ஞாயிறு, 29 ஜூலை, 2018

மகராஷ்டிரா ..பேருந்து விபத்து 25 உடல்கள் மீட்பு ,, இன்னும் பலர் ... மலைப்பாதையில் ..

மராட்டியத்தில் மலைப்பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: இதுவரை 25 சடலங்கள் மீட்புதினத்தந்தி:  மராட்டிய மாநிலம் ராய்காட் அருகே மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மும்பை, மராட்டிய மாநிலம் ராய்காட் அருகே 30-க்கும் அதிகமானோர் பயணித்த சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேளாண்மை பல்கலை ஊழியர்கள் விடுமுறையையொட்டி புகழ்பெற்ற மகாபலேஷ்வர் சுற்றுலா தளத்திற்கு சென்று கொண்டிருக்கையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பஸ்சில் சென்ற பல்கலைக்கழக ஊழியர் பிரகாஷ் சாவந்த் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து அவர் கூறியதாவது:- ”அம்பேனாலி மலை ரோட்டில் பஸ் ஒரு திருப்பத்தில் திரும்பியது. அப்போது அங்கு கிடந்த சிறு, சிறு கற்கள் மற்றும் சகதியால் பஸ்சின் டயர் வழுக்கியது. அப்போது என்ன நடக்கிறது என நாங்கள் சுதாரிப்பதற்குள் நொடிப்பொழுதில் பஸ் பள்ளத்தாக்கில் பாய்ந்தது. அப்போது பள்ளத்தாக்கில் இருந்த மரங்களில் பஸ் சிக்கி நின்றது. நான் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பஸ்சில் இருந்து வெளியே குதித்து மரத்தை பற்றிக்கொண்டேன்.


பின்னர் ஒரு வழியாக மேலே ஏறி வந்தேன். அப்போது மேலே மக்கள் கூட்டமாக நின்று கொண்டு இருந்தார்கள். நான் அங்கு நின்ற ஒருவரிடம் செல்போனை வாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தேன். சுமார் 40 பேர் எங்களுடன் புகழ்பெற்ற மகாபலேஷ்வர் சுற்றுலா தளத்திற்கு பயணிக்க இருந்தனர். ஆனால் நாங்கள் சென்ற பஸ் சிறியதாக இருந்ததால், இட பற்றாக்குறை காரணமாக பலர் கடைசி நிமிடத்தில் பயணிப்பதை தவிர்த்துவிட்டனர்” எனக் கூறினார். 

பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி தொடர்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை 25 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: