வெள்ளி, 28 செப்டம்பர், 2018

ஐ.பி.எல். வழக்கில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

ஐ.பி.எல். வழக்கில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம் மாலைமலர் : ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களை தாக்கிய வழக்கில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை: நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 16-ந்தேதி பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் போலீஸ் காவலுக்கு நீதிபதி அனுமதி அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாஸ் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்த நிலையில் நுங்கம்பாக்கம் போலீசார் போட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கருணாசுக்கு எழும்பூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கருணாஸ் உடனடியாக ஜாமீனில் வெளிவருவதற்கு ஐ.பி.எல். வழக்கு தடையாக உள்ளது. ஐ.பி.எல். போட்டியின்போது வன்முறையை தூண்டியதாக திருவல்லிக்கேணி  போலீஸ் நிலையத்தில் கருணாஸ் மீது 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

அந்த வழக்குகளில் ஜாமீன் வழங்குவது குறித்து இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களும் தவறாமல் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: