வியாழன், 8 மார்ச், 2018

இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பலி - காவல் ஆய்வாளர் கைது

இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பலி - காவல் ஆய்வாளர் கைது
மாலைமலர் :திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் தம்பதி சென்ற இருசக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு காரணமான காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இன்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு தம்பதியினர் வந்தனர். அவர்கள் ஹெல்மெட் போடாததால் பணியில் இருந்த காமராஜ் என்ற  போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் அந்த தம்பதியினர் நிற்காமல் சென்றனர்.< இதையடுத்து, தன்னை கடந்து சென்ற இருசக்கர வாகனத்தை காமராஜ் எட்டி உதைத்துள்ளார். இதில் வாகனம் சாய்ந்ததில் கர்ப்பிணி பெண் உஷா சாலையில் விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த வேன் உஷா மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது கணவருக்கு படுகாயம் ஏற்பட்டது.


இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கர்ப்பிணி மரணத்துக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் காவல் துணை ஆணையர் சக்தி கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், கர்ப்பிணி சாவுக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: