திங்கள், 11 நவம்பர், 2013

நீதிமன்றங்களில் துருப்பிடித்து வீணாகும் அரசுப் பேருந்துகள் ! மக்கள் வரிப்பணம் கோவிந்தா !

அரசு போக்குவரத்து துறை மெத்தனத்தால், தமிழகத்தில் உள்ள பல கோர்ட்டுகளில், 145 பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால், அரசுக்கு, 26 கோடி ரூபாய் வீணாகும் நிலை உருவாகி உள்ளது.அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பஸ்கள், இன்சூரன்ஸ் செய்யப்படாமல் இருப்பதால், விபத்துக்குள்ளானவர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர் கேட்கும் இழப்பீட்டு தொகையை, கழகத்தால் தர முடிவதில்லை.அதனால், வழக்கு விசாரணையின் போது, பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிடுகிறது. அதை தவிர்க்க, அரசு போக்குவரத்து கழகத்தினர், எவ்வித மேல்நடவடிக்கையும் எடுப்பதில்லை. கடந்த சில ஆண்டுகளில், 145க்கும் மேற்பட்ட பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும், பல்வேறு ஊர் கோர்ட் வளாகத்தில், வெயிலிலும், மழையிலும் வீணாகி, துருப்பிடித்து வருகின்றன  இது போன்ற விசயங்களுக்கு அரசு ஏன் கவலைப்படுவதில்லை? மக்கள் வரிப்பணம் எப்படிபோனால் என்ன என்ற எண்ணம்தான் இதற்க்கு காரணம் .இதிலும்  இரட்டை இலை வரைய வேண்டும் 

இதுதொடர்பாக, அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளன நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அரசு பஸ் விபத்தை ஏற்படுத்தினால், இழப்பீட்டு தொகையாக, 4 முதல், 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு பஸ்சுக்கான, இன்சூரன்ஸ் பிரீமிய தொகை, 74 ஆயிரம் ரூபாய் தான். கடந்த ஆட்சியின் போது, '22 ஆயிரம் பஸ்கள் இன்சூரன்ஸ் செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டது; ஆனால், அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தற்போது, பல்வேறு கோர்ட்டுகளில் நிறுத்தப்பட்டுள்ள, ஜப்தியான பஸ்களை மீட்க, 114 கோடி ரூபாய் தேவைப்படும்.இவ்வாறு, அந்த நிர்வாகி கூறினார்.

மற்றொரு தொழிற்சங்க நிர்வாகி கூறியதாவது:ஒரு பஸ் வாங்க, 18 லட்சம் ரூபாயை அரசு செலவிடுகிறது. 145 பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டுள்ளதால், 26.10 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டமாகி உள்ளது.போக்குவரத்து கழகத்தின் சராசரி கணக்கீட்டின்படி, ஒரு பஸ் இயங்கினால், நாள் ஒன்றுக்கு, 5,500 ரூபாய் வசூலாகும். ஜப்தி செய்யப்பட்டுள்ள பஸ்களால், 8 லட்சம் ரூபாய், நாள் ஒன்றுக்கு நஷ்டமாகிறது. ஆண்டு கணக்கில் பார்த்தால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.அரசின் போக்குவரத்து கழக பஸ்கள், இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யும் போது, விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், உரிய காலத்தில் இழப்பீடு வழங்குவதோடு, பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு, போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: