வியாழன், 8 மார்ச், 2018

கலைஞருக்கு சிறை உடை அணிவித்து மகிழ்ந்த சாடிஸ்ட் எம்ஜியாரின் .. ரஜினி வாக்குறுதி

savukkuonline.com :திருச்செந்தூரில் முருகனின் தங்க
வேல் காணாமல் போய் விட்டது என்று எதிர்க்கட்சியில் இருந்த கலைஞர்  பிரச்சினை எழுப்பினார். அந்த விவகாரத்தை விசாரிக்க, சுப்ரமணியப் பிள்ளை என்ற அறநிலையத் துறை அதிகாரியை நியமித்தார் எம்ஜிஆர்.  அந்த அதிகாரி விசாரித்துக் கொண்டிருந்தபோதே, திருநெல்வேலி அரசினர் விருந்தினர் மாளிகையில் 26 நவம்பர் 1980 அன்று தூக்கில் தொங்கினார்.
அதை விசாரிக்க நீதிபதி ஜேசிஆர் பால் என்பவர் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.   அந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை அரசுக்கு எதிராக இருந்ததால், அந்த அறிக்கையை வாங்கிய எம்ஜிஆர் அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யவேயில்லை.
திடீரென்று ஒரு நாள் பத்திரிக்கையாளர்களை அழைத்த கலைஞர் கருணாநிதி, நீதிபதி பால் கமிஷனின் அறிக்கையின் நகலை வெளியிட்டார்.  எம்ஜிஆர் அதிர்ந்து போனார்.    பின்னர் ஒரு நாள் அப்போது ஐஜியாக இருந்த கி.ராதாகிருஷ்ணன் என்ற கிராகியை அழைத்து, கருணாநிதியை கைது பண்ணுங்கள் என்று உத்தரவிடுகிறார்.   கிராகி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், கலவரம் உருவாகும் என்று கூறுகிறார்.

உடனே எம்ஜிஆர், கலைஞரை கைது செய்தாயிற்று.  நீங்கள் சட்டம் ஒழுங்கை மட்டும் பாருங்கள் என்று அனுப்பி விடுகிறார்.   சிறைக்கு சென்ற கருணாநிதியை பார்க்க வந்த, திமுக மூத்த தலைவர்கள், தமிழகம் பற்றி எரிகிறது.   எங்கே பார்த்தாலும் கலவரம்.  பேருந்துகள் ஓடவில்லை என்று அள்ளி விடுகின்றனர்.   கலைஞர் கருணாநிதியும் குஷியாக இருக்கிறார்.
அப்போதெல்லாம் விசாரணை கைதிகளுக்கும் சிறை யூனிபார்ம்தான்.   அதுவும் கட்டம் போட்ட அரைக்கால் டவுசர்.  எம்ஜிஆருக்கு கருணாநிதியை சிறை உடையில் பார்க்க வேண்டும் என்று ஆசை.

திடீரென்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அழைக்கப்படுகின்றனர். பத்திரிக்கையாளர்கள் சிறைக்கு வெளியேயே நிறுத்தப்பட்டு புகைப்படக் கலைஞர்கள் மட்டும் உள்ளே அனுப்பப்படுகின்றனர்.    புகைப்படக் கலைஞர்களைக் கண்ட கலைஞரும்  மிகுந்த மகிழ்ச்சியோடு, பல விதமாக போஸ் கொடுக்கிறார்.
புகைப்படக் கலைஞர்கள் வெளியே வந்ததும் சிறை வாயிலின் இரு புறமும் இருந்த உளவுத் துறை அதிகாரிகள், ஒவ்வொருவரின் கேமராவையும் பிடுங்கி, பிலிம் ரோலை கழற்றி விட்டு, பாக்கெட்டில் ஒவ்வொருவருக்கும் 100 ரூபாயை வைத்து அனுப்பி விடுகின்றனர்.
அந்த புகைப்படங்கள் அனைத்தையும், பெரிய சைஸில் டெவலப் செய்து, இரண்டு மணி நேரம் அனைத்து புகைப்படங்களையும் பார்த்த பின்னர், அந்த புகைப்படங்களை அழிக்கச் சொன்னார் எம்ஜிஆர்.  இந்த சம்பவம் ஒரு சிறு உதாரணமே.  இது போல பல சம்பவங்கள் உள்ளன.
குறிப்பாக தமிழகம் முழுக்க சாராய ஆலைகள் உருவாவதற்கு முக்கிய காரணமே எம்ஜிஆர்தான்.
சாராய ஆலை லைசென்ஸ் வாங்குவதற்கு, எம்ஜிஆரின் சகோதரர் சக்ரபாணிக்கும், அவர் மகன்கள் எம்ஜிசி.சுகுமாறன் மற்றும் எம்ஜிசி பாலன் ஆகியோருக்கும் 10.75 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் என்று புகார் எழுந்தது.   அதற்காக நீதிபதி ராமபிரசாத ராவ் தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த விசாரணையை அமுக்கினார் எம்ஜிஆர்.
எம்ஜிஆரின் கோமாளித்தனம் மற்றும் தமிழகத்தை சீரழித்தது தொடர்பாக தனியாக கட்டுரையே எழுதலாம்.  அந்த அளவு ஒரு மோசமான கோமாளிதான் எம்ஜிஆர்.   அந்த எம்ஜிஆரை வானளாவ புகழ்வதன் மூலம், எம்ஜிஆருக்கு அடுத்த வாரிசாக வந்து விடலாம் என்று மனக் கணக்கு போடுகிறார் ரஜினி.

கருத்துகள் இல்லை: