புதன், 8 ஆகஸ்ட், 2012

கிரிக்கெட் என்றொரு தேசபக்தி லேகியம்

ஒலிம்பிக் போட்டிகளின்  தொடக்க நாள் விழாவில் குத்துச்சண்டை வீரர் முகமது அலி கௌரவிக்கப்பட்டார். முதன்முதலாக குத்துச்சண்டை ஒலிம்பிக்கில் அவர் தங்கம் வென்று நாடு திரும்புகையில் அவரை வரவேற்க ஒருவரும் வந்திருக்கவில்லை. அவரது ஊரிலிருந்த ஓட்டலின் சர்வர் கூட அவருக்கு பரிமாறத் தயாரில்லை. கருப்பின தோலின் முன் தங்கம் கூட மினுமினுக்கவில்லை. தன் பதக்கத்தை கழற்றி ஆற்றில் வீசி எறிந்தார். அவருடைய மனஉளைச்சல் எந்த அளவு இருந்திருக்கும்!  இது போன்ற உளைச்சலில் தான் நம் இந்திய விளையாட்டு வீரர்கள் உள்ளார்கள். நம் விளையாட்டு அமைச்சகம் அவர்களை அவ்வாறு தான் நடத்துகிறது.
இந்திய கால்பந்து அணி வீரர்கள் ஷுக்கள் வாங்க கிரிக்கட் ஸ்டேடியத்தை சுத்தம் செய்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.   ஹாக்கி வீரர்கள் உலகளவிலான சாம்பியன் பட்டம் வென்று வந்த போதும் அவர்களை வரவேற்க ஒருவரும் இன்றி ஆட்டோவில் வந்திறங்கியதைக் கண்டோம். அதிசயமாக பதக்கம் வெல்லும் வீரர்களையும் பாலின சோதனை என்று அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் வேலை கேட்டு மன்றாடினாலும் அரசின் காதுகளுக்கு விழுவதில்லை.

இதே நிலையில் கிரிக்கெட் வீரர்கள் உள்ளூர் போட்டிகளை வென்றாலும் கூட மாலை மரியாதை, மேல தாளத்துடன் நகர் வலம் வர அரசு வழி செய்கிறது. அவர்கள் கேட்காமலேயே ராணுவத்தில் கௌரவ பதவிகள் அளிக்கிறது. ஏன் இந்த பாகுபாடு?
கிரிக்கெட்டைக் கொண்டாடும் இத்தனைக் கோடி மக்களில் எத்தனை பேருக்கு BCCI ஒரு தனியார் அமைப்பு என்பது தெரியும்? உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பும் கூட அது என்பதை அறிவார்களா? இந்திய அரசின் விளையாட்டுத் துறையின் கீழ் வராத, அதன் அதிகாரங்களுக்கு கட்டுப்படாத ஒரு தனியார் விளையாட்டு நிறுவனம் BCCI. விளையாட்டு அமைச்சகத்தின் விதிகளை ஏற்றுக் கொள்ளமுடியாது, அவை எங்களுக்கு பொருந்தாது என்று அண்மையில் வெளிப்படையாகவே எதிர்த்தார்கள்.
இப்போது சொல்லுங்கள், ஒரு தனியார் விளையாட்டு அமைப்புக்கு இவ்வளவு சலுகைகள் தேவையா? அவர்கள் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நம் வரி பணத்தை வாரிக் கொடுப்பதையும் ஏற்கமுடியுமா?
உதாரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மாட்ச் பிக்சிங் செய்தது தேசத்துரோக குற்றமாக பாவிக்கப்பட்டது. சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தியாவில் நிலையென்ன? மாட்ச் பிக்சிங் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளவர் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
கிரிக்கெட் ஒரு விளையாட்டாக மட்டுமே இருந்திருந்தால் பிரச்னையில்லை. இந்த தனியார் நிறுவனத்தார் “இந்திய அணி” என்ற லேபிள் ஒட்டி, தேசபக்தி லேகியம் விற்றே பெரும்பணக்கார அமைப்பாகி விட்டார்கள். தேசப்பற்றுக்கு எத்தனையோ விடயங்கள் இருக்க, கிரிக்கெட் தான் உடனடி தேசபக்தியை உசுப்பேற்றுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டை ரசித்தால், ஆதரித்தால் தேசத்துரோகியாம். இலங்கை அணியை ஆதரித்தால் தமிழின துரோகியாம். கலைஞரின் பேரன் மைதானத்தில் இலங்கை அணியின் தொப்பியை மாட்டிக் கொண்டதற்கு தமிழின துரோகி பட்டம் கட்டினார்கள், என்னவோ குடும்பத்தில் அவர் மட்டும், அப்போது மட்டும் தான் துரோகியாக இருந்தது போல. மக்கள்தான் அறியாமையில் செய்கிறார்கள் என்றால், சமூக பொறுப்புணர்வு சிந்திக்கும் திறனோடு இருக்க வேண்டிய பத்திரிக்கைகள் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள்.
BCCI யின் கிரிக்கெட் அணி வென்றதற்கும், ஈழப் போருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? இதே போலத் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வென்றால், அவர்கள் ராணுவத்தையே வென்று விட்டது போல் மகிழ்வதும்.
BCCI vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமாம். சொல்கிறார்கள். ஊடகங்களின் இந்த கற்பனை தான் இன்னும் நம்மை ஏமாளியாக வைத்திருக்கிறது
IPL சென்னை அணியில் இலங்கை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதும் முட்டாள் ஊடகங்கள் தமிழின உணர்வையெல்லாம் மூடிக் கொண்டு பிராந்திய துவேஷத்தை வளர்க்கலாயின. பழிவாங்குமா சென்னை என்னும் வாசகத்தை அடிக்கடி காண முடிந்தது. ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வென்றால் தான் BCCI அணி இறுதிச் சுற்றுக்கு செல்ல முடியும் எனும் போது ‘தேசத்துரோகம்’ என்றும் பாராமல் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவேண்டிக் கொண்டார்கள்! இது போன்ற ரோதனைகளை படித்தவர்களின் ஊடகங்களான டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும்கூட காண இயலும்.
சானியா, சாய்னா, பூபதி, ஆனந்த் போன்றோரை இப்படிக் கொண்டாடியிருப்போமா? தனியார் நிறுவனங்களின் தொடர்ச்சியான விளம்பரங்களின் மூலமே நம் மூளையில் கிரிக்கெட் ஏற்றப்பட்டு பைத்தியமாக்கப்பட்டுள்ளோம்! நல்ல வேளை, ஹாக்கியில் ஹாலந்தையும் கால்பந்தில் பிரேசிலையும் ரசிப்பதெல்லாம் இன்னும் தேசத்துரோகமாக்கப்படவில்லை!

ஐயா, ஒரு தனியார் அமைப்பின் விளையாட்டு  தேசபக்தி போதையை உங்களுக்குத் தரலாம். ஆனால் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு அது உயிரின் வாதை.
IPL போட்டிகள் நடந்த போது கலாசாரத்தை சீரழிக்கிறது என்றும், மின்சாரத்தை வீணடிக்கிறது என்றும் சிலர் வழக்கு தொடுத்தார்கள். அந்தப் பொதுநல ஆர்வலர்களிடம் நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான்.  இந்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும் BCCI கிரிக்கெட் அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாங்கள் ஒரு தனியார் அமைப்பு என்று அவர்களைப் பகிரங்கமாக அறிவிக்கச் செய்யுங்கள். அரசு சாராத ஓர் அமைப்பு ‘இந்திய அணி’ என்று எப்படி பேனர் மாட்டிக் கொள்ளலாம்? இதை எதிர்த்து வழக்கு போடவேண்டாமா?
ஒரு விளையாட்டு 55 நாடுகளில் விளையாடப்பட்டால்தான் அது ஒலிம்பிக்ஸில் இணைத்துக்கொள்ளப்படும். அப்படி இல்லாத ஒரு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மற்ற விளையாட்டு வீரர்களை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டு, பதக்கப் பட்டியலில் இடம் தேடுவது நியாயமா? அரசு இந்த விஷயத்தில் மாறுமா என்று தெரியாது. ஆனால், நாம் மாறியாகவேண்டும். அண்மையில் EURO கால்பந்து போட்டிகளுக்கு இந்தியர்கள் அளித்த உற்சாகம் அதற்கு முதல் படியாக இருக்கும்.
0
கரையான்

கருத்துகள் இல்லை: