ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வைகோ அணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெளியேறுகிறது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்ள ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்தன.
இதையடுத்து இந்த கட்சிகள் அடங்கிய கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் மனித நேய மக்கள் கட்சியும் இடம் பெற்றிருந்தது.
காந்தியவாதியான சசி பெருமாள் மதுவிலக்கு போராட்டத்தின் போது உயிரிழந்ததை தொடர்ந்து இந்த கட்சிகள் கூட்டாகவே இணைந்து மதுவிலக்கு தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதனால் இந்த 5 கட்சிகளுக்கு இடையேயான நெருக்கமும் அதிகரித்தது.
மதுவிலக்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த கூட்டு இயக்க அரசியல் களத்திலும் கூட்டணி அமைக்கும் என்று வைகோ அறிவித்தார்.
இதனால், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சிகள் இனைந்து வருகிற சட்டமன்ற தேர்தலில் புதிய அணியாக களம் இறங்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வைகோ ரொம்ப நல்லவரு...ஆங் சாரி நல்ல சொற்பொழிவாளர்! 

இந்நிலையில் கூட்டாக செயல்பட தொடங்கிய இந்த கட்சிகளால் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. கூட்டு இயக்கத்தில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி முதல் ஆளாக வெளியேறி இருக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜவாஹிருல்லா கூறும் போது, ‘‘தமிழகத்தில், அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய கட்சிகளை கடந்து 3–வது அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை’’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் வைகோவின் கூட்டு இயக்கத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெளியேற திட்ட மிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிபடுத்தும் விதமாக நேற்று காஞ்சீபுரத்தில் வைகோ தொடங்கி இருக்கும் மறுமலர்ச்சி பயணத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் கூறும் போது, ‘‘மறுமலர்ச்சி பயணத்தில் பங்கேற்க ம.தி.மு.க., எங்களை அழைக்க வில்லை. இதில் கலந்து கொள்ள சொல்லி எங்கள் கட்சியின் தலைமையும் உத்தரவிடவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
வைகோவின் இந்த மறுமலர்ச்சி பயணத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருவாரூரில் 4 கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி கட்சி பற்றிய அறிவிப்பு நாளை (5–ந் தேதி) வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி வைகோவுடனான கூட்டணியில் நீடிக்குமா? என்பது உறுதியாக தெரிந்துவிடும்.
இந்த அணியில் இருந்து பிரிந்து சென்றிருக்கும் மனித நேயமக்கள் கட்சி, அ.தி.மு.க. அல்லது தி.மு.க. அணியில் சேர்ந்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் பட்சத்தில் அது தி.மு.க. அணியில் இணைந்தே தேர்தலை எதிர் கொள்ளும் என்று கூறப்படுகிறது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: