ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

கலைஞர் உடல் நிலையில் திடீர் பின்னடைவு

கல்லீரல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு மஞ்சள் காமாலையும் வந்திருக்கிறது. இத்தனை வயதில் மஞ்சள் காமாலை என்பது ஆபத்தானது. தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்’’ என்கிறார்கள் காவேரி....
மின்னம்பலம் : திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் இன்று
(ஆகஸ்ட் 5) காலை முதல் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்குக் கல்லீரல் தொடர்பான பிரச்சினைக்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருணாநிதி கடந்த எட்டு நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதை அடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்குத் தொடர் சிகிச்சை அளித்ததன் மூலம் அவரது ரத்த அழுத்தம் சீரான நிலைமைக்கு வந்ததாக காவேரி மருத்துவமனை தெரிவித்தது.
ரத்த அழுத்தம் இயல்புக்கு வந்தாலும், முதுமைக்கே உரிய பிரச்சினைகள் உள்ளிட்டவற்றால் கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிக்கையும் வெளியிட்டனர்.

பிறகு கருணாநிதி நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானதும் தொண்டர்களும் நிர்வாகிகளும் சற்றே நிம்மதியானார்கள். படுத்த படுக்கையில் இருந்து எழுந்து உட்காரும் அளவுக்கு வந்திருக்கிறாரே என்ற உற்சாகம் அவர்களுக்குள் பரவியது. சளித் தொல்லை காரணமாகவே கருணாநிதியை மருத்துவர்கள் உட்கார வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
பல தேசிய தலைவர்களும் காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்துச் சென்ற நிலையில் இன்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிற்பகலுக்கு மேல் காவேரி மருத்துவமனைக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் காவேரி மருத்துவர்கள் திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம், “தொடர்ந்து பலரும் வந்து பார்த்துக் கொண்டிருந்தால் அவருக்குத் தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே சிகிச்சை பெறும் அறையில் சென்று சந்திப்பதைத் தவிர்க்கலாம்’’ என்று அறிவுரை கூறினர். ஸ்டாலினும் இதுபற்றி செல்வத்திடம் சொல்ல, மருத்துவர்கள் தவிர யாரும் சிகிச்சை பெறும் அறைக்குச் செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தனர். ஸ்டாலின் கூட கடந்த இரண்டு நாட்களாக கருணாநிதி சிகிச்சை பெறும் அறைக்குள் செல்லவில்லை.
இப்படி தீவிர கண்காணிப்புக்கு இடையில் கல்லீரல் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டதை அறிந்த காவேரி மருத்துவர்கள் கல்லீரல் சிகிச்சை நிபுணரான டாக்டர் முகமது ரேலாவை வரவழைத்தனர். ரேலா, தற்போது சென்னை குளோபல் மருத்துவமனையில் கல்லீரல் நோய், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் தலைவராக இருக்கிறார். அவர் கருணாநிதிக்கு கல்லீரல் தொடர்பான சிகிச்சை அளித்து வருகிறார்.
இந்த நிலையில்தான், இன்று காலை முதல் கருணாநிதியின் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி வட்டாரங்களில் கவலையோடு பேசுகிறார்கள்.
“சில நாட்கள் சீராக இருந்த ரத்த அழுத்தம் மீண்டும் குறைந்துகொண்டிருக்கிறது. அதோடு கல்லீரல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு மஞ்சள் காமாலையும் வந்திருக்கிறது. இத்தனை வயதில் மஞ்சள் காமாலை என்பது ஆபத்தானது. தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்’’ என்கிறார்கள் காவேரி வட்டாரத்தில்.
இதனால் குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் கவலையில் உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை: