வியாழன், 2 ஆகஸ்ட், 2018

அத்தனை போலி விளம்பரங்களும் தமிழகத்தில் .. அதிலும் கொங்குதான் முதலிடம் ,,,, ஜூவியின் பங்கு சாதரணமா?

அநிருத்த பிரம்மராயன் :  ஷேர் மார்க்கெட்களில் ஒரு scam உண்டு. யாருமே
சீந்தாத நட்டத்தில் இருக்கும் பங்குகளை குறைந்த விலையில் வாங்கி வைத்துக் கொள்வர். பிறகு அந்த கம்பெனிகள் பெரும் லாபம் பெறப் போகிறது என நம்பும் படி செய்தி பரப்புவர். அந்த பங்கின் விலை உச்சத்திற்கு செல்லும். அப்போது அனைத்தையும் விற்றுவிட்டு வெளியேறிவிடுவர். கொஞ்சநாள் கழித்து அது ஒரு உதவாக்கரை பங்கு என தெரியவரும். மற்ற அனைவருக்கும் பெருத்த நட்டம்.
உதாரணமாக பஞ்சாப் நேசனல் வங்கியின் பங்கைப் பார்க்கலாம். தொடர்ச்சியான நட்டத்தால் 2016 பிப்வரி மாதத்தில் அதன் விலை ரூபாய் 72.50 ஆக இருந்தது. பிறகு திட்டமிட்டு செய்தி பரப்பப் படுகிறது. பொதுத்துறை வங்கிகளுக்கு மோடி அரசு இரண்டு லட்சம் கோடி கொடுக்கப் போகிறது எனும் செய்தி வருகிறது. வங்கித்துறை பங்குகள் விலை ஏறுகின்றன. PNB விலை கிட்டத்தட்ட மும்மடங்கு உயர்ந்து 207 ரூபாய் ஆகிறது. அதாவது 2016 பிப்ரவரியில் ஒரு கோடி போட்டால் 2017 நவம்பரில் மூன்று கோடி. வாங்கியோர் எல்லாம் விற்று வெளியேறிய பிறகு குமிழி பட்டென்று உடைகிறது. நீரவ் மோடி மோசடி வெளிவருகிறது. தற்போது PNB பங்கின் விலை 85.25 ரூபாய்.
ஆனால் நான் சொல்ல வந்த விசயம் இதுவல்ல. நாட்டு மாடுகளை வைத்து இதே போல ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆதாரமே இல்லாமல் A1 பால் A2 பால் என தெருவில் போறவன் எல்லாம் உளறினான்.
நாட்டு மாட்டு பால் குடித்தால் தீராத வியாதி எல்லாம் தீர்ந்துவிடும் என செய்தி பரப்பப்பட்டது. எப்போதும் போல தமிழ்நாட்டின் நம்பர் ஒன் scam காகிதம் விகடன் மூச்சுக்கு முன்னூறு தரம் புரளி பரப்பியது.
அஞ்சாங்கிளாஸ் படிக்கும் சின்ன குழந்தைக்கு வேட்டி கட்டிவிட்டு மாடுக்கு அருகே நிற்க வைத்து போட்டோ எடுத்து எதோ நிலாவுக்கு சென்றது போல பெருமையாக பேசினர். இதனுடன் மரபு, பாரம்பரிய, கலாச்சார மசாலாக்களும் சேர்க்கப்பட்டன. விளைவு நான்கு வருடம் முன்பு ஐந்தாயிரத்திற்கு கூட விலைபோகாத மாடுகள் இன்று அறுபது ஆயிரமாம்.
தினசரி ஒரு லிட்டர் பால் கறக்கும் நாட்டு மாடு கூட லட்சங்களில் விலை போகிறது. இவர்கள் சொல்லும் விலைக்கணக்கையும் பராமரிப்பு கணக்கையும் பார்த்தால், ஒரு லிட்டர் பாலை ஐநூறு ரூபாய்க்கு விற்றால் கூட கட்டாது போல. ஈமூ கோழி, இரிடியம், ஹீலர் பிராடைப்போல இதிலும் கொங்கு தான் முதலிடமாம்.
இந்த scam என்று உடையும் எனத் தெரியவில்லை. பார்ப்போம் எல்லா ஸ்கேமும் ஒருநாள் முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும். ஆனா ஒன்னு. எவனோ நல்லா சம்பாரிச்சுட்டான்.
- அநிருத்த பிரம்மராயன்

கருத்துகள் இல்லை: