புதன், 7 மார்ச், 2018

BBC :இலங்கை: இனக்கலவரங்களின் பின்னணி


இலங்கை இனக்கலவரங்களுக்கு பழகிப்போன நாடுதான். இங்கு தமிழருக்கு எதிராக கடந்த காலங்களில் நடந்த வன்செயல்கள், அதனைத் தொடர்ந்த கலவரங்கள் பெரும்பாலும் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்ட, பலரும் அறிந்த விடயங்கள்.e>ஆனால், இலங்கையில் நடந்த முதலாவது வன்செயல் அல்லது கலவரம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது பலரும் அறியாத விடயம்.
முதலாவது இனக்கலவரம்t; 1915-இல்தான் இலங்கையில் அண்மைய சரித்திரம் அறிந்த முதலாவது இனக்கலவரம் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்தது.
அன்றைய அந்த முதலாவது கலவரத்தின்போது சிங்களவர்களின் கும்பல் ஒன்று கண்டியில்தான் பள்ளிவாசலை தாக்கி, முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களை எரித்துள்ளது.
அப்போது இலங்கை ஆங்கிலேயரின் ஆட்சியில் இருந்தது.
இப்போதும் மீண்டும் கண்டியில் மீண்டும் அப்படியான கலவரம் ஒன்று நடந்தேறியுள்ளது. அதுதான் இப்போதுள்ள ஒற்றுமை.

சுதந்திரத்திற்கு பின் தமிழ்-சிங்கள கலவரம்சுதந்திரத்துக்கு பின்னர்தான் இலங்கையில் தமிழ்- சிங்கள கலவரங்கள் நடக்கத் தொடங்கின.
1958, 1977 மற்றும் 1983 கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராக மிக பெரிதாக திட்டமிட்டு நடத்தப்பட்டவையாக கருதப்படுகின்றன.
1983இல் தமிழ் இளைஞர்களும் ஆயுதங்களை கையில் எடுக்க நிலைமை ஓர் உள்நாட்டுப் போராகவே மாறிவிட்டது.
இந்தக் காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் சிங்களவர்கள் ஈடுபட்டது குறைவு.
ஆனால், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டமை உட்பட, கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் இன மோதல்கள் அப்போது நடந்திருக்கின்றன.
உள்நாட்டுப் போருக்கு பின் முஸ்லிம்கள் மீது தாக்குதல்
ஆனால், உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னரே மீண்டும் முஸ்லிம்கள் மீது ஆங்காங்கு தாக்குதல்கள் நடந்துள்ளன.முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவனல்ல,காலி மற்றும் களுத்துறை பகுதிகளில் அப்படியான வன்செயல்கள் அவ்வப்போது நடந்து வந்திருக்கின்றன.
பொதுவாக, முஸ்லிம்களின் வணிக முயற்சிகளின் வெற்றி, அரசியலில் அவர்கள் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக எண்ணிக்கை அடிப்படையில் உருவாகியிருப்பது, அவர்கள் மீதான தாக்குதல்களுக்கான நேரடிக் காரணங்களாக முஸ்லிம் மக்களாலும் அரசியல்வாதிகளாலும் பார்க்கப்படுகின்றன.
1983 கலவரத்தின் போதும், அதற்கு பின்னரான உள்நாட்டுப்போரின் போது முஸ்லிம்கள் பெரும்பான்மையினத்தவரோடு இணைந்து தமிழருக்கு எதிராக செயற்பட்டதாக தமிழ் தரப்பினர் பார்க்கிறார்கள்.
ஆனால், உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம்கள் மீதே இப்படியான தாக்குதல்களும், இன ரீதியான வெறுப்பு பிரசாரங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.குறிப்பாக, இங்குள்ள இனமுறுகல்களை தற்போதைக்கு இரு வகையாக பார்க்கலாம்.
ஒன்று, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சிங்கள- முஸ்லிம் முரணாகவும், இரண்டு, கிழக்கு மாகாணத்தில் காணி போன்ற பிரச்சனைகள் காரணமாக முஸ்லிம் - தமிழ் முரணாகவும் அவற்றை பார்க்க முடியும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழரோடு ஒப்பிடுகையில் முஸிம்கள் அரசியல் ரீதியாக ஓரளவு அதிகாரத்தை தம்வசம் வைத்திருப்பதால், அவற்றை பிரயோகித்து தமது நிலங்களை அவர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற் குற்றச்சாட்டு தமிழர் தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்றது.
ஆனால், அம்பாறை நகரில் கடந்த வாரம் உணவில் முஸ்லிம் கடைக்காரர்கள் "ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்தை" கலப்பதாக குற்றஞ்சாட்டி தாக்கிய சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பான்மை சிங்கள இனத்தை சேர்ந்தவர்களாவர்.
இந்தச் சம்பவந்தான் அண்மைய வன்முறை செயல்களில் முதலில் நடந்ததாகும்.
நடந்தது அதிகார துஷ்பிரயோகமா?
அன்றைய தினம் திட்டமிட்ட வகையில் பேருந்தில் வந்த கூட்டம் தமது பள்ளிவாசல் ஒன்று உட்பட பல உடமைகளை தாக்கி சேதமாக்கியதாக முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
ஆனால், அன்றைய தினத்தில் அம்பாறை மாவட்டத்தில் அட்டைப்பள்ளம் என்ற இடத்தில் இந்துக்களின் மயானத்தை முஸ்லிம் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறி, அதனை தடுக்கச் சென்ற தம்மை முஸ்லிம் போலிஸார் மற்றும் அதிகாரிகள் தடுத்து வைத்ததாக தமிழர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தமது காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதன் ஒரு கட்டமாக அவர்கள் இதனை பார்க்கிறார்கள்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 23 தமிழர்கள் (பெண்கள் உடபட) போலீஸில் தடுத்து வைக்கப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இவை பெரிதாக ஊடகங்களில் பேசப்படவில்லை. அம்பாறை நகரில் முஸ்லிம்களின் உடமைகள் சிங்களவரால் தாக்கப்பட்டமையே பெரிதாக பேசப்பட்டது.
இதனையடுத்து, இரு தினங்களுக்கு முன்னதாக கண்டி நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் மீண்டும் அவர்கள் மீது பெரும்பான்மையின சிங்களவர்களின் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
ஒரு சிறிய வாகன விபத்துச் சம்பவத்தை அடுத்து ஒரு சிங்களை நபரை முஸ்லிம்கள் சிலர் தாக்கவே அவர் சில தினங்களின் பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.
அதனையடுத்தே அங்கு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வந்த சிங்கள கூட்டம் ஒன்றால் முஸ்லிம்களின் சொத்துக்கள், வழிபாட்டு இடங்கள் தாக்கப்பட்டுள்ளன.
போலீஸார் தலையிட்டும் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு வேளையிலும் தாம் தாக்கப்பட்டதாக முஸ்லிம்கள் கூறுகின்றனர்.
மியான்மரை போன்று தம்மீது தாக்குதல் நடத்த வந்த கூட்டத்தில் பௌத்த பிக்குகளும் காணப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். படங்களும் அதனை உறுதி செய்கின்றன.
உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சில அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவசர சட்டத்திற்கு என்ன தேவை?
அது மட்டுமன்றி முன்னதாக நடந்த தாக்குதலில் சிங்கள நபர் மரணமானது குறித்தும் போலீஸார் சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும், அவர்கள் அப்படி செய்திருந்தால் இந்த வன்செயல்கள் வெடித்திருக்காது என்றும் பொதுபல சேன என்ற கடும்போக்கு சிங்கள அமைப்பு கூறியுள்ளது.ஆகவே, போலீஸாருக்கும் மேலாக இராணுவத்தை அழைக்கும் தேவை அரசாங்கத்துக்கு வந்திருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் வந்ததே தற்போதைய நல்லாட்சி அரசு.
இதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம்களின் ஆதரவு அதிகம்.
அண்மைய தேர்தலில் அந்தக் கட்சி பின்னடைவை சந்தித்ததை அடுத்து நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது நாட்டின் சட்டம், ஒழுக்குக்கான அமைச்சு பிரதமரின் பொறுப்பில் விட்டு வைக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே அவர் பொறுபேற்ற உடனேயே நடந்திருக்கும் இரு இன மோதல் சம்பவங்கள் அவருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.
சட்டம், ஒழுங்கு அமைச்சரின் செயல் திறனின்மையே அமைதியின்மைக்கு காரணம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவிந் தலைவரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இப்படியான நிலைமைகளே எப்படியாவது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கடினமான நடவடிக்கையை எடுக்க அரசாங்கத்தை தூண்டியுள்ளன.
அதன் விளைவாகவே இந்த அவசர நிலை பிரகடனம் உடனடியாக வந்துள்ளது.
இந்த அவசர நிலைகூட முதற்கட்டமாக அதிகபட்சம் 10 நாட்களுக்கே அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை செயல்கள் ஒருபுறம் என்றால் இன்று முஸ்லிம்களும் வேறு இடங்களில் அமைதியின்மைக்கு காரணமாகியுள்ளனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தாம் அதிகமாக வாழும் இடங்களில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவற்றில் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இரு பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்றில் ஒரு தமிழ் இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். அங்கு இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, உடனடியாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இப்படியான வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டிய பொறுப்பில் அரசாங்கம் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: