வெள்ளி, 9 மார்ச், 2018

அய்யாக்கண்ணு மீது பாஜக நிர்வாகி தாக்குதல்!

அய்யாக்கண்ணு மீது பாஜக நிர்வாகி தாக்குதல்!மின்னம்பலம் :தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை நேற்று திருச்செந்தூர் கோயிலில் வைத்து பாஜக பெண் நிர்வாகி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு கடந்த 1ஆம் தேதி மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைக்கும் பொருட்டு, மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தடை செய்யக் கோரி விழிப்புணர்வு நடைப்பயணத்தைத் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தின் ஓர் அங்கமாக நேற்று (மார்ச் 8) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் செய்து விட்டு, மரபணு மாற்று விதைகளைப் பாரத பிரதமர் வழங்கக் கூடாது; அவருக்குக் கடவுள் நல்ல எண்ணத்தைக் கொடுக்க வேண்டும் என்று கோரி துண்டு பிரசுரங்களைக் கோயில் வளாகத்துக்குள் விநியோகித்து வந்தார். அப்போது அங்கு வந்த பாஜகவின் தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் அவரைத் தடுத்து அவரது கன்னத்தில் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண்ணுக்கும் விவசாயிகள் சங்க நிர்வாகிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து மின்னம்பலம் சார்பாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு கேட்டபோது, “மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை மோடி கொடுக்க கூடாது; அவருக்குக் கடவுள் நல்ல எண்ணத்தைக் கொடுக்க வேண்டும் என்று துண்டு பிரசுரங்களை வழங்கி வந்தோம். இது பிடிக்காத அந்த பாஜக பெண் நிர்வாகி என்னைத் தாக்கினார். நான் பதில் தாக்குதல் நடத்தியிருந்தால் பிரச்சினை பெரிதாகியிருக்கும். ஆனால், அது என் நோக்கமல்ல. எங்களது 100 நாள்கள் நடைப்பயணம் பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையிடம் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. தற்போது அங்கிருந்து கிளம்பி எங்கள் நடைப்பயணத்தைத் தொடர்ந்து வருகிறோம்” என்றார்.

கருத்துகள் இல்லை: