வியாழன், 8 பிப்ரவரி, 2018

திருவாலங்காடு கோயிலில் தீ! மதுரையைத் தொடர்ந்து கோவில் தீவிபத்துக்கள் .. இந்துத்வா சதி ? குஜராத் பாணி கலவரத்துக்கு பிளான்?

Annamalai Arulmozhi : பொதுவாக கலவரம் செய்வதற்கு குண்டுவைப்பதுதானே வழக்கம்.. அதென்ன தமிழ்நாட்டில் புதிதாக கோயில் கோயிலாக நெருப்பு அதுவும்... நடப்பது கவனக்குறைவால் !!! திட்டுவது அரசாங்கத்தை! கோரிக்கை.. கோயில்களை மீண்டும் பார்ப்பனப் பண்ணையம் ஆக்குவது.. இது எச்.ராஜா வகையறாவின் 2018 மாடலா ??
மதுரையைத் தொடர்ந்து மற்றொரு கோயிலில் தீ!மின்னம்பலம்: திருவாலங்காட்டில் உள்ள புகழ்பெற்ற வடாராண்யேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம் நேற்றிரவு (பிப்ரவரி 7) பற்றி எரிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் புகழ்பெற்ற வடாராண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலாகும். நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இது ரத்தின சபையாகத் திகழ்கிறது. வடாராண்யேஸ்வரர் கோயில் கிபி 11ஆம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழனால் திருப்பணி செய்யப்பட்டது. வட ஆரண்யம் என்றால் ஆலமரக்காடு. பண்டைய காலத்தில் ஆலமரங்கள் நிறைந்திருந்ததால் திருவாலங்காடு என்னும் பெயர் பெற்றது. இக்கோயிலில் காரைக்கால் அம்மையார் முக்தியடைந்தார். இந்த கோயிலின் ஸ்தல விருட்சமாக 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது.
அந்த ஆலமரத்தின் கீழ் பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம்.
நேற்றிரவு பக்தர்கள் நெய் விளக்கு மற்றும் கற்பூரம் ஏற்றி வழிபட்டுக்கொண்டிருந்தபோது, ஆலமரம் திடீரெனப் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அதிர்ச்சியடைந்த மக்கள் நீண்ட நேரம் தீயை அணைக்கப் போராடினர். திருவள்ளூர் மற்றும் பேரம்பாக்கம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்தனர். எனினும், ஸ்தல விருட்சம் காய்ந்த நிலையில் இருந்ததால் தீயில் எரிந்து சாம்பலானது. மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று இரவு 10.30 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு ராஜ கோபுர பகுதியில் இருந்து சுந்தரேஸ்வரர் சுவாமி சன்னிதி செல்லும் வழியில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தின் அருகில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள கடைகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் இரவு (பிப்ரவரி 6) தீவிபத்து ஏற்பட்ட மண்டபத்திற்கு அருகே உள்ள பசுபதி ஈஸ்வரர் சன்னதி மேற்கூரை இடிந்து விழுந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சுந்தரேஸ்வரர் சன்னதியில் உள்ள நடராஜப் பெருமானும் வெள்ளியம்பலம் என்றழைக்கப்படும் ஐந்து சபைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில்களில் அடுத்தடுத்து தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: