வியாழன், 8 மார்ச், 2018

கனிமொழி - சோனியா திடீர் சந்திப்பு!

கனிமொழி - சோனியா திடீர் சந்திப்பு!மின்னம்பலம் : இந்திய அளவில் காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அணியை அமைக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்த நிலையில்... டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை நேற்று (மார்ச் 7) அவரது இல்லத்தில் நேரில் சந்தித்திருக்கிறார் திமுகவின் மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பி.
மகளிர் தினத்தை ஒட்டிய மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது என்று கனிமொழி தரப்பில் சொல்லப்பட்டாலும் இதில் அரசியலும் இருக்கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான சக்திகளை காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, வரும் மார்ச் 13ஆம் தேதி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த வகையில் திமுகவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில்தான் மம்தா பானர்ஜி மூன்றாவது அணி அமைக்க மு.க.ஸ்டாலினிடம் ஆலோசித்திருக்கிறார்.
ஏற்கெனவே திமுக மகளிர் அணி சார்பாக நடத்தப்பட்ட மகளிர் அணி விழாவுக்கு ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.ரேணுகா சௌத்ரியைச் சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தார் கனிமொழி. இந்த நிலையில் நேற்று சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
“கருணாநிதி - சோனியா ஆகியோருக்கு இடையே இருந்த புரிந்துணர்வு ஸ்டாலின் - ராகுல் காந்தி இடையே இல்லை என்பது உண்மைதான். அதேநேரம் தமிழகத்தில் காங்கிரஸோடு கூட்டணி வேண்டாம் என்று சில திமுக நிர்வாகிகளும் தலைமையிடம் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுகவுக்குப் பதிலாக தினகரன் ஆரம்பிக்கும் தனிக்கட்சியோடு கூட்டணி சேரலாமென்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் சோனியாவைச் சந்தித்திருக்கிறார் கனிமொழி. காங்கிரஸ், பாஜக அல்லாத அணி என்று அமைந்தால் அது பாஜகவுக்கே சாதகம் ஆகும் என்பதை கனிமொழியிடம் தெரிவித்த சோனியா காந்தி, பாஜகவைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் காங்கிரஸ் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்த வலுவான அணியால் மட்டுமே முடியும் என்றும் குறிப்பிட்டாராம். இந்தச் செய்தியை செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கனிமொழி தெரிவித்திருக்கிறார்’’ என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்

கருத்துகள் இல்லை: