புதன், 8 ஆகஸ்ட், 2012

மதுரை ஆதீனர்: நித்யானந்தாவின் சீடர்களின் போக்கு சரியில்லை.

சென்னை: "நித்யானந்தாவின் சீடர்களின் போக்கு சரியில்லை. அவர்களின் செயல்பாடுகள் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் நடவடிக்கை எடுப்பேன்' என, மதுரை ஆதீனகர்த்தர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா தனது சீடர் குழுவுடன் கயிலை மலைக்கு யாத்திரை சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கச்சனம் மற்றும் திருப்புறம்பியத்தில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான கோவில்களுக்கு மதுரை ஆதீனகர்த்தர் சென்றார். அப்போது, அவரை திருப்பனந்தாள் காசித்திருமடத்து அதிபர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, நித்யானந்தாவிடம் தான் சிக்கவில்லை என்பதை தனிப்பட்ட முறையிலும், வெளிப்படையாக நிருபர்களிடமும் மதுரை ஆதீனகர்த்தர் தெரிவித்திருந்தார்.

நீங்கள் சொல்லுவது ஆன்மிகம் , இவர்களுக்குள் நடப்பது பெண்மீகம்......

நியமனம் ஏன்: இந்நிலையில், ஆதீனத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழல்கள் குறித்து மதுரை ஆதீனகர்த்தர், தன் நெருக்கமான சீடரிடம் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் தகவல்: மதுரை ஆதீனம், ஆதீன கோவில்கள் நிர்வாகம், சொத்துக்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத் தான் நான் நித்யானந்தாவை நியமித்தேன். துவக்கத்தில் அவர் என்னிடம், 100 கோடி ரூபாய் தந்து விடுவதாகவும், அந்தப் பணத்தை வைத்து சன்னிதானம் நிர்வாகத்தை சீர் செய்து கொள்ளலாம் எனவும், முதல் தவணையாக ஐந்து கோடி ரூபாய் தருவதாகவும் என்னிடம் உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை அவர் ஒரு பைசா கூட தரவில்லை.
நானும் அந்தப் பணத்தை விரும்பிக் கேட்கவில்லை.

சோதனை, ரோதனை: அவர் எனக்குப் பணம் தருவதாகச் சொன்னதை அடுத்துத் தான் ஆதீனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். ஆதீன வரலாற்றில் இதுபோன்ற ஒரு சோதனை நடந்ததில்லை. மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான இடங்களில் உள்ளவர்களை நித்யானந்தா ஆட்கள் மிரட்டி வருவதாக, எனக்குத் தெரிய வந்துள்ளது. கச்சனம் உள்ளிட்ட கோவில்களின் தேவஸ்தானத்துக்கு, நித்யானந்தா சார்பில் அம்சானந்தா என்பவரை நியமித்தார். அவர், நித்யானந்தாவின் படம் மற்றும் தலைமையகம் மதுரை ஆதீனம் என, "விசிட்டிங் கார்டு' அச்சிட்டு அளித்துள்ள தகவல் எனக்கு வந்ததை அடுத்து, நான் நித்யானந்தாவை கூப்பிட்டு விசாரித்தேன். அவரும் சீடரைக் கூப்பிட்டு சன்னிதானம் சொன்னபடி கேட்க வேண்டும் என கண்டித்தார். அதேபோல், பாண்டிச் செல்வம் என்பவர் என் படத்தை சிறிதாக போட்டு, நித்யானந்தா படத்தை பெரிதாக போட்டு விசிட்டிங் கார்டு அடித்தது பற்றியும், நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போதும் நித்யானந்தா பாண்டிச் செல்வத்தைக் கூப்பிட்டு கண்டித்தார். இதற்கெல்லாம் மேலாக, ஆதீன சார்பில் புதிதாக அச்சடிக்கப்பட்ட லெட்டர் பேட்டில், எங்கள் இருவர் படமும் போட்டு, திருப்புறம்பியம் என்பதற்குப் பதிலாக திருப்புறம்பயல் எனவும், மதுரை ஆதீன தொலைபேசி எண்களுக்குப் பதிலாக, பிடதி ஆசிரம தொலைபேசி எண்களையும் அச்சிட்டனர். இதையும் நான் கண்டித்தேன். கடந்த, 40 ஆண்டுகளாக, நான்
ஆதீன அலுவலகத்தில் ஒரு ஒலி வாங்கி, ஒலிப் பெருக்கி, எட்டு கண்காணிப்பு கேமராக்கள் வைத்துள்ளேன். அதன் மூலம் நிர்வாகத்தில் சில ஆலோசனைகளை நான் சொல்வேன். நிர்வாக நடவடிக்கைக்காக இவ்வாறு வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வித மயக்கத்தில்...: நித்யானந்தாவின் பெண் சீடர்கள் வந்த பின், அவர்கள் பேசுவதை நான் ஒட்டுக் கேட்பதாக தவறாகப் புகார் செய்தனர். நான் நித்யானந்தாவிடம் சொன்னேன். அவர், அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்து, வேறு வேறு ஊர்களுக்குப் பணி மாற்றம் செய்தார். நித்யானந்தா சீடர்கள் மரபுக்கு மாறாக நடந்து வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. இளைய சீடர்கள், தங்கள் பெற்றோரை மதிப்பதில்லை. எப்போதும் ஒரு வித மயக்கத்தில் இருப்பதைப் போல உள்ளனர். போகிற போக்கைப் பார்த்தால், மதுரை ஆதீனம், நித்யானந்தா பீடமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கறார் பேர்வழி: எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். எனக்குரிய மரியாதைகளை தரவேண்டும் என்பதில் நான் எப்போதும் கறாராக நடந்து கொள்வேன். நான் தமிழ் மொழி, அரசியல், இனப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆனால் எந்த இடத்திலும், என் மரியாதைக்குப் பங்கம் நேருவதை நான் விரும்புவதில்லை.
ஆதீனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் பொறுமையாகப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான் கோபப்பட மாட்டேன். தவறுகளைத் திருத்துவதற்கு அவகாசம் அளித்து வருகிறேன். ஆனால், ஒரு நாள் எனது ஆவேசம் வெளிப்படும். விரைவில் இந்த விவகாரம் குறித்து நான் உறுதியான நடவடிக்கை எடுப்பேன். இப்போது நினைத்தாலும் நான் தருமபுரம் செல்வேன். அதில் எந்தத் தடையும் இல்லை. இவ்வாறு மதுரை ஆதீனகர்த்தர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: