வெள்ளி, 23 டிசம்பர், 2016

ஒதுங்கிய காரணம் என்ன? - கிரிஜஸ்ரீ.. துணிச்சலான தொகுப்பாளியின் பேட்டி டாக்!

மின்னம்பலம் :தமிழ்ப் பெண் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் உலகம் முழுவதும் பிரபலமானவர் கிரிஜஸ்ரீ. பாலியல் கல்வி குறித்த பல நிகழ்ச்சிகளை தொகுத்து அளிப்பதன் மூலம் துணிச்சலான பெண் தொகுப்பாளர் என்னும் புகழை பெற்றவர். கடந்த ஐந்து வருடங்களாக பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார். நிறைய திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பும் இவரது வாசல் கதவை தட்டியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக எந்த மீடியாவுக்கும் பேட்டி அளிக்காத கிரிஜஸ்ரீயை மின்னம்பலம்.காம்-க்காக சந்தித்தோம்...
(குறிப்பு: இவர் பெயர் கிரிஜாஸ்ரீ அல்ல. கிரிஜஸ்ரீ தான்)
டி.வி வாய்ப்பு ஏற்பட்டது எப்படி?

பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருக்கும்போது ஒரு நாள் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்தேன். இப்படி புகழ் பெறுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. வசந்த், மூன் தொலைக்காட்சிகளில் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. மகளிர் மட்டும் என்னும் டயல் காலர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். ஜெயா டிவியில் தாய் மண்ணின் சாமிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் பெண்களின் ஆதரவு பெருமளவு கிடைத்தது. அப்போதே சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. எங்கள் குடும்பத்தில் அப்போது நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. எனவே தொலைக்காட்சிகளில் மட்டும் வேலை பார்த்து வந்தேன்.

பாலியல் சம்மந்தமான நிகழ்ச்சியை ஹாஸ்ட் பண்ண ஓகே சொன்னது எப்படி?
எல்லா பெண்களையும் போல நானும் அந்த நிகழ்ச்சியை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியை செய்யச் சொல்லி வந்தவர்களிடம் உங்கள் வீட்டு பெண் யாரையாவது வைத்து இந்த நிகழ்ச்சியை தொகுக்க சொல்லிக்கங்க என்று சொல்லிவிட்டேன். இதற்கும் அந்த தொலைக்காட்சிக்கு அப்போது வரிசையாக மற்ற நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சி செய்தால் ஒரு மாதிரி பேச ஆரம்பிப்பாங்க என்றே தயங்கினேன். ஆனால் அந்த நிகழ்ச்சியை வேறு ஒரு தொகுப்பாளரை வைத்து ஆரம்பிச்சுட்டாங்க. நானும் பார்த்தேன். தவறாக ஒன்றும் இல்லையே என நினைத்தேன். என் அம்மாவிடம் கேட்டேன். அவர் குழந்தை பேறு இல்லாத பல தம்பதிகளுக்கு இந்த நிகழ்ச்சி உதவும் என்றார். இதை செய்வதில் தவறு இல்லை என்று தான் செய்ய ஆரம்பித்தேன். பாலியல் கல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தபின் நானே எதிர்பார்க்காத அளவில் பெரும்புகழ் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிகளின் மூலம் எனக்கு நிலையான வருமானம் கிடைத்தது. நிறைய ஆண்களும், பெண்களும் நான் தொகுக்கும் பாலியல் நிகழ்ச்சிகளால் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்காம ஒதுங்கியிருக்க காரணம் என்ன?
தொடர்ந்து எனக்கு இந்த நிகழ்ச்சிகளின் மூலம் கிளாமர் டால் இமேஜ் இருந்தது. இதன் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியினால் சினிமாவிலும் வாய்ப்புகள் அதிகமாக வந்தது. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். அதற்கு என்னை தயார்படுத்திக்கொள்ளத்தான் இந்த இடைவெளி. எந்த நிகழ்ச்சி செய்தாலும் கொடுக்கும் ஸ்கிரிப்ட்டை அடிப்படையாக வைத்து தான் பேசப்போகிறோம். அதில் நாங்கள் நடிகர்கள் மாதிரி என்பதை புரிந்து கொண்டால் போதும். எனக்கான நல்ல வாய்ப்புகள் திரைப்படங்களில் வருகிறது. விரைவில் வெள்ளித்தரையில் சந்திக்கலாம். அதான் உங்களுக்கு இப்ப பேட்டி கொடுத்திட்டேனே!

ஃபேஸ்புக்கில் வீடியோவாக பல கருத்துக்களை துணிச்சலா பேசி பதிவு செய்றீங்க?
என்னைப் பின்தொடரும் பல நண்பர்கள் இருக்கிறார்கள். சமூகம், அரசியல் சார்ந்து எனது கருத்துக்களை பதிவு செய்ய அதை பயன்படுத்துகிறேன். பொதுவாக சாதியை பேஸ்புக்கிலும் கொண்டு வர வேண்டுமா? பேருக்கு பின்னாடி சாதியை போடணுமான்னு பேசி கருத்தை பதிவு செய்த வீடியோவை பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்த்து இருக்காங்க . மோடி கொண்டு வந்த செல்லாத நோட்டு பிரச்னை பற்றியும் என் கருத்தை வீடியோவாக பதிவு செஞ்சிருக்கேன். பன்னீர் என்ற எனது நண்பர் இந்த வீடியோ நிகழ்ச்சியை பேஸ்புக்கிற்கு தயாரிக்க உதவுகிறார். ஒரே மாதிரி பேசுனா போரடிக்கும்னு அவர் ஒரு ஐடியா சொன்னார் அதன் படி அய்யர் மாமி, சேரி பொண்ணு, மாடர்ன் பொண்ணு என்று பல கெட்டப்களில் அவங்க ஸ்லாங்குல இந்த கருத்துக்களை சொல்றேன். நல்ல வரவேற்பு இருக்கு.

யார் படங்கள்ல நடிக்க ஆசை?
நல்ல திரைக்கதை உள்ள படங்கள், அமைஞ்சா புது இயக்குநர்கள் படங்கள்ல பண்ணுவேன். வில்லி ரோல்ல ஒரு படத்துல நடிக்கணும்னு ஆசை இருக்கு. கௌதம் மேனனின் படங்கள் பிடிக்கும். மணிரத்னம் சார் படங்களும் அப்படித்தான். இவர்கள் இயக்கத்தில் நடிப்பது என் கனவு.
- விஜய் மகேந்திரன்.

கருத்துகள் இல்லை: