வியாழன், 2 ஆகஸ்ட், 2018

வீட்டு வேலை: குறைந்த ஊதியம் கொடுத்தால் சிறை!

வீட்டு வேலை: குறைந்த ஊதியம் கொடுத்தால் சிறை! மின்னம்பலம் : தமிழகத்தில் முதல் முறையாக வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. அரசு நிர்ணயம் செய்த ஊதியத்தை விடக் குறைவாக கொடுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
வீட்டு வேலை செய்பவர்கள் குறித்து, கோவை தொழிலாளர் நலத் துறை துணை ஆணையர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், வீட்டு வேலை செய்பவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செவிலியர் தினமும் ஒரு மணி நேரம் பணிபுரிந்தால் அதற்காகக் குறைந்தது மாநகராட்சி பகுதிகளில் 39 ரூபாயும், நகராட்சி பகுதிகளில் 35 ரூபாயும் ஊதியமாகத் தர வேண்டும். வீட்டு வேலை செய்பவர்கள் 8 மணி நேரம் பணிபுரிவதற்கு முறையே 8,050 ரூபாயும், 7,246 ரூபாயும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரங்களைப் பொறுத்தவரை, சமையல் தோட்ட வேலை செய்பவர்களுக்கு மாத ஊதியமாகக் குறைந்தபட்சம் 7,823 ரூபாய் மற்றும் 7,041 ரூபாய் ஊதியமாகத் தர வேண்டும்.

துணி துவைப்பவர்கள், பாத்திரம் துலக்குபவர்களுக்கு மாநகராட்சிப் பகுதிகளில் 7,535 ரூபாயும், நகராட்சிப் பகுதிகளில் 6,836 ரூபாயும் ஊதியமாகத் தர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வீட்டிலேயே தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு இதைவிடக் கூடுதலாக 10% ஊதியம் அளிக்க வேண்டும்.
அரசு நிர்ணயித்த ஊதியத்தை விடக் குறைவான ஊதியம் வழங்கினால், அது மனித உரிமை மீறலாகும். இதன்படி, வேலை வழங்கும் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: