செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ரேஷன் கடைகளில் பண வினியோகம்?

லோக்சபா தேர்தலை ஒட்டி, வீடுகளில், பணம்
வினியோகம் செய்வதில்
சிக்கல் உள்ளதால், ரேஷன் கடைகள் மூலம், பணம் வினியோகிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது
தமிழகத்தில், 33,520 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ், அரிசி இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் போன்ற மற்ற உணவு பொருட்கள், மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.வரும் 24ம் தேதி, தமிழகத்தில், ஒரே கட்டமாக, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம், இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.பல ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில், ஐந்து முனை போட்டி நிலவுவதால், வீடுகளில், பணம் வினியோகம் செய்யும் போது, யாரேனும் ஒருவர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு, தகவல் கொடுக்கின்றனர். எப்படியாவது பொது மக்களுக்கு பணம் கிடைத்தால் ஒரு நாளாவது சந்தோசமாக செலவு செய்யலாம்.


இதனால், பணம் வினியோகம் செய்வதில் சிக்கல் நிலவுவதாக, அரசியல் கட்சிகள் கருதுகின்றன.அதேசமயம், 'வாக்காளர்களுக்கு, பணம் கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்' என்ற நிலை உள்ளதால், ஒரு சில அரசியல் கட்சிகள் பணம் வழங்க
முடியாமல், தவித்து வருகின்றன.ஒரு ரேஷன் கடைக்கு, 1,000 - 1,500 கார்டுதாரர்கள் உள்ளனர். ஒரு கார்டில், குறைந்தது, இரண்டு - மூன்று பேருக்கு, ஓட்டுரிமை உள்ளது.

இந்நிலையில், அரசியல் கட்சிகள், குறிப்பாக, ஆளுங்கட்சியினர், ரேஷன் கடைகள் மூலம், பணம் வினியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் ஊழியர்களுக்கு மட்டுமே, வீடுகளில் உள்ள நபர்கள் குறித்த விவரம் முழுவதுமாக தெரியும். கடந்த ஜனவரியில், பொங்கல் பரிசாக, 100 ரூபாய் வழங்கப்பட்டது.எனவே, முன் அனுபவம் உள்ள, ரேஷன் ஊழியர்கள் மூலம், பணம் வினியோகம் செய்ய, அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.இதுகுறித்த, புகார்கள், சில ஊழியர்கள் மூலம், எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. ஆனால், அரசியல் கட்சிகளை பகைத்து கொண்டு, எங்களால் எதுவும் செய்ய முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.


பட்டுவாடா எப்படி?



*ரேஷன் கடைக்கு அருகில், வாக்காளர்களுக்கு பணம் வழங்க, பணத்துடன், இரண்டு பேர் உள்ளனர்.
*ஒருவர், வீடுகளுக்கு சென்று, 'பூத் சிலிப்' மற்றும் துண்டறிக்கை வழங்கி, ரேஷன் கடை அருகில் இருக்கும் நபரின் அடையாளங் களை கூறி, பணம் பெற்று கொள்ளும் படி கூறுகின்றனர்.
*வாக்காளர்கள், ரேஷன் கடைக்குள் நுழையும் போது, ஊழியர் அல்லது, அரசியல் கட்சி பிரமுகர் மூலம், பணம் வழங்குவதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: