வியாழன், 8 மார்ச், 2018

கர்நாடகாவின் தனிக்கொடி உத்தியோக பூர்வமாக அறிவிப்பு

கர்நாடகாவுக்குத் தனிக் கொடி அறிமுகம்!
மின்னம்பலம் :கர்நாடகா மாநிலத்துக்கான தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா இன்று (மார்ச் 8) அறிமுகம் செய்தார்.
கர்நாடகாவுக்கெனத் தனிக் கொடி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்துவந்தது. இதற்கிடையே, கர்நாடகாவுக்கான தனிக் கொடி உருவாக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டார். கொடியை வடிவமைப்பதற்காகக் கன்னட அறிஞர் ஹம்பா நாகராஜய்யா தலைமையில் 9 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகாவுக்கான தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா இன்று அறிமுகம் செய்தார்.
இந்தியக் கொடியைப் போன்று இந்தக் கொடியும் மூன்று வண்ணங்களைக் கொண்டுள்ளது. மேலே உள்ள மஞ்சள் மன்னிப்பையும், நடுவில் உள்ள வெள்ளை அமைதியையும், கீழே உள்ள சிகப்பு வீரத்தையும் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவில் கர்நாடகாவின் இலச்சினையும் இடம்பெற்றுள்ளது.
அம்மாநில இலச்சினையின் கீழ் ’சத்யமேவ ஜெயதே’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். எனினும் இந்த வாசகம் கொடியில் இடம்பெறாது என சித்தராமையா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது தொடர்பாக, நீண்ட நாள் கனவு நினைவாகியுள்ளதாக சித்தராமையா பெருமையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனிக் கொடி மட்டுமல்லாமல் கர்நாடகாவில் கன்னடத்துக்கே முக்கியத்துவம் என்ற கோஷமும் சமீப காலமாக வலுப்பெற்றுவருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இடம்பெற்றிருந்த இந்தி வாசகங்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதனைக் கருத்தில் கொண்டே இந்தக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரே தேசம் ஒரே கொடி என்ற முழக்கத்துடன் பாஜக உள்ள நிலையில், அதற்கு எதிராக தற்போது கர்நாடகா தனது கொடியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில், இந்தக் கொடிக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தால் அது கன்னடர்களிடையே எதிர்ப்பை உண்டாக்குவதுடன் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: