சனி, 10 மார்ச், 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை .. மத்திய அரசு புதுக்கதை

Gajalakshmi - Oneindia Tamil டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார். டெல்லியில் 4 மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கூறியதாவது : காவிரி நீர் பங்கிட்டு கொள்வதற்காக அமைக்கப்பட உள்ள அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அதன் செயல்பாடுகள் என்ன, என்னென்ன விஷயங்களை இந்த அமைப்பு கையாளும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. 
Centre says Sc not ordered to form cauvery management board 4 மாநில அரசுகளின் அதிகாரிகளிடம் இது குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. மாநில அரசுகள் இன்று தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளன, அவர்கள் எழுத்து மூலமாக பரிந்துரைகள் அளித்தால் அவையும் கருத்தில் கொள்ளப்படும். காவிரி நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை அளித்தது. உச்சநீதிமன்றம் தங்களின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை, ஒரு திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியமா அல்லது வேறு குழுவா என்பதை மத்திய அரசு முடிவு செய்யவில்லை. உச்சநீதிமன்றம் காவிரி நீரை பங்கிட்டு கொள்வது குறித்து 6 வாரத்துக்குள் குழு அமைத்து செயல் திட்டம் வகுக்க உத்தரவிட்டது, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அடுத்த கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் உபேந்திரா பிரசாத் சிங் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: