வியாழன், 8 அக்டோபர், 2015

மதுராந்தகம் ஆசிரியர் பாலியல் தொல்லையால் 12–ம் வகுப்பு மாணவி தற்கொலை

திண்டிவனம் அருகே உள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகள் கவுசல்யா (வயது 17). செய்யூரை அடுத்த தேவனூரில் பாட்டி அம்மாகண்ணு வீட்டில் தங்கி செய்யூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
இன்று காலை கவுசல்யா பள்ளிக்கு செல்வதற்காக சீருடை அணிந்து இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசி முடித்ததும் கவுசல்யா கதறி அழுதார்.
இதுபற்றி பாட்டி அம்மா கண்ணு கேட்ட போது எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். திடீரென கவுசல்யா வீட்டின் அறைக்கு சென்று தூக்கில் தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர்.
இதற்குள் அவர், துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அப்போது, அறையில் கவுசல்யா எழுதி வைத்திருந்த 2 பக்க கடிதம் இருந்தது. இதனை உறவினர்கள் கைப்பற்றினர்.

அதில், விலங்கியல் பாடம் நடத்தும் ஆசிரியர் ரமேஷ் ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்வதாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் கூறி இருப்பதாவது:–
நான் சொல்வது அனைத்தும் பைபிள் மேல் சத்தியமாக உண்மை. என் சாவுக்கு காரணம் ஆசிரியர் ரமேஷ். அவர் நல்லவர் கிடையாது. அதை எப்படி சொல்வது என்பது தெரியவில்லை. ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும். அவர் என்னிடம் தப்பாக நடக்க நினைத்தார். தவறாக நடந்தார். என்மேல் கை வைத்தார்.
ஆசிரியர் ரமேசுக்கு இதற்கான தண்டனை கொடுக்க வேண்டும். அவர் என்னிடம் மட்டும் அல்ல மேலும் பலரிடம் தவறாக நடந்து உள்ளார். நான் சொல்வதை நம்பவில்லை எனில், நீங்கள் மற்ற மாணவிகளிடம் ஆசிரியர் ரமேஷ் பற்றி கேளுங்கள்.
நான் உயிரோடு இருந்து கூறினால் நம்புவீர்களா என்று தெரியவில்லை. ஆசிரியர் ரமேஷ் இந்த மாதிரி நடந்துகொண்டதை நினைத்து தினம் தினம் அழுவேன். சந்தோஷமாக இருக்கமாட்டேன். இதற்கெல்லாம் ஒரே முடிவு சாவுறதுதான்.
இது அனைத்தும் உண்மை. இயேசுநாதர் மேல் சத்தியம், என்னை படைத்த கடவுள் மேல் சத்தியம். எனக்கு பிடிச்சவங்க மேல சத்தியம். என் சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை.
இவ்வாறு அதில் எழுதப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சுமார் 500–க்கு மேற்பட்டோர் காலை 10 மணியளவில் கவுசல்யாவின் பிணத்துடன் செய்யூர் – மதுராந்தகம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கிராம மக்களின் போராட்டத்தை அறிந்த போலீசார் குறைந்த எண்ணிக்கையிலேயே அங்கு வந்தனர். ஆனால், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பிணத்துடனேயே கிராம மக்கள் இருந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
மதியம் 12 மணிக்கு பின்னரே டி.எஸ்.பி. சிவசங்கரன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த உடனேயே போலீசார் வராதது ஏன்? மாணவிக்கு தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
தொடர்ந்து கிராம மக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் இருந்து 100–க்கு மேற்பட்ட கமாண்டே போலீசார் குவிக்கப்பட்டனர். கிராம மக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாணவி குற்றம் சாட்டி இருக்கும் ஆசிரியர் ரமேஷ் இன்று பள்ளிக்கு வரவில்லை. அவரது சொந்த ஊர் வடக்கு செய்யூர் ஆகும். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர் மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: