திங்கள், 24 செப்டம்பர், 2018

எழுவர் விடுதலை.. இழப்பீட்டுக்காகத்தான் எதிர்ப்பைக் கிளப்புகின்றனர்: அற்புதம்மாள் பேட்டி

tamithehindu :பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் தமிழக அமைச்சரவையின் முடிவை ஆளுநர் மதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினமே அந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும், இந்த தீர்மானத்தின் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க வேண்டும் என தாங்கள் ஆளுநருக்கு கெடு விதிக்க முடியாது எனவும் தமிழக அரசு கூறியிருந்தது.
இதையடுத்து, ஆளுநர் இந்தப் பரிந்துரை தொடர்பாக மத்திய அரசின் கருத்தைக் கேட்டுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவ்வாறு மத்திய அரசிடம் எந்தவித கருத்தையும் கேட்கவில்லை என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும், இதுகுறித்து வெளிப்படையான, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, ராஜீவ் காந்தி படுகொலையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தன் மகனை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று (திங்கள்கிழமை) ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து மனு அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அற்புதம்மாள், “எழுவர் விடுதலையைப் பரிந்துரைத்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. எழுவர் விடுதலை ஆளுநர் கையெழுத்தால் தான் தாமதிக்கப்படுகிறது. ஆளுநர் என்னிடம் அனுசரனையாக நடந்துகொண்டார். என் மனுவை படித்துப் பார்த்தார். அந்த மனுவில், என் மகனுக்கு எப்படி பரோல் கிடைத்தது, மேலும் பரோல் நீட்டிப்பு எதனால் கிடைத்தது என்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறேன்.
மேலும், தீர்ப்பில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறிய நீதிபதி கே.பி.தாமஸின் கருத்து, மறைந்த நீதிபதி கிருஷ்ணய்யர் வலியுறுத்திய புத்தகம், சிடி உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் உறுதியளித்தார்.
ஆளுநர் மாளிகையில் அதிகப்படியாகப் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. மனுவில் இருந்த திருத்தம் ஒன்றை ஆளுநர் சொன்னார். அதனை நான் திருத்தினேன். தமிழக அரசின் தீர்மானத்தில் கையெழுத்திட்டு விரைவில் என் மகன் விடுதலையாவான் என்ற நம்பிக்கையுள்ளது. உச்ச நீதிமன்றம், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் மரியாதையளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
எழுவர் விடுதலையில் இழப்பீட்டை எதிர்பார்த்து தான் எதிர்ப்பு கிளம்புகிறது. உயிருடன் சித்ரவதை அனுபவிக்கும் எனக்கும் என் மகனுக்கு என்ன இழப்பீடு வழங்கப்படும்?” என அற்புதம்மாள் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: