திங்கள், 11 ஜூன், 2018

தமிழ்நாட்டில் ஒரு பழங்குடி மாணவருக்குக்கூட எம்பிபிஎஸ் கிடைக்கவில்லை! ..நீட் தீட்டு ...

ஒரு பழங்குடி மாணவருக்குக்கூட எம்பிபிஎஸ் கிடைக்கவில்லை!மின்னம்பலம்: தமிழகத்தில் ஒரு பழங்குடி மாணவருக்குக் கூட எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை என ஆங்கில நாளிதழின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
நீட்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தின் அரசு பள்ளியிலிருந்தோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்தோ ஒரு பழங்குடி இன மாணவருக்குக்கூட எம்பிபிஎஸ் இடம் கிடைக்கவில்லை. அரசு பள்ளியிலிருந்தோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்தோ தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 9 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அல்லது அரசு ஒதுக்கீடு இடங்கள் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

நீட் தேர்வானது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டதால் கிராமப்புற மாணவர்களால் இதில் தேர்ச்சி பெற முடியவில்லை. நீட் எழுதுவதற்குத் தனியான பயிற்சி பெற வேண்டும். அதற்கான பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுமளவிற்கு கிராமப்புற மாணவர்களிடம் பொருளாதார வசதியோ போக்குவரத்து வசதியோ இல்லை.
தமிழக அரசு வெளியிட்டுள்ள விவரங்களின்படி, அரசு பள்ளிகளிலிருந்தும்,அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்தும் 1344 மாணவர்கள், நீட்டில் குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்களை விட அதிகம் பெற்றுள்ளனர். ஆனால் இதிலும் 10 மாணவர்கள்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதியாக உள்ள 300 மதிப்பெண்களையும் 42 பேர் 200 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர். 200 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 42 மாணவர்களில் 9 பேர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள். இதில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான நடப்பு ஆண்டுக்கான கட்ஆப் மதிப்பெண் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
2017ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண் 210. இதன்படி பார்க்கும்போது இந்த 9 மாணவர்களுக்கும் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கவும் அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசுக்கான ஒதுக்கீடு இடங்கள் கிடைக்கவும் வாய்ப்புண்டு.
நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பெற்றிருந்தாலும் இந்த மாணவர்கள் சமூகரீதியாகப் பின்தங்கியிருப்பதாலும் வறுமையான சூழலில் இருப்பதாலும் தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலையே உள்ளது.
அரசு பள்ளியில் அல்லது அரசு உதவி பெற்ற பள்ளியில் படித்த பழங்குடி மாணவர் ஒருவர்கூட 200க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கவில்லை.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்கள் குறித்து சாதி வாரியாக இதுவரை தகவல்கள் தயாரிக்கப்படவில்லை என அரசு தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: