திங்கள், 4 ஜனவரி, 2016

சுப்பிரமணியம் சாமியின் ஆலோசனையில் பிரேமலதாவும் விஜயகாந்தூ ம் அரசியல் பண்றாய்ங்க




சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு எங்கள் பக்கம் வாங்க; நீங்கள்விரும்பும் பதவியை தரத் தயார்' என தி.மு.க., மற்றும் மக்கள் நலக்கூட்டணி, பா.ஜ., தலைவர்கள் என ஆளாளுக்கு அழைப்பு விடுத்தும், அவர்களுக்கு எல்லாம் விஜயகாந்த், இதோ... அதோ... என போக்கு காட்டி வருகிறார். இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. இதனால் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில், தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுதொடர்பாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சு நடத்தி வருகின்றன.தமிழக அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக குறிப்பிட்ட சதவீதத்திற்கு ஓட்டுகளை கொண்டுள்ள கட்சி தே.மு.தி.க., என்பதால், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., தரப்பும், மக்கள் நலக்கூட்டணியும், தேசிய கட்சியான பா.ஜ.,வும் முற்பட்டுள்ளன.



நேரடி பேச்சு இல்லை:
இந்த விஷயத்தில் தி.மு.க., தரப்பில் விஜயகாந்துடன் நேரடியாக பேச்சு நடக்கவில்லை என்றாலும், மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களும், பா.ஜ., தலைவர்களும் அவரை சந்தித்து தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த தலைவர்களுடன் தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த விஜயகாந்த், கூட்டணி தொடர்பாக எந்த பதிலையும் தெரிவிக்காமல் அவர்களை குழப்பி
அனுப்பிவிட்டுள்ளார்.'கூட்டணி தொடர்பான முடிவை கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் விவாதித்த பின் தொண்டர்களின் உணர்வுகளை அறிந்த பின் தான் எடுப்பேன்' என்ற பதிலையும் சிலரிடம் கூறி அனுப்பியுள்ளார்.

கூட்டணி விவகாரத்தில் விஜயகாந்த் இப்படி சொதப்புவதன் பின்னணி குறித்து, அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மீது முதல்வர் ஜெயலலிதா, தொடர்ச்சியாகஅவதுாறு வழக்குகளை பதிவு செய்து வருகிறார். அதே போல பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி மீதும் வழக்கு போட்டுள்ளார். தன் மீது போடப்பட்ட அவதுாறு வழக்குகளுக்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்கிய சாமி, கீழ் கோர்ட்டில் பதிவான வழக்குகளில் ஆஜராவதில் இருந்து தப்பியுள்ளார். அதனால் விஜயகாந்த் தரப்பிலிருந்து சிலர் சாமியை சந்தித்தனர்.

வழக்குகளுக்கு தடை:
அப்போது அவதுாறு வழக்குகளில் இருந்து தப்பிப்பது தொடர்பாக, விஜயகாந்த் தரப்பினருக்கு பல ஆலோசனைகளை சாமி தெரிவித்தார். அதனடிப்படையில் தான் தன் மீது ஜெயலலிதா போட்டுள்ள அவதுாறு வழக்குகளுக்கு எதிராக விஜயகாந்தும் தடை வாங்கினார். இதனால் விஜயகாந்த் - சாமி இடையே நட்பு ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வருகின்றனர். அப்படி பேசும் போது தமிழக தேர்தல் கூட்டணி குறித்தும் பேசியுள்ளனர். அப்போது விஜயகாந்துக்கு நிறைய ஆலோசனைகளை சாமி கூறியுள்ளார். இதையடுத்தே விஜயகாந்த் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்காமல், சந்தித்து வரும் தலைவர்களை குழப்பி வருகிறார். இந்த குழப்பம், பிப்ரவரி இறுதி வரை நீடிக்கும். அதுவரை கூட்டணி தொடர்பான எந்த முடிவையும் அவர் எடுக்கமாட்டார். ஆனாலும் அவர் எடுக்கப் போகும் முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் கவலை. இவ்வாறு அவர் கூறினார்.


விஜயகாந்திற்கு சாமி சொன்ன யோசனை:
விஜயகாந்திடம் சாமி கூறியதாவது:ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜன., 8ம் தேதிக்குப் பின் சுப்ரீம் கோர்ட்டில் துவங்கிவிடும். அப்போது கர்நாடக ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை கோர உள்ளேன். தடை கிடைத்துவிட்டால் ஜெயலலிதாவுக்கு சிக்கலாகிவிடும். ஒருவேளை தடை கிடைக்கவில்லை எனில், வழக்கு விசாரணை வேகமாக நடந்து முடிந்து தேர்தலுக்கு முன் தீர்ப்பு வரலாம்.அதே போல தி.மு.க., பிரமுகர்கள் மீதான, '2ஜி' வழக்கு விசாரணையும் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. அதில் அக்கட்சியினர் கடும் சோதனைகளை சந்திக்கும் நிலை உருவாகலாம்.இந்தச் சூழலில் தமிழகத்தின் மூன்றாவது சக்தியான நீங்கள், பா.ஜ.,வுடன் பேரம் பேசி கூட்டணி அமைத்து போட்டியிட்டு முதல்வராகப் பாருங்கள். அதுவரையில் கூட்டணி குறித்து யாருக்கும் பிடி கொடுக்காதீர்கள்; அமைதியாக இருங்கள்.இவ்வாறு விஜயகாந்திடம் சாமி கூறியுள்ளார்.


காங்கிரசை உடைக்க திட்டம் :
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கைகோர்க்க விரும்பும் காங்கிரஸ், அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாகி உள்ளது. ஆனால் அந்தக் கட்சியில் உள்ள சிலர் இதை எதிர்க்கின்றனர். அவர்கள், 'அ.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அமைய வேண்டும்' என விரும்புகின்றனர். இதனால் காங்கிரசில் உள்ள அ.தி.மு.க., ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்க அ.தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை எதிர்த்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் சேவா தளப்பிரிவு பிரமுகர் செல்வராஜையும், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட மேலும் சிலரையும் அ.தி.மு.க.,வில் இணைக்க பச்சைக்கொடி காட்டப்பட்டு உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -தினமலர்.com

கருத்துகள் இல்லை: