செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

இம்சை அரசன் 24 புலிகேசி படப்பிடிப்புகளில் வடிவேலு ஒழுங்காக நடப்பதில்லை... தகராறு!

tamilthehindu :‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்.
‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பான சர்ச்சை நீடித்து வருவதால், காவல்துறையிடம் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறது படக்குழு.
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. ஆனால், பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலுமே இல்லை.
இதனால், தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் படக்குழுவினரிடம் எந்த ஒரு பதிலுமே சொல்ல முடியாத சூழலில் உள்ளார்கள். இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, விரைவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்கள்.

இதன் படப்பிடிப்பிற்காக போடப்பட்டுள்ள அரங்குகளும் அப்படியே இருப்பதால், தினமும் படக்குழுவினருக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இது குறித்து விசாரித்தபோது, “வடிவேலுக்கு என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை. அவர் வந்து விளக்கமளித்தால் தானே ஒரு முடிவுக்கு வர முடியும். ஒரு முன்னணி காமெடி நடிகர் இப்படியெல்லாம் செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது எனத் தெரியவில்லை. எங்கள் நோக்கம் அவர் மீது புகார் அளிப்பது அல்ல. விரைவில் வடிவேலு படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று வேதனையுடன் தெரிவித்தார்கள்

கருத்துகள் இல்லை: