வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

எட்டுவழிசாலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் நடைபயணத்தில் கைது செய்ப்பட்டவர்கள் விடுதலை

tamil.thehindu.com :   என் நிலம் என் உரிமை மார்க்சிஸ்ட் நடைபயணம்  எட்டு வழிச்சாலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட நடை பயணத்தில் சென்றவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்ய போலீஸார் ஆஜர்படுத்தினர், வழக்கில் முகாந்திரமில்லை என நீதிமன்றம் அனைவரையும் விடுவித்தது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''இயற்கை வளங்களையும் விவசாய நிலங்களையும் நீர் நிலைகளையும் அழித்து உருவாக்கப்பட உள்ள சேலம்-சென்னை எட்டு வழிச் சாலையினை கைவிட வேண்டுமெனவும், இதற்காக நிலம் கையகப்படுத்துவது என்ற பெயரில் விவசாயிகளையும், கிராமப்புற மக்களையும் மிரட்டி வரும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபயணம் நடத்துவது என திட்டமிட்டிருந்த அடிப்படையில், திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி காலை நடைபயணம் தொடங்கியது.

நடை பயணத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி. ராமகிருஷ்ணன், உ. வாசுகி, ப. செல்வசிங், பெ. சண்முகம், ஏ. லாசர், க. கனகராஜ் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் எஸ். ஜெயராமன் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நடைபயணம் தொடங்கியது. உடனடியாக, காவல்துறை நடைபயணத்தை மேற்கொண்டவர்களை தடுத்து வலுக்கட்டாயமாக கைது செய்து, வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது.
ஆகஸ்ட் 1 அன்று இரவு 12 மணி அளவில் கைது செய்யப்பட்ட ஆண்களையும், பெண்களையும் விடுதலை செய்தவுடன் அந்த இடத்திலிருந்தே மீண்டும் நடைபயணம் தொடங்கியது. மீண்டும் காவல்துறை நடைபயணம், மேற்கொண்ட தலைவர்களையும், 13 பெண்கள் உள்பட 90 பேர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
மீண்டும் விடுதலை செய்தாலும், எங்களது நடைபயணம் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கைது செய்த 90 பேரையும் ஆகஸ்ட் 2-ம் தேதி இரவு 11 மணி அளவில் நீதித்துறை நடுவர்-2 திருவண்ணாமலை முன்பு ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்ய வேண்டுமென காவல்துறை கோரியது.
நீதிபதி முன்பு நடைபெற்ற விசாரணை
நீதிபதி முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மதிமுக சார்பில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, “பதிவு செய்யபபட்ட வழக்கு சட்டத்திற்கு புறம்பானது எனவும், நடைபயணத்திற்கு நாங்கள் முறையான அனுமதி கேட்டு கடந்த ஜூலை 23 அன்று காவல்துறை கூடுதல் இயக்குநரிடம் மனு கொடுத்தோம்.
அவரது உத்தரவின் அடிப்படையில், அன்றிரவே, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளருக்கு நடைபயணத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தோம். உடனடியாக பதில் தெரிவிக்காமல், ஜூலை 29 அன்று இரவு திருவண்ணாமலை காவல்துறை ஆய்வாளர் மூலம், ஆகஸ்டு 1 அன்று நடைபெற உள்ள தொடக்க நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து கடிதம் வழங்கப்பட்டது.
எனவே, நடைபயணத்திற்கு எழுத்துப்பூர்வமாக அனுமதி மறுக்கப்படாத நிலையில், நடைபயணத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது சட்டத்திற்கு புறம்பானதாகும். இவ்வாறு கைது செய்தவர்களை சிறையில் அடைத்ததும், நீதிமன்றததில் ஆஜர்படுத்தியுள்ளதும் சட்டத்திற்கு புறம்பானதாகும்.
எனவே, சட்டவிதிகளுக்கு புறம்பான இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது” என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வழக்கறிஞர்கள் அழுத்தமாக வாதிட்டார்கள்.
இவ்வாதங்களை நிராகரிக்க முடியாத நீதிபதி, நள்ளிரவு ஆகிவிட்ட சூழ்நிலையில், வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை திறந்த கோர்ட்டில் உத்தரவு பிறப்பிப்பதாகவும் அதற்கிடையில், கைதாகியுள்ளவர்கள் சார்பில் ஜாமீன் மனு சமர்ப்பிக்கப்பட்டால் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்வதாகவும் தெரிவித்தார்.
முகாந்திரம் இல்லை - நீதிபதி உத்தரவு
பதிவு செய்யப்பட்ட வழக்கே தவறானதாக இருக்கும்போது, நாங்கள் ஜாமீன் மனு சமர்ப்பிக்க விரும்பவில்லை எனவும், நீதிமன்றம் மத்திய சிறைக்கு எங்களை ரிமாண்ட செய்தால், சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும் கைதாகியுள்ளவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வழக்கை தள்ளுபடி செய்து எங்களை விடுதலை செய்வதே சட்டப்படி சரியானது என மீண்டும் வலியுறுத்தப்பட்டது. நள்ளிரவில் சுமார் இரண்டரை மணி நேர வாதத்திற்குப் பின்னர், எங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை தாக்கல் செய்த வழக்கில் முகாந்திரம் ஏதும் இல்லை என்பதால், கைதானவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
இதன் மூலம், கடந்த இரண்டு நாட்களாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து எட்டு வழிச்சாலையை எதிர்த்து நடைபயண இயக்கத்தை முன்னெடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.
மேலும், இச்சாலை அமைக்கும் பணியினை மத்திய-மாநில அரசுகள் கைவிடும் வரை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும் என்பதையும், இத்தகைய போராட்டங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் பேராதரவு அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.
நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஆதரவாகவும், தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்தும் அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், ஆர்.முத்தரசன், கி.வீரமணி, திருமாவளவன் ஆகியோருக்கும், இந்த வழக்கில் இரவு பகல் பாராமல் உழைத்த வழக்கறிஞர்களுக்கும். தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்த பல்வேறு அமைப்புகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: