செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து, ‘உஸ்.. உஸ்..’ என்றார்


Viru News
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார், முதல்வர் ஜெயலலிதா. இதை, ஒரு முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மீது தொடர்ந்துள்ள வழக்கு எனவும் எடுத்துக் கொள்ளலாம், அல்லது, ஒரு கட்சித் தலைவர், மற்றொரு கட்சித் தலைவர் மீது தொடர்ந்த வழக்கு எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

சமீபகாலமாக ஊடகங்களில் தம்மைப் பற்றி வரும் செய்திகளை எதிர்கொள்ள முதல்வர் தேர்ந்தெடுத்துள்ள வழிமுறை, கருத்துக்கள் மூலம் பதிலடி கொடுப்பதல்ல, கோர்ட் மூலம் நோட்டீஸ் அனுப்புவதுதான். கடைசியாக சில வாரங்களுக்குமுன் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு கோர்ட் நோட்டீஸ் சென்றது. தற்போது அந்தப் பாக்கியம் விஜயகாந்துக்கு கிட்டியுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது சார்பில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், “தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன், முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வருக்கு ‘களங்கம்’ ஏற்படுத்தும் கருத்தை கூறிய அவரை மாத்திரம் கோர்ட்டுக்கு இழுத்தால் போதுமா? மாநிலத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து அவர் கூறிய கருத்தை, அனைவரும் அறியும்படி செய்த மீடியாவை சும்மா விட்டுவிடலாமா?
எனவே தமிழக அரசின் மனுவில், “முதல்வருக்கு களங்கம் விளைவித்த விஜயகாந்த் மீதும், அவரது அறிக்கையை வெளியிட்ட ஆங்கில பத்திரிக்கை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலப் பத்திரிகை, யாரோ ஒருவர் கூறிய கருத்தை வெளியிடவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கூறிய கருத்தை அப்படியே வெளியிட்டிருக்கிறது. ஜனநாயக நாடுகளில் உள்ள வழக்கம் அது.
அதை, தமிழகத்திலும் கடைப்பிடிக்க நினைத்ததில் இருந்து குறிப்பிட்ட அந்தப் பத்திரிகையின் துர் எண்ணத்தை முதல்வர் புரிந்துகொண்டிருப்பது, முதல்வரின் அறிவாற்றலையே காட்டுகிறது.
எதிர்க் கட்சியினர் கூறும் கருத்தை அப்படியே வெளியிடாமல், சென்சார் பண்ணி வெளியிட வேண்டும் என்ற சிம்பிள் ‘பத்திரிகை தர்மம்’ கூட குறிப்பிட்ட பத்திரிகைக்கு தெரியவில்லையே!
முதல்வரின், சாதுர்யமான முடிவு மெச்சத்தக்கது. ஒரேயொரு சின்ன உறுத்தல்தான் உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும், ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் மாறிமாறி ஆட்சியைப் பிடிப்பது வழமையாக உள்ளது. அடுத்த தேர்தலில் ஒருவேளை ஜெயலலிதா ஆட்சியை இழந்து, எதிர்க்கட்சி தலைவி ஆகலாம்.
முதல்வரின் தற்போதைய ஸ்டான்டை அந்த ஆங்கிலப் பத்திரிகை சீரியசாக எடுத்துக்கொண்டு விட்டால் என்னாகும்? ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவியாகும் போது, அந்த ஆங்கிலப் பத்திரிகையில், இப்படிதான் செய்தி வெளியாகும்:
“எதிர்க்கட்சி தலைவி ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து விடுத்த அறிக்கையில், ‘உஸ்.. உஸ்..’ என்றார்”

கருத்துகள் இல்லை: