வெள்ளி, 9 மார்ச், 2018

கருணைக் கொலை செய்யலாம்: தீராநோய் உள்ளவர்கள் மரணிக்க அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

tamiltheindu : இந்த உலகில் ஒரு மனிதன் கண்ணியமாக வாழ உரிமை இருக்கும் அளவுக்கு கண்ணியமாக மரணிக்கவும் உரிமை உண்டு, தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் இருக்கும் நோயாளிகளை விதிகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கியது மிகப்பெரிய மைல்கல் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. ‘காமன்காஸ்’ எனும் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்து இருந்தது. அதில் குறிப்பிடுகையில், ‘‘தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் படுத்தபடுக்கையாக இருக்கும் நோயாளிகள், கோமா நிலையில் இருப்பவர்களை விதிகளுக்கு உட்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் செயற்கை சுவாசத்தை அகற்றி கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரி இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி,ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சிந்திரசூட், அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் 4 நீதிபதிகளும் நான்கு விதமான கருத்துக்களைத் தெரிவித்தாலும், அனைவரும் கருணைக்கொலை என்ற விஷயத்துக்கு அனுமதி அளித்தனர்.
தீராத நோய் உள்ளவர்கள் கண்ணியத்துடன் உயிர் துறக்க அனுமதிக்கலாம் என்ற விஷத்தில் நீதிபதிகள் அனைவரும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.
அவர்கள் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
‘‘இந்த உலகில் ஒருமனிதன் கண்ணியமாக வாழும் இருக்கும் உரிமை, அவர் உயிர்துறப்பதிலும் இருக்கிறது. தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் சிகிச்சையால் குணமடையாத நிலையில் இருப்பவர்கள், செயற்கை சுவாசத்தால், தீவிர உயிர்காக்கும் கருவியால் உயிர்வாழ்பவர்கள், கோமா நிலையில் இருபவர்கள், உடல் இயக்கம் இல்லாமல் இருப்பவர்கள் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி உயிர் துறக்க அனுமதிக்கலாம்.
அதாவது, சம்பந்தப்பட்ட நோயாளி இனிமேல் உடல்நிலையில் மேம்பட்டு செயல்பட முடியாத பட்சத்தில், அந்த நோயாளியை விதிகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்யலாம். இந்த உலகில் உயிர்வாழ விருப்பம் இல்லை, இருக்கிறது என்பதை அந்த நோயாளியால் கூற முடியாத நிலையில் இருக்கும் போது, கருணைக் கொலை செய்யும் விஷயத்தை நோயாளியின் நெருங்கிய நண்பர், ரத்த உறவுகள் ஆகியோர் நோயாளி மரணிப்பது குறித்து முடிவு எடுக்கலாம்.
இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், எப்படி செயல்படவேண்டும் என்ற விதிகள் போன்றவை வகுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரை சட்டம்  இல்லை. எந்த சட்டம் கொண்டுவரும்வரை  எங்கள் பரிந்துரைகள் செயல்பாட்டில் இருக்கும்’’ என்று தீர்ப்பில் தெரிவித்தனர்.
இதற்கிடையே கடந்த 2011ம் ஆண்டு இதேபோன்ற ஒரு வழக்கில் நீதிபதிகள் கருணைக் கொலை செய்ய அனுமதித்துள்ளனர். அருணா ஷான்பாக் என்ற நோயாளி செயலற்ற நிலைக்கு சென்று, தீவிர உயிர்காக்கும் கருவிமூலம் உயிர்வாழ்ந்து வந்ததால், அவரை உயிர் துறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: