புதன், 7 மார்ச், 2018

உத்தர பிரதேசத்தில் அண்ணல் அம்பேத்கார் சிலை உடைப்பு.. ஜாதி மத வெறியர்கள் கைவரிசை


திரிபுராவில் தொடங்கிய சிலை உடைப்பு கலாசாரம், உ.பி.யில் அம்பேத்கார் சிலை உடைப்புதினத்தந்தி :திரிபுராவில் பா.ஜனதாவினரால் தொடங்கிய சிலை உடைப்பு கலாசாரம் பிற மாநிலங்களிலும் பரவி வருகிறது. லக்னோ, திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா எதிர்பார்த்த இடங்களைவிட அதிகமான இடங்களை கைப்பற்றி ஆட்சியை தனதாக்கியது. சனிக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் அன்று மாலையே வன்முறை சம்பவங்கள் தொடங்கியது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக அக்கட்சியின் சார்பில் போலீசில் புகார் தெரிவித்தது. இதற்கிடையே திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் போது வைக்கப்பட்ட லெனின் சிலைகளை பா.ஜனதாவினர் உடைத்தனர். பிலோனியாவில் லெனின் சிலை புல்டோடசர் மூலம் அகற்றப்பட்டது.


லெனின் சிலை அகற்றப்படும் பொழுது பாரத் மாதா கீ ஜெய் எனவும் பாரதீய ஜனதா தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதாவினர் கருத்துக்களை பதிவுசெய்த நிலையில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திரிபுராவில் நடந்த வன்முறை சம்பவங்கள் மற்றும் சிலை உடைப்பு சம்பவங்களுக்கு கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தன. 

எச்.ராஜா

இந்நிலையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பதிவில், ‘லெனின் யார், அவருக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை (பெரியார்)’ என்று கூறியுள்ளார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் அவர் தனது கருத்தை முகநூலில் இருந்து நீக்கிவிட்டார். இந்த நிலையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.  

போராட்டம்

திரிபுராவில், புரட்சியாளர் லெனின் சிலை அகற்றப்பட்டது. அந்தச் சிலையை அகற்றியதாக கூறப்படும் பா.ஜனதா கட்சியை கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் எனக் கூறிய பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

பெரியார் சிலை உடைப்பு

இந்நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று இரவு பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பெரியார் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வன்முறையை தூண்டும் விதமாக பேசிய எச். ராஜாவிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது, நீதிமன்றங்களிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. 

கொல்கத்தாவில் சிலை உடைப்பு

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் ஏற்கனவே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொல்கத்தாவில் ஜன்சங்கத்தை நிறுவிய முன்னாள் அமைச்சர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்திவிட்டு சென்றனர். அவரது தலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்துவரும் போலீசார் 6 பேரை கைது செய்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி - அமித்ஷா  
திரிபுராவில் லெனின் சிலைகள், தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு குறித்து மோடி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மிகுந்த அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

மாநில அரசுகள் சிலை உடைப்பு சம்பவங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 சிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி அதிருப்தியை பதிவு செய்து உள்ளார். 
 சிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து மிகுந்த வேதனை தெரிவித்த பிரதமர் மோடி, இதுபோன்ற சம்பவங்கள் செய்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ராஜ்நாத் சிங்குக்கு உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தலைவர்கள் சிலைகள் மீது தாக்குதல் நடத்தும் பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜகவினருக்கு அமித் ஷா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

எச்.ராஜா வருத்தம்

பல்வேறு நிலைகளில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய பதிவுக்கு பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வருத்தம் தெரிவித்து தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் பதிவிட்டு உள்ளார்.

 எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-  “நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.  கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

பரவி வரும் சிலை உடைப்பு கலாசாரம் 

திரிபுராவில் பாரதீய ஜனதாவினரால் தொடங்கப்பட்ட சிலை உடைப்பு கலாசாரம் நாடு முழுவதும் பரவி வருகிறது. 

அம்பேத்கார் சிலை உடைப்பு

சிலைகள் உடைப்பு சம்பவத்தின் மற்றொரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டு உள்ளது.

மீரட்டில் அம்பேத்கார் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அங்கு போராட்டம் வெடித்தது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது, புதிய சிலை அங்கு அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர். இதனையடுத்து போராட்டம் தணிந்து உள்ளது.

கருத்துகள் இல்லை: