வியாழன், 2 ஆகஸ்ட், 2018

தமிழக முன்னணி ஊடகங்கள் மோடி மீட்டிங்... டீல் டன்! .மக்கழே .. இனி இந்த ஊடகங்களை நம்பாதீர் ?

savukku : சினிமாவுக்கு போன சித்தாளு 
திங்களன்று, தமிழகத்தின் முன்னணி ஊடகங்களின்  உரிமையாளர்கள்  / 
செய்தி ஆசிரியர்கள் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து வந்துள்ளனர்.  ஊடக உரிமயாளர்களும், பத்திரிக்கையாளர்களும் ஒரு பிரதமரையோ, முதல்வரையோ சந்திப்பது என்பது இயல்பானதே.  ஆனால் இவர்கள் சந்தித்தது  மோடி என்பதும், இந்த சந்திப்பு மிக மிக ரகசியமாக  வைக்கப்பட்டது என்பதுமே இதை விவாதப் பொருளாக்குகிறது.
கடந்த முறை மோடி சென்னை வந்தபோது, இதே போல ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அந்த சந்திப்பு ராஜ்பவனில் நடைபெற்றது.  மோடியை சந்திக்கச் சென்ற ஊடகத்தினர், இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.   அன்று #GoBackModi உலக அளவில் ட்ரெண்ட் ஆனதில், சமூக வலைத்தளங்கள் மூலமாகவே கட்சி நடத்தி, சமூக வலைத்தளங்கள் மற்றும் மென்பொருட்கள் மூலமாகவே பல கலவரங்களை உருவாக்கி பழகிய பரிவாரத்தினருக்கு அது பெரும் அதிர்ச்சி.
ட்விட்டரிலேயே அரசியல் செய்யும் மோடிக்கும் இது பெரும் அதிர்ச்சி.  இதன் காரணமாக, சென்னை ஐஐடியின்  இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து வந்த மோடி #GoBackModi ட்ரெண்ட் ஆனதில் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.   இதனால் எதிர்ப்பார்த்த் போல அந்த ஊடகவியாளர்கள் சந்திப்பு
நடைபெறவில்லை.  இரண்டு மணி நேரம், குடும்பத்தினரோடு சென்று காத்திருந்த ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.  மோடி அவர்களோடு செலவிட்டது வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே.

அதை சரி செய்யவே திங்களன்று நடைபெற்ற சந்திப்பு.   இந்த சந்திப்பு, வழக்கம் போன்ற சந்திப்புகள் இல்லாமல் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.    இந்த சந்திப்பில் பங்கேற்ற, மூத்த பத்திரிக்கையாளர்கள் தங்கள் அலுவலகத்தில் கூட எதற்காக டெல்லி செல்கிறோம் என்பதை சொல்லவில்லை.
எந்த ஒரு ஊடக நிர்வாகமும், தங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்களை டெல்லிக்கு சென்று பிரதமர்களை சந்தித்து வா என்றால் சந்தித்துதான் ஆக வேண்டும். முடியாது என்று சொல்லி விட்டு அவர்களால் வேலையில் தொடர முடியாது என்பது யதார்த்தம்.  ஆனால் எதற்காக இந்த ரகசியம் என்பதுதான் கேள்வி.
இந்த சந்திப்பின்போது, தமிழக பிஜேபியை சேர்ந்த கேடி.ராகவன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வானதி சீனிவாசன் ஆகியோர் மட்டுமே உடன் இருந்துள்ளனர்.  தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனோ, தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனோ உடன் இல்லை.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக, இச்சந்திப்பில் பங்கேற்ற மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.  அவர் மேலும் பேசுகையில், “வந்தவங்க எல்லாம், மோடியை கடவுளை பாத்த மாதிரி பாத்துக்கிட்டு இருந்தாங்க.   எவனாவது ஒருத்தன் கேள்வி கேப்பான்னு பாத்தா, அத்தனை பேரும், பிஜேபி கட்சிக்காரங்க மாதிரி அமைதியா கையை கட்டிக்கிட்டு இருந்தாங்க.  ஒரே ஒருத்தர் மட்டும் நீட் தேர்வால தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருக்குன்னு சொன்னார். அதுக்கு மோடி, இது தமிழ்நாட்டுக்கு மட்டும் கொண்டு வந்த திட்டம் இல்ல, இந்தியா முழுமைக்கும் கொண்டு வந்த திட்டம்.  பல ஸ்டேட்டுல ஸ்டேட் போர்ட் சிலபஸ்தான் இருக்கு. அது இல்லாம இதுல உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்டிருக்குன்னு பதில் சொன்னார்.  அப்புறம் சில பேரு, எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கத்தை குறை சொன்னாங்க.   ஆனா, எதுக்குமே மோடி வாயை திறக்கல.
சில பேர் சோசியல் மீடியா பத்தி பேசுனாங்க.   அதுக்கும் மோடி வாயை திறக்கல.  அமைதியா கேட்டுக்கிட்டு இருந்தாரு.   பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறேன்னு எல்லாரையும் வரச் சொல்லி, நல்லா ஏமாத்தி அனுப்பிட்டாரு” என்றார் அவர்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பல பத்திரிக்கையாளர்கள், அவர்கள் நெருங்கிய நண்பர்களிடம் கூட, இந்த சந்திப்பு பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள்.  அதுதான் ஏன் என்பது புரியவில்லை.   இவர்கள் அனைவரும் ஊடக அதிபர்கள். பத்திரிக்கையாளர்கள்.  இது போன்ற ஒரு சந்திப்பை ரகசியமாக வைக்க முடியாது என்பது கூட இவர்களுக்கு தெரியாமல் போனது வியப்பாகத்தான் இருக்கிறது.
ஊடக ஆதரவு என்பது ஒரு அரசியல் கட்சிக்கு பலம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.  ஆனால் ஊடகம் மட்டுமே போதுமானது என்று ஒரு அரசியில் கட்சி நினைக்குமானால், அதை விட பெரிய முட்டாள்த்தனம் இருக்க முடியாது.    நெருக்கடி நிலை முடிந்து 1977ல் தேர்தல் நடைபெற்றபோது, ஏறக்குறைய ஊடகங்களே இல்லை எனலாம்.   அனைத்து செய்திகளும், மத்திய அரசு அதிகாரிகளின் தணிக்கைக்கு பிறகே வெளியிடப்பட்டன.  ஒரே ஒரு வரி கூட அரசுக்கு எதிராக இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.   ஆனாலும், Indian people defeated the Mighty Indira Gandhi.  அதுவும், காங்கிரசுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணி இல்லாமலேயே.
தற்போது எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை நிச்சயம் இல்லை.  ஆகையால் தமிழ்நாட்டின் ஊடகங்களை வளைத்து விட்டால், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று மோடி நினைப்பாரேயென்றால், அது பகல் கனவு மட்டுமே.  இந்திய மக்கள் அத்தனை முட்டாள்கள் அல்ல.
அது ஒரு புறம் இருக்கட்டும்.   இப்படி ரகசியமாக மோடியை டெல்லி சென்று, சந்தித்து இந்த பத்திரிக்கையாளர்கள் என்ன சாதித்து விட்டார்கள் ?   ஒரு வேளை மோடி, தொடர்ந்து பிஜேபிக்கு ஆதரவாக எழுத வேண்டும் என்று கூறினால் கூட, இவர்களால் அப்படி தொடர்ந்து எழுத முடியுமா ?
என்.ராம் போன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் மோடியை கேள்வி கேட்டிருக்க வேண்டுமா வேண்டாமா ?  பத்திரிக்கையாளர் என்ற முறையில் அது அவர்கள் கடமை இல்லையா ?  எந்த கேள்வியும் கேட்காமல், சும்மா முணுமுணுத்து விட்டு வருவதற்கு இவர்கள் பிரதமரை பார்க்க சென்றார்களா, பெண் பார்க்க சென்றார்களா ?
நான்கு வருடமாக எந்த பேட்டியும் அளிக்காமல், பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தாமல், மனம் போன போக்கில் ஆட்சி நடத்தும் ஒரு பிரதமர், பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என்று சொல்கையில், நாங்கள் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்போம்.  அதற்கு பதில் சொல்வதாக இருந்தால்தான் நாங்கள் பிரதமரை சந்திப்போம் என்று கேள்வி எழுப்பியிருக்க வேண்டுமா இல்லையா ?
பாராளுமன்ற விவாதத்தில் நேருக்கு நேராக, ரபேல் ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கேள்வி எழுப்பினால், நான் ஒரு ஏழைத் தாயின் மகன் என்று மழுப்பும் ஒரு நபரை சந்தித்து இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் என்ன சாதித்து விடப் போகிறார்கள் ?
குறைந்தது மோடியை சந்தித்து வந்தது குறித்து வெளிப்படையாக இவர்கள் அறிவித்திருக்க வேண்டுமா இல்லையா ?
டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள், எதற்காக உங்க ஆளுங்க இங்க வந்தாங்க ?   எங்களுக்கே பேட்டி குடுக்காத மோடி, தமிழ்நாட்டுல இருந்து வந்தா உங்க ஆளுங்களுக்கு மட்டும்  குடுத்துடுவாரா ?  அவர் பேசறதை கேக்கறதுக்கு, வீட்டுலயே உக்காந்து மன் கி பாத் கேக்கலாமே. எதுக்கு டெல்லி வரணும் என்று கேட்கிறார்கள்.
டெல்லி சென்று மோடியை சந்தித்த மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக அதிபர்களை பத்திரிக்கையுலகின் ஜாம்பவான்கள் என்று அவர்களே கருதிக் கொள்கிறார்கள்.    இது நாள் வரை அவர்கள் அப்படி இருந்திருக்கலாம்.   அல்லது அப்படி நடித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
இவர்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள் அல்ல.  ஆளுமை இல்லாத சுயநலமிகள் என்று மட்டுமே இவர்களை கருத முடியும்.
Shankar A : மோடிக்கு இடமும், வலமும் நிற்பது யாரென்று சந்தேகம்
எழுப்புகின்றனர்.

மோடிக்கு இடதுபுறம் நிற்பது, ராமசுப்பு லட்சுமிபதி, தினமலர் மதுரை பதிப்பாளர்.

இடதுபுறம் நிற்பது, ஆதிமூலம். காவிகளுக்கு ஆதரவாக எந்த செய்தியை வேண்டுமானாலும் பணம் தந்தால் போடுகிறேன் என்று பேசி ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கியவர்.

வீடியோ இணைப்பு.
https://www.youtube.com/watch?v=9ZnIkMwo68g&feature=youtu.be

கருத்துகள் இல்லை: