வெள்ளி, 9 மார்ச், 2018

ஜெயலலிதாவின் கால் விரல்களை நானே கட்டினேன் ,, கால்கள் அகற்றப்படவில்லை .. ஓட்டுனர் அய்யப்பன்

iyyappanதினமணி :முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையின்போது, கால் அகற்றப்படவில்லை. இறுதிச் சடங்கின்போது, தனிப் பாதுகாப்பு அதிகாரியும், நானும் அவரது கை, கால் விரல்களைக் கட்டினோம் என கார் ஓட்டுநர் ஐயப்பன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அரசு மருத்துவர்கள், அவரது வீட்டில் பணியாற்றியவர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை விசாரணை ஆணையத்திடம் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அண்மையில் ஒப்படைத்தது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோவை சசிகலாவின் சகோதரி மகனும், எம்எல்ஏவுமான டிடிவி தினகரன், அவரது ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவற்கு முன்பு இருந்த உடல்நிலை, சிகிச்சையின்போது, நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விளக்கம் அளிக்க சசிகலாவுக்கும் ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.
இரண்டாவது முறையாக ஓட்டுநர் ஆஜர்: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த ஐயப்பன் கடந்த பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமியின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து, விசாரணை ஆணையத்தில் ஐயப்பன் வியாழக்கிழமை (மார்ச் 8) மீண்டும் ஆஜரானார். காலை 10.30 முதல் பிற்பகல் 1 மணி வரை ஐயப்பனிடம் விசாரணை நடைபெற்றது.
ஜெயலலிதா மருத்துவமனைக்கு வர மறுத்தார்: இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானது. சசிகலாவும், மருத்துவர் சிவகுமாரும் மருத்துவமனைக்குச் செல்லலாம் என ஜெயலலிதாவை வற்புறுத்தினர். ஆனால், செப்டம்பர் 22-ஆம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் அடுத்த நாளான 23-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதால் தம்மால் மருத்துவமனைக்கு வர முடியாது என்றும், மருத்துவரை வீட்டுக்கு அழைத்து வருமாறும் கூறினார். ஆனால், சிறிது நேரத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி வீட்டிலேயே மயக்கமடைந்தார்.
ஒரு மணி நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பினார்: இதைத் தொடர்ந்து, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஆம்புலென்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் அங்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவசர சிகிச்சைப் பிரிவில் ஜெயலலிதாவுக்கு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியது.
ஜெயலலிதாவின் பொருள்களைக் கொடுப்பதற்காக மருத்துவமனைக்கு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு 10.45-க்கு சென்றபோது, தலைமைச் செயலர் ராமமோகன ராவ், டிஜிபி ராஜேந்திரன், சசிகலா, டாக்டர் சிவகுமார் ஆகியோர் அங்கு இருந்தனர். டாக்டர் சிவகுமாரிடம் ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் 3 முறை பார்த்தேன்: அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மருத்துவமனையில் இருந்தனர். 75 நாள்களும் நான் மருத்துவமனைக்குச் சென்று வந்தேன். அதில், 3 முறை ஜெயலலிதாவை நேரில் பார்த்தேன். டிசம்பர் 5-ஆம் தேதி இரவு ஜெயலலிதா இறந்துவிட்டதாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கால் அகற்றப்படவில்லை: இதைத் தொடர்ந்து, அவரது உடல் டிசம்பர் 6-ஆம் தேதி அதிகாலை 3.45 மணி அளவில் போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நானும், காவல் அதிகாரிகளும் இணைந்து அவரது உடலை வீட்டுக்குள் கொண்டு சென்று குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்குள் வைத்தோம். இதைத் தொடர்ந்து, சடங்குகள் செய்ய வேண்டி இருந்ததால் ஆண்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.
வீட்டில் பணியாற்றிய பெண்கள் மட்டுமே அங்கிருந்தனர். ஜெயலலிதாவின் தனிப் பாதுகாப்பு அதிகாரி கருப்பசாமியும், நானும் ஜெயலலிதாவின் கை, கால் விரல்களை வெள்ளைத் துணியால் கட்டினோம். மருத்துவமனையில் அவருக்கு கால் அகற்றப்பட்டது என்பது தவறான செய்தியாகும். 1991-இல் இருந்து ஜெயலலிதாவுக்கு ஓட்டுநராக உள்ளேன். அவரை சசிகலா எவ்வாறு பார்த்துக் கொண்டார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
தலையில் காயம் இருந்ததா என நீதிபதி கேள்வி: அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது, ஜெயலலிதாவின் தலையில் காயம் இருந்ததா என நீதிபதி ஆறுமுகசாமி என்னிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, அவரது தலையில் காயம் ஏதும் இல்லை.
மேலும், அவ்வாறு நடப்பதற்கான சூழ்நிலை வேதா இல்லத்தில் இல்லை என்றும் தெரிவித்தேன்' என்றார்

கருத்துகள் இல்லை: