புதன், 23 ஏப்ரல், 2014

கலைஞர்: தேர்தல் கமிஷனே மேடை போட்டு, 'ஆளும் கட்சியினருக்கு ஓட்டு போடுங்கள்' என, பிரசாரம் செய்யட்டும்.!

தேர்தல் கமிஷன், ஒரு தலைபட்சமாக ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது,'' என, தி.மு.க., தலைவர் கலைஞர்  கருணாநிதி பேசினார்.

சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. அதனால் தான், தமிழகத்தில் முதன் முறையாக, '144' தடை உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. ஆளும் கட்சியினரால் எங்கள் கட்சியினரும், பொதுமக்களும் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.இதையெல்லாம், தேர்தல் கமிஷன் கவனிக்க மறந்து விட்டது. தேர்தல் கமிஷன் தன் பொறுப்பை தட்டி கழித்து செயல்படுகிறது. இதன் பாதிப்பு எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை,நாம், ஜனநாயகத்தையும், சர்வாதிகாரத்தையும் பார்த்து விட்டோம். தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டால் மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். தேர்தல் கமிஷனே, ஆளும் கட்சியினருக்கு மேடை போட்டு, 'ஆளும் கட்சியினருக்கு ஓட்டு போடுங்கள்' என, பிரசாரம் செய்யட்டும்.


இந்த தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என எனக்கும் தெரியும்; தேர்தல் கமிஷனுக்கும் தெரியும்; ஆளும்கட்சியினருக்கும் தெரியும்.ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை ஆகியோர் தேர்தலில் தோற்றுள்ளனர். ஆனால், அவர்கள் குறுக்கு வழியில், வாக்காளர்களுக்கு, பணம் கொடுத்து, எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என, எண்ணவில்லை.அது போல் தான், நானும் செயல்பட்டு வருகிறேன். ஆனால், அ.தி.மு,க வினர் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என, குறுக்கு வழிகளில் ஈடுபட்டுள்ளனர்.இதை, தேர்தல் கமிஷன் கவனிக்காமல், ஒருதலைப்பட்சமாக ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறது. தேர்தல் கமிஷனின் இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். எனவே, லோக்சபா தேர்தலில் எனக்கு நம்பிக்கையில்லை.இவ்வாறு கருணாநிதி பேசினார்.


பா.ஜ., ஆட்சி வந்தால் அபாயம்:

''தேர்தல் கமிஷனின், 144 தடை உத்தரவு, மக்களை பயமுறுத்துவதைப் போல தெரியவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கலைஞர்  கூறினார்.

அவரது பேட்டி:
தேர்தல் கமிஷன், மக்களை பயமுறுத்துவதை போல், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை, மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் எதிர்த்து இருப்பது பற்றி உங்கள் கருத்து?

பயமுறுத்துவதை போலத் தெரியவில்லை. எந்த எண்ணத்தோடு அதை பிறப்பித்துள்ளனர் என, இப்போது கூற முடியாது.

பிரவீன் தொகாடியா, சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருப்பது பற்றி?

ஒரு சிலர் பேசும் கருத்துக்களால், சிறுபான்மையினரை பயமுறுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மத சண்டைக்கு என்னென்ன வேண்டுமோ, அதையெல்லாம் செய்கின்றனர். இந்தச் சூழலில், மதச் சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பது தான் என் கருத்து.

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், பெரிய அபாயம் என நினைக்கிறீர்களா?
அப்படிக் கருதாமல் இருக்க முடியாது.

தமிழகத்தில் மோடி அலை இருப்பதாக, பா.ஜ.,வினர் சொல்கின்றனர். மோடி அலை இருக்கிறதா?
தமிழகத்தில் அப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.


மோடியை விட ஜெ., சிறந்த நிர்வாகியா?

''தான் சிறந்த நிர்வாகியா என, முதல்வர் ஜெயலிதா, கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

அவரது பேட்டி:தேர்தல் கமிஷன் நடுநிலையாக உள்ளதா அல்லது நடுநிலை போன்று நடிக்கிறதா என தெரியவில்லை. மத்தியில், நல்லாட்சி அமைய வேண்டும் என நினைத்து, மக்கள் ஓட்டளிக்க வேண்டும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விட தான் சிறந்த நிர்வாகியா என, முதல்வர் ஜெயலலிதா,கண்ணாடி முன் நின்று கேட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு,கலைஞர் கருணாநிதி கூறினார்.


'கடைசி 2 நாட்களில் எச்சரிக்கை தேவை':

''ஓட்டு எண்ணிக்கை மையங்களில், வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் விழிப்பாக இருக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர், கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலில், எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என, எந்தக் காரியத்தையும் செய்ய துடித்துக் கொண்டிருக்கின்றன. தி.மு.க., கூட்டணியின் வேட்பாளர்களுக்காக, நியமனம் செய்யப்பட்டுள்ள ஏஜன்ட்கள், கண்ணும் கருத்துமாகவும், மிகுந்த எச்சரிக்கையோடும், செயல்பட வேண்டும்.ஓட்டுப்பதிவு முடிந்த பின், மின்னணு ஓட்டுப்பதிவு பெட்டிகள் உரிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போதும், அவை ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பத்திரப்படுத்தி வைக்கப்படுவது வரை, மிகவும் விழிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.கடந்த சில நாட்களாக, சுறுசுறுப்பாக பணியாற்றி விட்டு, கடைசி இரண்டு நாட்களில், ஏமாந்து விடக் கூடாது; எச்சரிக்கை தேவை. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார். dinamalarcom

கருத்துகள் இல்லை: