சனி, 16 ஜூன், 2018

டிடிவி தினகரன் அணியில் புதிய குழப்பம்? - சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச்செல்வன் முடிவு

THE HINDU TAMIL : சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச்செல்வன் முடிவெடுத்துள்ள நிலையில், மற்ற எம்எல்ஏக்கள் சட்டப்படி போராடுவார்கள் என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் சபாநாயகர் உத்தரவு செல்லாது எனவும் உத்தரவிட்டார். இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தீர்ப்புக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வராவிட்டால் நான் மட்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மாட்டேன் என தெரிவித்து இருந்தார். மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், சபாநாயகர் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தான் மட்டும் வாபஸ் பெற போவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தங்க தமிழ்ச்செல்வன் மட்டும் தான் வழக்கை திரும்ப பெறப் போகிறார். மற்ற எம்எல்ஏக்கள் வாபஸ் பெறவில்லை. வாபஸ் பெற்று விடலாம் என தங்க தமிழ்ச்செல்வன் எல்லோரிடமும் கோரிக்கை விடுத்தார். ஆனால், நாங்கள் சட்டப்படி போராடுவோம் என மற்ற எம்எல்ஏக்கள் தெரிவித்து விட்டனர்.
வழக்கு மூன்றாவது அமர்வுக்கு வரும்போது தன்னுடைய மனுவை மட்டும் தங்க தமிழ்ச்செல்வன் திரும்ப பெற்றுக்கொண்டு, இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றிபெறுவதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். நீதித்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை உள்ளது என வாக்கெடுப்பு நடத்தினால் உண்மை தெரியவரும்” என டிடிவி தினகரன் கூறினார்.
இதனிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் விடுதலையை குடியரசு தலைவர் நிராகரித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், “பேரறிவாளன் தாயின் மனம் புண்பட்டுள்ளது. ஏழு பேரும் 28 ஆண்டுகள் சிறையில் உள்ளனர். ராஜீவ் காந்தி குடும்பத்தினரும் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை மன்னித்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
குடியரசு தலைவர் தன் முடிவை மறுபரிசீலனை செய்து கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு ஆட்சியில் இருந்தால் போதும் என்று நினைக்கிறது. இது மக்கள் விரோத அரசு. அவர்கள் நலன் மற்றும் குடும்ப நலன் தான் முக்கியம். தமிழக அரசு மக்களை ஏமாற்றுகின்றது” என டிடிவி தினகரன் கூறினார்

கருத்துகள் இல்லை: