ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

பியுஷ் மனிஷ் : அரசியல்வாதி, அரசுப் பணியாளர், கார்ப்பரேட்... இவங்கள கேள்வி கேட்க தவறாதிங்க!” - பியூஷிடம் மாணவர்கள்

பியூஷ் மானுஸ் கார்ப்பரேட்களுக்கு எதிராக போராடும் சூழலியலாளர்விகடன் -நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி :  இர.ஏஞ்சலின் ரெனிட்டா
 "நான் மிகவும் சுயநலம் பிடித்தவன். நான் நன்றாக வாழ வேண்டும், என் உடல்நலத்திற்கு எந்த கேடும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா, "பிளாஸ்டிக்" நம் உணவுடன் கலந்தால், அது இனப்பெருக்கத்தையே பாதிக்கும்... இன்னும் பல கேடுகளையும் கூட விளைவிக்கும். அதனால் தான் என் வாழ்விலிருந்து அவற்றை விலக்கி வைக்க விரும்புகிறேன். கொஞ்சம் உங்களைச் சுற்றிப் பாருங்கள்... சுற்றுப்புறத்தில் பிரச்சனைகள் இல்லை என்று எண்ணுகிறீர்களா? நீங்கள் ரொம்ப பாதுகாப்பாக உணர்கிறீர்களா? நமது சூழல் எந்த அளவுக்கு சிதைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா? மக்கள் சக்தி மட்டுமே இதற்கான தீர்வைத் தரும். மக்கள் தொடர்ந்து கேள்வி கேட்டார்கள் என்றால், அதிகார வர்க்கத்தைத் தங்கள் கேள்விகளால் உலுக்கினார்கள் என்றால் இது திருத்தப்படும், இது மாறும். ஆனால், கேள்விகள் கேட்கப்படவில்லை என்றால், ‘நாம் கவனிக்கப்படவில்லை’ என்ற எண்ணமே நல்லவர்களையும் கெடுத்துவிடும். ஆகவே அரசின் ஆதிக்கக் கட்டமைப்புகளில் அமர்ந்திருக்கும் மூன்று பேரிடம் உங்கள் கேள்விகளை முன்வைக்க மறவாதீர்கள்,
அரசியல்வாதிகள், அரசுத்துறைப் பணியாளர்கள், கார்ப்பரேட்ஸ். உண்மையில் நாம் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு அழிவு நேர்ந்திருக்கிறது. பெரும்பான்மை மக்களை விவசாய வர்க்கத்தினராகக் கொண்ட இந்தியாவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பாசன வசதியுடன் கூடிய நிலங்கள் உவர்நிலங்களாக மாறிவிட்டதென்றால் அதன் கொடுமை புரிகிறதா? இயற்கையின் வடிவமைப்பு என்பது மிகவும் நுண்ணியமானது, இங்கு அசையும் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்றால் அது நிச்சயம் நகைச்சுவை கிடையாது. ஆகவே இயற்கையை நாம் எப்படி எதிர்கொள்கிறோமோ அதைப் பொறுத்துத் தான் இயற்கையும் நம்மை எதிர்கொள்ளும். ஆகவே உங்களைச் சுற்றியுள்ளவற்றைக் கவனியுங்கள், உங்கள் மனதிற்குள் குரல் ஒலிக்கும்போதெல்லாம் அதை அடக்கியே பழகாதீர்கள், கேள்விகளாகக் கேளுங்கள் நண்பர்களே! மாற்றம் உருவாக ஒரே வழி இது மட்டும் தான்.”
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடலை முடித்துக் கொண்டு பியுஷ் மானுஷ் கிளம்ப முனைந்த போது மணி மூன்று. ஆனாலும் எங்களிடம் தொக்கி நின்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர் தவறவில்லை.
சூழலியல் பிரச்னையில் நீங்கள் இன்றைய மாணவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? 
மாணவர்கள் களத்திற்கு வர வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும், அதை மற்றவர்களிடம் பகிர வேண்டும். இன்றைய மாணவர்கள் கற்பது என்பதையே நிறுத்தி விட்டார்கள். இந்த அழுகிப்போன கல்விமுறையில் அவர்கள் சிக்குண்டு விட்டார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். முதலில் கேள்வி எழுப்ப வேண்டும், அவர்கள் இல்லையென்றால் வேறு யாரால் கேள்வி கேட்க முடியும்?
பியூஷ் மானுஸ்கடந்தாண்டு என்ன மாதிரியான வேலைகளைச் செய்தீர்கள். இந்த வருடத்திற்கான திட்டங்கள் என்ன?
ஏற்கெனவே ஆற்றிய பணிகளை இன்னும் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். புதிதாகப் பள்ளப்பட்டு ஏரியை மீட்டுருவாக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். அரசின் அடக்குமுறைகளால் அந்த பணிகள் சிறிது தாமதமாகி விட்டன. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காவல் துறை, அரசு என எல்லா திசைகளிலிருந்தும் அடக்குமுறைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், இதே காலக்கட்டத்தில் தான் நாங்கள் முதலில் செய்த பணிகளை விட மூன்று மடங்கு அதிகமான பணிகளைச் செய்திருக்கிறோம். 2016 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் மூக்கநேரியிலும் அம்மாப்பட்டு ஏரியிலும் 60 இலட்சம் மதிப்பிலான வேலைகள் நடந்திருக்கின்றன. இதை நிச்சயம் தொடர்வோம். ஆகாயத் தாமரை ஒரு பெரும் அச்சுறுத்தல், அதைக் களையத் தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்.
’பியுஷ் சேத்தியா’ என்னும் நீங்கள் நிச்சயம் அந்நியப்படுத்துதலை எதிர்கொண்டிருந்திருப்பீர்கள். அதை எப்படி கையாண்டீர்கள்?
அந்நியப்படுத்துதல் என்பது நிச்சயம் இருக்கிறது, அதுவும் ஊடகங்களில் நான் அதைப் பார்த்திருக்கிறேன், எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், அது எந்த வகையிலும் என் பணிகளைப் பாதிக்கவில்லை. உண்மை தான், ‘நீ வெளியாள்’ என்ற குற்றச்சாட்டு என்னைப் பலமுறை காயப்படுத்தியிருக்கிறது. ‘நான் அதனால் காயப்படவில்லை’ என்று சொன்னால் அது நிச்சயம் கதைதான். ஆனால், அந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் தான் என்னை இன்னும் தீவிரமாகப் போராட வைக்கின்றன. ஏனென்றால் நான் நிரூபித்துக்காட்ட வேண்டுமல்லவா? அந்த ஊக்கத்தைத் தருவது ‘நான் வெளியாள்’ என்ற குற்றச்சாட்டு தான். அதுமட்டுமில்லாது, அன்றாடம் நீங்கள் எங்கு வாழ்கிறீர்களோ? அது தான் உங்கள் ஊர். இன்று நான் புனேக்கு சென்றுவிட்டால், அது தான் என் ஊர், காஷ்மீர் சென்றால் அது தான் என் ஊர். நான் அங்கு உழைப்பேன். அது தானே செய்ய முடியும்? ஆதலால், அந்த ஊர், இந்த ஊர் என்று எப்படி சொல்ல முடியும்? நாட்டின் பெயரில், மதத்தின் பெயரில், சாதியின் பெயரில் யோசிப்பதை நாம் நிறுத்தியாக வேண்டும். அவையெல்லாம் புலப்படாத விஷயங்கள். அவன் இங்கு பிறந்தவன், அங்கு பிறந்தவன் என்று விவாதிப்பது எல்லாமே அர்த்தமில்லாத விஷயங்கள். ஆனால், நான் என்றும் என் நம்பிக்கையை இழந்ததில்லை. முதன்முறை நான் சிறையில் அடைக்கப்பட்ட போது மிகவும் பயந்துவிட்டேன். ஆயினும், அந்த நொடியிலும் நான் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். ஏனென்றால் எனக்குத் தெரியும் எனக்கு நல்லது தான் நடக்குமென்று. நாளை எனக்கு என்ன நடந்தாலும் நிச்சயம் அது நல்லதுக்குத்தான். ஏனெனில், அந்த மேஜிக்கைப் பல முறை என் வாழ்வில் நான் கண்டிருக்கிறேன். இயற்கையுடனான என் வாழ்வு மாறாத வரை, என் வாழ்வில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் ஒரு நேர்மறையான சக்தியைத் தான் எனக்குக் கொடுக்கும்.
இயற்கைக்காகப் போராடுவதாக சொல்லும் நீங்கள் ஜந்தர்மந்தரில் விவசாயிகள் போராடிய போது உங்கள் குரலைக் கொடுக்காதது ஏன்?
விவசாய நாடான இந்தியாவில் விவசாயிகள் மட்டுமல்லாமல் விவசாயக் கூலிகளும் இருக்கிறார்கள். இந்த விவசாயத்தை உறுதிப்படுத்தாமல் நம்மால் பொருளாதாரத்திலோ நகர்ப்புற வளர்ச்சியிலோ அல்லது கிராமப்புற வளர்ச்சியிலோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாது. விவசாயிகள் தான் அவர்களுக்குத் தடையாக இருக்கும் அரசின் திட்டங்களைக் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியவர்கள். ஆனால், அதற்காக அவர்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டிய அவசியமுமில்லை, அரசிடம் பிச்சை எடுக்க வேண்டிய அவசியமுமில்லை. விவசாயிகள் தன்மானம் மிக்கவர்கள். அதில் அவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஜந்தர்மந்தரில் போராடியவர்கள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுப்பினார்கள். ஒரு வேளை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டால் மீண்டும் அவர்கள் அரசிடம் இருந்து விவசாயக் கடனை எதிர்பார்க்க முடியாதென்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் ஏ.சி.காமராஜருடன் இணைந்து நதி நீர் இணைப்புத் திட்டத்தை ஆதரித்தவர்கள் என்பதால் என் கருத்துக்கும் அவர்களின் கருத்துக்கும் முரண் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சேலத்தைப் பற்றி மட்டுமே நீங்கள் யோசிக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் சேலத்திலிருந்து விரட்டிவிட்டதாகச் சொல்லும் நிறுவனங்கள் இந்தியாவின் வேறெந்த மூலையிலோ கால் பதிக்க நேர்ந்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? 
நான் ஒருவன் தான் கார்ப்பரேட்ஸ்க்கு எதிராகப் போராடுகிறேனா? இல்லையே! எத்தனையோ ஊர்களில் மக்கள் இயற்கையின் மடியில் கை வைக்க வரும் கார்ப்பரேட் கம்பெனிகளை விரட்டிக்கொண்டு தானே இருக்கிறார்கள்? எத்தனை இடங்களில் தோற்கடித்திருக்கிறோம்! எத்தனையோ உதாரணங்களை என்னால் காட்டமுடியும். கேளுங்கள். சரியான கேள்வியை அவர்களிடம் கேளுங்கள். மக்களுக்கு சரியான வழியைக் காட்டுங்கள். மக்கள் தானாக ஒன்றிணைவார்கள். எந்த அரசாங்கமும் மக்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இன்று மக்களைத் திசை திருப்பும் வேலைகள் பல நடக்கின்றன, குறிப்பாக மதத்தின் பெயரால் மக்கள் திசை திருப்பிவிடப்படுகிறார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம்,  ஜெயின் என எல்லா மதங்களுமே அதன் முக்கிய அம்சத்திடமிருந்து மக்களைத் திசை திருப்பிவிடும் வேலையைத் தான் செய்கின்றன. நானும் ஓர் ஜெயின் தான். இன்று ஒரு ஜெயினைக் கூட ஜெயின் என்று சொல்ல முடியாது, என்னைத் தவிர.
திடக்கழிவு மேலாண்மை என்னும் பெயரில் நாம் செய்து வரும் மண்ணை மாசுப்படுத்தும் செயல்களுக்கு மாற்றுத்தீர்வு என்ன? உங்களிடம் புது தீர்வு எதுவும் இருக்கிறதா ?
நிச்சயமாக. மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களிலிருந்து உயிரி வாயுவை எடுப்பது மட்டுமே இதற்கான சரியான தீர்வாக இருக்க முடியும். 2 கோடி முதலீட்டில் ஒவ்வொரு ஆலை உரிமையாளரும் ஒரு உயிரி வாயு ஆலையை உருவாக்கினால் அதிலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரத்தை தொடர்ச்சியாக உருவாக்க முடியும் என்னும் பட்சத்தில் இது ஒரு இலாபகரமான முதலீடு தானே? இதுவே எளிதில் மட்காத பொருள்களை மேலாண்மை செய்வதற்கு உயிரிவாயு வளிமமாக்கி  (biogas gasifier) ஒரு சிறந்த தீர்வு. ஆனால் அந்தக் கழிவுகளை வடிகட்டுதலில் உள்ள பிரச்சனையே அதை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல தடையாக இருக்கிறது. இதற்கான தீர்வை நான் மாணவர்களிடம் இருந்து தான் எதிர்பார்க்கிறேன். மின்சாரத்தை உருவாக்கும் வழிமுறை என்றாலே நிலக்கரியை எரிப்பது மட்டுமே நம் நினைவில் வரும். ஆனால் என்னுடைய வழிமுறையின் படி நிலக்கரியை மண்ணிலிருந்து எடுக்காமல் மண்ணிற்குக் கொடுக்கிறேன். திடக்கழிவுகளை எரித்தப்பின் மிஞ்சும் கரிமப்பொருளின் முக்கியத்துவம் தெரியுமா? அதனைப் பொதுவாக “டெராபிரிட்டா” என்று கூறுவதுண்டு. இது ஒரு சிறந்த நீர் ஈர்ப்பான். இது நிலத்தில் நீரை உறிஞ்சுவதோடு ஈரப்பதத்தையும் தக்கவைத்துக்கொள்ளும் இயல்புடையது. இதை விரைவில் செயல்படுத்த மாணவர்களின் உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
வேலை, மாத சம்பளம்,இ.எம்.ஐ, லோன் என ஒரு சுழலில்  சிக்கியிருக்கும் ஒரு தலைமுறையை உங்கள் பேச்சு, செயல்பாடுகளின்  மூலமாக இயற்கையின் பால் இழுக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?  
உங்களைச் சுற்றிலும் பாருங்கள், எல்லாம் நச்சு. ஆனால், எது எனக்கு சக்தியைக் கொடுக்கிறதோ, அது நச்சு கிடையாது. சரி தானே? இப்போது எனக்கு நாற்பது வயது. இருபது வருடங்களுக்கு முன்பு நான் இளைஞன், செடி நட எனக்குப் பிடித்திருந்தது. நான் என் மாமாவிடம் சொன்னேன், ‘நான் விவசாயி ஆகிறேன்’ என்று. என் மாமா என்னைக் கொஞ்சம் பார்த்தார். ”கையைப் பாருடா சேட்டுப் பயலே! இந்தக் கையில எதுடா உக்காரும்? கடப்பாரை பிடிச்சிருக்கியா நீ? சும்மா ஒரு மரத்த ஒரு மணி நேரம் நட்டா போதுமா? விவசாயம்னா என்ன நெனச்ச நீ? தண்ணீர் சுழிச்சிக்கிட்டு ஓடும், நீ கரையில உக்கார்ந்து கொண்டு இரசிக்கலாம், மயில் வந்து ஆடும், முயல் துள்ளிக் குதிச்சு ஓடும்-ன்னு நெனச்சியா?” என்று கேட்டார். பதினைந்து வருடங்கள் கழிந்த பிறகு அந்த மாமா வந்தார், கண் கலங்கி அழுதார். ஏனென்றால் அது உருவாக்கப்பட்டிருந்தது. ஓடையில் தண்ணீர் சென்றுகொண்டிருந்தது, மயில்கள், முயல்கள் எல்லாம் இருந்தன. ஒரே ஒரு விஷயம் தான், உள்நோக்கம் இல்லாமல் இயற்கையிடம் உங்களை ஒப்புக்கொடுங்கள், மாயம் நடப்பதை உணர்வீர்கள். என்னை நம்புங்கள், நிச்சயம் மேஜிக் நடக்கும். ஆகவே, நீங்கள் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலையில் அமருங்கள், அந்தச் சூழ்நிலையில் வாழ்ந்து பாருங்கள். பிறகு ஒரு முறை, எங்கள் கூட்டுறவு காடுகளுக்கு வருகை தாருங்கள், நாங்கள் செய்பவற்றைப் பாருங்கள். அதன் பின் முடிவு செய்யுங்கள், எது உங்களுக்கு சந்தோஷத்தைத் தருகிறது என்பதை. சரி தானே?

கருத்துகள் இல்லை: