வெள்ளி, 15 நவம்பர், 2013

Volvo Busகளை பார்த்து பயப்படும் பயணிகள் ! அடுத்தடுத்து தீவிபத்து !

ஹாவேரி: அதிக கட்டணம், அதிக வேகம், அதிநவீன சொகுசு வசதிகளுடன் கூடிய, "வால்வோ ஏசி' பஸ்கள் தொடர்ந்து, தீ விபத்தில் சிக்கி, அப்பாவி பயணிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோவதால், அந்த பஸ்களில் பயணம் செய்ய, மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், 45 பேர் உயிரை பலி கொண்ட, ஆம்னி பஸ் விபத்தின் சோகம் மறைவதற்குள், கர்நாடகாவில் நேற்று மீண்டும் நிகழ்ந்த விபத்தில், எட்டு பேர் இறந்தனர்.
கடந்த மாதம், 30ம் தேதி, கர்நாடகா தலைநகர், பெங்களூருவில் இருந்து, ஆந்திரா தலைநகர், ஐதராபாத் சென்ற, "ஜப்பார் டிராவல்ஸ்' என்ற, தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, வால்வோ ஆம்னி பஸ், ஆந்திராவின் மெகபூப்நகர் அருகே விபத்துக்கு உள்ளானது. 120 கி.மீ., வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், சாலையோர பாலத்தில் மோதி தீப்பிடித்ததில், டிரைவர், கண்டக்டர் தவிர்த்து, பஸ்சில் இருந்த, 45 பேரும் தீயில் கருகி, உருத்தெரியாமல் இறந்தனர்.


அதற்கு முன்பும், இது போன்ற, "ஏசி' சொகுசு பஸ்கள், தமிழகம் உட்பட சில மாநிலங்களில், விபத்துக்கு உள்ளாகி, தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் நடந்துள்ளதால், ஆம்னி சொகுசு பஸ்களில் பயணிப்பது பாதுகாப்பானது தானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு தயாரிப்பான வால்வோ பஸ்கள் அதிக வேகமாகச் செல்வதால், அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி, அப்பாவி உயிர்களை கருக வைப்பது தொடர்கதையாகியுள்ளதால், பீதி அதிகரித்துள்ளது. 2வது விபத்து: கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து, மும்பைக்கு, "நேஷனல் டிராவல்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான, வால்வோ பஸ், 43 ஆண்கள் மற்றும் ஆறு பெண் பயணிகளுடன், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு புறப்பட்டது.நேற்று அதிகாலை, 2:30 மணியளவில், பெங்களூருவிலிருந்து, 330 கி.மீ., தூரத்திலுள்ள, கர்நாடக மாநிலத்தின், ஹாவேரி என்ற இடத்தில் விபத்துக்கு உள்ளானது. சாலையின் நடுவில் இருந்த கான்கிரீட் தடுப்பு மீது மோதியதில், பஸ்சில் தீப்பற்றியது. அடுத்த சில வினாடிகளில், உட்புறமும் தீ பரவியதில், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். "ஏசி' காற்று வெளியே சென்றுவிடக் கூடாது என்பதற்காக, முழுவதும் கண்ணாடியால் அடைக்கப்பட்டிருந்த அந்த சொகுசு பஸ்சின், உட்புறம் இருந்த, பயணிகளின் பொருட்கள் மற்றும் திரைச்சீலைகளில் பற்றிய தீ, கொழுந்து விட்டெரிந்ததில், எட்டு பேர் உடல் கருகி இறந்தனர்.தீப்பிடித்த உடன், சுதாரித்துக் கொண்ட பயணிகள் பலர், பஸ் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்து, உயிர் தப்பினர். இவ்வாறு, 41 பேர் உயிர் பிழைத்துள்ளனர். எனினும், அவர்களில் பலர், கீழே விழுந்ததிலும், தீக்காயம் அடைந்ததிலும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணியும் அடங்குவார்.


இந்த பஸ், கர்நாடகா, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜமீர் அஹமது கான் சகோதரர், ஷகில் அஹமது கானுக்கு சொந்தமானது. இது பற்றி அவரிடம் கேட்டபோது, ""பஸ்சில் வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளது. எனவே, அதிவேகமாகச் சென்றிருக்க வாய்ப்பில்லை. விபத்து எப்படி நடந்தது என தெரியவில்லை,'' என்றார். சென்னையிலிருந்து, நாட்டின் பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும், தமிழகத்திற்குள், கோவை, சேலம், திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற நகரங்களுக்கும், 300 வால்வோ பஸ்களை, தனியார் பஸ் நிறுவனங்கள் இயக்குகின்றன. கட்டணம் அதிகமாக இருந்தாலும், விரைவாகச் சென்று விடலாம் என எண்ணி, ஏராளமானோர், வால்வோ பஸ்களில் பயணிக்க விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அடிக்கடி விபத்தாகும் வால்வோ பஸ்கள், தீயில் பயணிகளை கருக வைப்பதால், பீதி ஏற்பட்டுள்ளது. மேலும், இத்தகைய அதிவேக பஸ்களில் பயணிப்பது பாதுகாப்பானது தானா என்ற அச்சமும், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.


விபத்திற்கு காரணம் என்ன?
வால்வோ பஸ்கள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதிவேகமாகச் செல்லும் இந்த பஸ்களில் பயன்படுத்துவதற்கு என, குறைந்த எரிதிறன் கொண்ட டீசல் உள்ளது. அந்த டீசலை பயன்படுத்தாமல், எரிபொருள் சிக்கனத்திற்காக, அதிஎரிதிறன் கொண்ட டீசலை, நம்ம ஊர்களில் ஓடும், வால்வோ பஸ்களில் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. விபத்தில் இந்த பஸ்கள் சிக்கும் போது, டீசல் பஸ்சில் சிதறி, எளிதில் தீப்பிடித்து, சேதம் அதிகமாவதாகவும் சில வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும், இதன், "ஏசி' கருவிகள், வெளிப்புறம் இருப்பதால், விபத்தில் சிக்கும் போது, அந்தக் கருவிகளில் உள்ள ரசாயனம், தீயின் கோரத்தை மேலும் அதிகரித்து விடுவதாகவும் கூறப்படுகிறது. அதிவேகமாக செல்லக்கூடிய இந்த பஸ்களின் உட்புற அலங்காரத்தில் உள்ள பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடியவை அல்ல என்றாலும், பயங்கர உஷ்ணத்தில் வெளிப்புறத்தில் தீப்பிடிக்கும் போது, உட்புறமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்கின்றனர் டிரைவர்கள். ஜன்னல் வழியாக தப்பிய சிறுவன்: நேற்று விபத்திற்கு உள்ளான, வால்வோ பஸ் தீப்பிடித்து எரிந்த போது, 10 வயது சிறுவனான, அப்தாப் என்பவன், தூங்கிக் கொண்டிருந்தான். கண் விழித்து பார்த்த போது, பஸ்சின் முன் பகுதி எரிந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்தாப், பஸ்சின் மேல் பகுதியில், காற்றுக்காக வைக்கப்பட்டிருந்த ஜன்னலை திறந்து, எகிறி குதித்து உயிர் தப்பியுள்ளான். இந்த சிறுவனைத் தொடர்ந்து, 22 பயணிகளும் அதே வழியில் வந்து உயிர் தப்பியுள்ளனர். உயிர் தப்பியவர்கள், சிறுவனின் அறிவுத் திறனை பயணிகள் மெச்சினர். dinamalar,com

கருத்துகள் இல்லை: