செவ்வாய், 12 நவம்பர், 2013

Ex சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மீது இளம்பெண் வக்கீல் செக்ஸ் புகார் புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் குழு அமைப்பு

சமீபத்தில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மீது இளம் பெண் வக்கீல் ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளம்பெண் வக்கீல்
கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதித்துறை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பு படித்து பட்டம் பெற்றவர், அந்த பெண் வக்கீல். தற்போது அவர் இயற்கை நீதி, சமூகங்கள்–சுற்றுச்சூழலுக்கான வக்கீல்கள் அமைப்பில் பணியாற்றி வருகிறார்.
தான் சுப்ரீம் கோர்ட்டில் பயிற்சி பெற்றபோது மூத்த நீதிபதி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:–
நான் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். குளிர்கால விடுமுறையின்போது, டெல்லியில் நான் பயிற்சி பெற்று வந்தேன். நான் என் கடைசி செமஸ்டருக்கு முந்தைய செமஸ்டரின் போது, சமீபத்தில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் உதவியை நாடிச்சென்றேன்.
பரிசு, செக்ஸ் தொல்லை

என் கடினமான முயற்சிக்கும், உழைப்புக்கும் எனக்கு கிடைத்த பரிசு, செக்ஸ் தொல்லை (உடல் ரீதியில் காயம் அடையவில்லை. ஆனால் இதுவரை அப்படி மீறல் நடந்தது இல்லை). அவர் என் தாத்தா வயதுக்கு சமமானவர். என்ன நடந்தது என்பதை நான் விவரித்துச் சொல்லப்போவதில்லை. அது நடந்து நீண்ட காலம் ஆகி விட்டது. ஆனால் அந்த நினைவு அப்படியே தங்கி விட்டது.
உண்மையிலேயே திறந்த மனதுடன் சொல்கிறேன். நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ஒரு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, இப்படி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பார் என யாரும் எதிர்பார்க்க முடியாது.
3 புகார்கள்
எனது அனுபவம் அசாதாரணமானது அல்ல. நீதித்துறைக்குள் நடப்பது மட்டுமல்ல.
அந்த குறிப்பிட்ட நீதிபதியின் மீது இதே போன்று 3 புகார்கள் (பாலியல் தொல்லை) வந்ததை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பிற நீதிபதிகளிடம் பாலியல் தொல்லைக்கு ஆளான குறைந்தது 4 பெண்களையும் நான் அறிவேன். ஆனால் அனேகமாக யாரும் என்னைப் போல சந்தித்திருக்க மாட்டார்கள்.
சூடான பொது விவாதங்கள், பெண் உரிமை காவலர்கள் கூட்டம், புதிய குற்றவியல் சட்டங்கள், பாலியல் அத்துமீறல் தடுப்புச்சட்டங்கள் என எத்தனையோ வந்தும், இந்த கொடுமைக்கு முடிவு இல்லை.
ஓட்டல் அறையில்...
நான் அந்த நீதிபதியின்கீழ் 6 மாதங்கள் வேலை செய்தேன். அவர் அந்த 6 மாத காலத்தில் என்னை மிக நன்றாகவே நடத்தினார். என்மீது கனிவுடன் நடந்துகொண்டார். சந்தேகத்துக்கு இடமின்றி எனக்கு அது எதிர்பாராததாக அமைந்தது.
அது ஒரு ஓட்டல் அறை. நான் அந்த அறைக்குள் தன்னிச்சையாக உள்ளே நுழைந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்தார்கள். நான் அமைதியாக வெளியேறியதையும் கண்டார்கள். நான் பயத்துடன்கூட வெளியேறவில்லை. அந்த தருணத்தில் நான் அமைதியாக வெளியேறுவது அவசியம் என கருதினேன். அந்த நாளில் இது தொடர்பாக நான் யாரிடமும் எதுவும் கூறவில்லை. (இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24–ந் தேதி நடந்ததாக தெரிய வந்துள்ளது.)
அந்த தருணத்தில் (பாலியல் வன்செயல்களுக்கு) கடுமையான தண்டனை வழங்குவது குறித்து அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். (டெல்லி மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில் 6 காமுகர்களைக் கொண்ட கும்பலால் கற்பழித்து சிதைக்கப்பட்ட காலகட்டம்) நான் 5 ஆண்டுகள் சட்டப்படிப்பு படித்தது, எல்லா தீர்வுக்கும் சட்டத்தை நாடும்படி எனக்கு கற்றுக்கொடுத்தது.
காழ்ப்புணர்ச்சி இல்லை
அந்த சம்பவம் என்னை ஆழமாக பாதித்தது. எனக்கு கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை. என் மதிப்புக்குரிய ஒரு மனிதர், இப்படி செய்தது எனக்கு கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் தந்தது.
உண்மையிலேயே எனது பதிலடி என்பது அந்த சோகத்தை அடக்கி ஆள்வதுதான். ஆனால் இந்த பதிலடி எனக்கு புதியது. அவரது செயல்களை என்னால் புரிய முடிந்தது. மன்னிக்கவும் முடிந்தது. தவிர்க்க இயலாத நல்ல மனிதராக அவரை தொடர்ந்து எண்ணத்தலைப்பட்டேன். அதனால்தான் எனக்குள் வைத்துக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் எதிரொலிப்பு
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில், அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதி  ஆஜராகி எடுத்துக்கூறினார். அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியதாவது:–
நாங்கள் அதன் தீவிரத்தை உணர்ந்திருக்கிறோம். பாலியல் தொல்லை புகார்களை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த விவகாரம் இன்று  காலை 10.30 மணிக்கும் முறையிடப்பட்டது. மதிய உணவு இடைவேளையின்போது, மற்ற நீதிபதிகளிடம் இதுபற்றி விவாதித்தேன்.
3 நீதிபதிகள் குழு
அதைத் தொடர்ந்து நான் 3 நீதிபதிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளேன். அந்த குழுவில் நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.டட்டு, ரஞ்சனா தேசாய் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
ஒட்டுமொத்த விவகாரம் குறித்தும் இந்த குழு ஆராயும். உண்மையைக் கண்டறியும். அறிக்கை அளிக்கும். இன்று  மாலை முதல், அவர்கள் தங்கள் வேலையைத் தொடங்கி விடுவார்கள்.
ஆர்வமாக உள்ளேன்
முதலில் அந்த வாக்குமூலம் சரியானதுதானா என்பதை ஆராய்வார்கள். நீதிபதிகளுடன் இணைந்து பணியாற்றுகிற பயிற்சி வக்கீல்கள், வக்கீல்கள் தொடர்பாக பதிவேடுகள் இருக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டுக்கு வருகிறவர்கள் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. 3 நீதிபதிகள் குழு இவற்றையும் ஆராயும்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி என்ற முறையில் இந்த குற்றச்சாட்டால் நானும் கவலை கொண்டுள்ளேன். அது உண்மையானதா, இல்லையா என அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அமர்வு முன்னிலையில் வக்கீல் எம்.எல்.சர்மா ஆஜராகி, பெண் வக்கீல் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், இளம்பெண் புகார் தொடர்பாக ஊடகத்தகவல்கள் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு தன்னிச்சையாக ஒரு வழக்கு பதிவுசெய்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: