ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

அடுத்து 3வது அணி ஆட்சிதான்! அத்வானி ஆரூடம்!

 Next Lok Sabha Polls Will Be Proved Worst For Congress காங்குக்கு 100 சீட்டுக்கும் கீழதான் கிடைக்கும்

டெல்லி: 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத படுதோல்வியை சந்திக்கும் என்றும் காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவுடன் ஒருவர் பிரதமராவது தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று தமது பிளாக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
தமது பிளாக்கில் அத்வானி கூறியுள்ளதாவது:
நாடு முதலாவது பொதுத் தேர்தலை சந்தித்தது 1952-ல். அந்த 1952-ம் ஆண்டிலிருந்து கடந்த 2009-ம் ஆண்டு வரையிலான மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கண்டிராத மிக மோசமான ஒரு தோல்வியை சந்திக்கப் போகிறது. அவசரநிலை பிரகடனத்துக்குப் பிந்தைய தேர்தலைப் போல் மிக மோசமான ஒரு தோல்வியை சந்திக்கப் போகிறது.

அண்மையில் பிரதமர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் ஆகியோர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்ட இரண்டு மூத்த மத்திய அமைச்சர்கள், மக்களவையில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினால் நிச்சயம் பெரும்பான்மை இடங்களைப் பெற முடியாது என்று குறிப்பிட்டனர். அதேபோல் அனேகமாக மூன்றாவது அணிதான் ஆட்சி அமைக்கக் கூடும் என்றும் அவர்கள் கூறினர். காங்கிரஸ், பாஜக ஆதரவுடன் ஒருவர் பிரதமராகக் கூடும் என்பதை மறுத்துவிட முடியாது. அப்படி ஒரு ஆட்சி அமைவது நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு பெரும் கேடாக அமையும்.
கடந்த காலங்களில் இதுபோல் நடைபெற்றிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் ஆதரவுடன் சரண்சிங், சந்திரசேகர், தேவ கவுடா, ஐ.கே. குஜ்ரால் ஆட்சியாகட்டும் பாஜக ஆதரவுடனான வி.பி.சிங் அரசாகட்டும் நீண்டகாலம் ஆட்சி செலுத்தியதில்லை. இந்த நாட்டின் வரலாற்றில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் பிரதமர்கள் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சிகாலம் மோசமானதாக இருக்கிறது. இதன் விளைவு நிச்சயம் 100 இடங்களுக்குக் குறைவாகத்தான் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அத்வானியின் இந்த ஆரூடத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பாஜகவின் தோல்வியை அத்வானி ஒப்புக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ராஜீவ் சுக்லா கூறியிருக்கிறார்

கருத்துகள் இல்லை: