வியாழன், 14 ஜூலை, 2016

எய்ம்ஸ் மருத்துவமனையின் மாணவர் சரவணின் மர்ம மரணம்

தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த பயிற்சி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவருடைய இறப்பு குறித்து  சரியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில்,
“மாணவர் சரவணன் மரணத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், சக மாணவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்னாலாடை நிறுவனத்தில் பணிபுரியும் கணேசன் என்பவரின் மகனான சரவணன் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலில் எம்.பி.பி.எஸ். படித்தவர். பிறகு மருத்துவக் கல்வியில் மேற்படிப்புக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு தான் சேர்ந்துள்ளார். 
புகழ்பெற்ற மருத்துக் கல்வி நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு கடும் போட்டி நிலவும். அப்படியொரு சூழலில் அங்கு சேர்ந்த மாணவன் சரவணன் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்திருப்பது அவரது பெற்றோர் மற்றும் உற்றார் உறவினரை சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தெற்கு டெல்லியில் சக நண்பர் ஒருவருடன் தங்கியிருந்த சரவணன் மரணத்தில் “ஊசி மருந்து செலுத்தியதற்கான அடையாளங்கள் உள்ளன” என்று டெல்லிப் போலீஸார் தெரிவித்துள்ளது சரவணன் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் வெளிமாநிலங்களில் கல்வி கற்கச் செல்கிறார்கள். அப்படி படிக்க தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு சரவணன் மரணம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவன் சரவணனின் மரணம் குறித்து பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துள்ள அவரது தந்தை கணேசன் “ என் மகனுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. எனது மகன் உயிரிழந்த சம்பவத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க மத்திய அரசும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவனை இழந்த தந்தையின் இந்த வேண்டுகோளே மத்திய, மாநில அரசுகள் புறக்கணித்துத் தள்ளி விட முடியாது. அது மட்டுமின்றி, மாணவன் சரவணனின் நண்பரும் மருத்துவருமான பண்ருட்டியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் “ சரவணனின் வலது கையின் தமனி நரம்பில் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. பொதுவாக வலது கை பழக்கம் உள்ளவர்கள், இடது கையில்தான் ஊசி போட்டுக் கொள்ள முடியும். இந்நிலையில் அவரது வலது கையில் அவரே ஊசி போட்டிருக்க வாய்ப்பே இல்லை. யாருடைய உதவியும் இல்லாமல் தமனி நரம்பில் ஊசி போட முடியாது என்பது எந்த மருத்துவருக்கும் நன்றாகவே தெரியும். எனவே, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பும் வகையில் இல்லை” என்று மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இது சரவணனின் மரணத்தில் பின்னிப் பினைந்து கிடக்கும் மர்மங்களை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க நடக்கும் போட்டியில் மாணவன் சரவணன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற வேறொரு சந்தேகமும் மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தமிழக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக சரவணனின் மரணம் பற்றி உரிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். மத்திய அரசும் இந்த மரணம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு, படித்துக் கொண்டிருந்த மாணவனின் உயிர் பறிக்கப்பட்டதில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.

வெளிமாநிலங்களில் மேல்படிப்பிற்காகச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் அவசரமாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.thetimestamil.com

கருத்துகள் இல்லை: