெட்?
 ஆண்டவன் புண்ணியத்துல நல்லா இருக்குண்ணே. "சண்டக்கோழி-2', "முடிச்சிருச்சு. அடுத்து "வெண்ணிலா கபடிக்குழு-2', "களவாணி-2', "பேரன்பு கொண்ட பெரியோர்களே'ன்னு அமீர் அண்ணன் டைரக்ஷன்ல ஒரு படம், இது போக நாலஞ்சு படத்துக்கு பேச்சுவார்த்தை முடியுற கண்டிஷன்ல இருக்கு. அதிலயும் ’சண்டக்கோழி-2’ படத்துல மக்கள் மனசுல நிக்குற மாதிரி எனக்கு வசனம் கொடுத்துருக்காரு லிங்குசாமி அண்ணன். தர்மதுரையில நடிச்சப்ப விஜய்சேதுபதி அண்ணன் என்னை ரொம்பவே பாராட்டுனாரு. இப்பக்கூட டைரக்டர் சீனுராமசாமி கிட்டே, ‘கஞ்சா கருப்பு நல்ல நடிகன், நல்ல மனிதன், கடின உழைப்பாளின்னு பாராட்டிருக்காரு விஜய் சேதுபதி.
 ரஜினி கூட நடிக்கும் வாய்ப்பு வரலையா?
"பேட்ட' படத்துக்கு வாய்ப்பு வந்துச்சு. அந்த நேரம் பார்த்து "சண்டக்கோழி-2'’ கால்ஷீட் டைட்டா இருந்ததால நம்மால முடியாமப் போச்சுண்ணே.



  எல்லாம் சரி, நீங்க கடனில் தத்தளிப்பதா நியூஸ் வந்திருக்கே?
அம்புட்டும் உண்மைதாண்ணே. இதுல மறைக்கிறதுக்கு என்ன இருக்கு. "வேல்முருகன் போர்வெல்' அப்படின்னு ஒரு படத்தால் நான் பட்டபாடு இருக்கே. பாலா அண்ணனும் அமீர் அண்ணனும் அப்பவே சொன்னாக, டேய் சினிமாங்கிறது ஒரு பொக்கிஷம், அத பத்திரமா பாதுகாக்கணும். தயாரிப்புங்குறது ஈஸியான காரியமல்ல, ஆழம் தெரியாம காலை விடாதேன்னு சொன்னாக. என்னயப் புடிச்ச கெரகம் விடல, மாட்டிக்கிட்டேன். எனக்கு இது தேவையாண்ணே.  சினிமான்னா என்னன்னு தெரியாத கோபிங்குற ஒருத்தன் டைரக்டர்ங்கிற பேர்ல எமனா வந்து என் வாழ்க்கையில விளையாடிட்டான். இப்பவும் பெரிய டைரக்டர்கள் பேரச் சொல்லிக்கிட்டு, அவர்களிடம் அசிஸ்டெண்டா இருக்கேன்னு அள்ளிவிட்டுக்கிட்டிருக்கான். கோபி மாதிரி குடி கெடுப்பவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


அப்ப இனிமே சொந்தப்படம் எடுக்கமாட்டீகல்ல?
  இந்த ஜென்மத்துல மட்டுமல்ல, அடுத்த ஜென்மத்துல பாம்பா பொறந்தாக்கூட ஊர்ந்துக்கிட்டுத் தான் திரிவேனே ஒழிய படம் எடுக்க மாட்டேண்ணே
 

கருத்துகள் இல்லை: