வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

113 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு

மாலைமலர் :எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 113 தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இலங்கை சிறையில் இருந்து 113 தமிழக மீனவர்களை விடுவிக்க அரசு உத்தரவு கொழும்பு: தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், அவர்களின் வலைகளை நாசப்படுத்தியும் அட்டூழியத்தில் ஈடுபடுகின்றனர்.
கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறைகளில் பல மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளும் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை பாராளுமன்றத்தில் சமீபத்தில் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


சிறைபிடிக்கப்படும் படகுகளின் அளவுக்கேற்ப 2 முதல் 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம்வரை கைது செய்யப்பட்ட 113 தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு உத்தரவின் நகல் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களில் 4 மீனவர்கள் இன்று அவசரமாக விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரின் மகன் இறந்து விட்டதால் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள 109 மீனவர்கள் வழக்கமான நடைமுறைகளின்படி விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: