வியாழன், 12 ஜூலை, 2012

டெலி மார்க்கெட்டிங்கில் அல்லல்படும் மக்கள்: தவிக்கும் வாடிக்கையாளர்கள்!

ஒவ்வொரு நாளும் குறைந்தது, பத்து பேராவது போன் செய்து, எங்களிடம் இடம் உள்ளது வாங்குங்க, "...ரியல் எஸ்டேட்டிலிருந்து பேசுகிறோம்; இடம்வேண்டுமா...' "...பாங்க்கிலிருந்து பேசுறோம்; கடன் வேணுமா...' என விடாமல், மொபைல்போன் வாடிக்கையாளர்களை விரட்டுவதால், செய்வதறியாது மொபைல்போன் வாடிக்கையாளர்கள் திகைத்து வருகின்றனர்.
கோவையில், "டெலிமார்க்கெட்டிங்' அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொபைல்போன் சொந்த உபயோகத்துக்கு வைத்திருந்தாலும், அது பெரும் தொல்லையாக மாற்றம் பெற்றுள்ளது. குறிப்பாக,"பிரிபெய்டு' வாடிக்கையாளர்கள் படும்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பாகுபாடு இல்லாமல், மொபைல்போனில் பேசுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
வசதிக்கு ஏற்ப பலர் இரண்டு, மூன்று மொபைல்போன்களை பயன்படுத்துகின்றனர். இதில், ஏதாவது ஒன்றை, தற்காலிகமாக "ப்ரீபெய்டு சிம்கார்ட்' திட்டத்தில் பயன்படுத்துவது வழக்கம். "ப்ரீ பெய்டு' கார்டில் இப்போதெல்லாம், கடைகளில் சென்று, "ரீசார்ஜ்' செய்து கொள்வது எளிதான வேலையாக முடிகிறது. இவ்வாறு, "ஈசி' யாக, "ரீசார்ஜ்' செய்யும்போது, கடைக்காரர், நமது எண்ணை நோட்டில் எழுதி, அதற்கான தொகையை எழுதுகின்றனர். இவ்வாறு, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான எண்களை எழுதி வைக்கின்றனர். இந்த எண்களை, பலருக்கு விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக ரியல் எஸ்டேட், தனியார் வங்கிகள், மொபைல்போன் நிறுவனங்கள் போன்றவற்றிற்கு ஒட்டுமொத்தமாக, "டேட்டா பேஸ்' என்ற பெயரில், விற்பனை செய்கின்றனர்.

இதை பெறும் நிறுவனங்கள் அல்லது "டெலிமார்க்கெட் டிங்' எனப்படும் மொபைல் போனில், தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்களை தேடுகின்றனர். பொதுவாக டெலிமார்க்கெட்டிங்கில், பெண்களையே பேச பயன்படுத்துகின்றனர். பெண் குரல் என்றால், யாருக்கும் எளிதாக கோபமும் வராது என்பதே அந்நிறுவனங்களின் கணிப்பு.ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் பல, "சார், அன்னூருக்கு அருகே சூப்பரா இருக்கிறது... விலை...1.5 லட்சம் தான்...' எனத்தொடங்கி, அடுக்கடுக்காக பேசுகின்றனர். அடுத்ததாக, "சார்....நாங்கள் ... மொபைல்போன் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம்...உங்களுக்கு போஸ்ட் பெய்டு நம்பர் வேணுமா சார்....பேன்சி நம்பர் இருக்கு...' என பேசுகின்றனர். ஏற்கனவே, மொபைல்போன் இருந்தாலும், கூடுதலாக வைத்துக்கொள்ளுங்கள்' என, கேன்வாஸ் செய்கின்றனர். இதே போன்று, தனியார் வங்கியின் பெயரைச் சொல்லி, " கிரெடிட் கார்டு வேணுமா... சார், பெர்சனல் லோன் வேணுமா சார்...' என கொஞ்சும் குரலில் பேசுவதுண்டு.

இந்த டெலிபோன் கால்கள், அனைத்தும் வாடிக்கையாளர்களின் சூழ்நிலையை மனதில் கொள்வதில்லை. ஒருவர் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்களது கவனம் திசை திரும்பும். அவசரமாக சென்று கொண்டிருக்கும்போது, இந்த கால்கள் வரும்போது, வாகனத்தை ஓரம் கட்டிவிட்டு, பேசினால் மகா எரிச்சலூட்டும் விதமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் இருக்கும், போன் தொல்லையை தவிர்க்க முடியாமல், பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.இதேபோன்று, எஸ்எம்எஸ் தொல்லையும், தற்போது அதிகரித்து வருகிறது. "பல்க் மெசேஜ்' இல்லையென்றாலும், தனிப்பட்ட போன்களில் இருந்து ஏரளாமான குறுஞ்செய்திகள் தொல்லை படுத்துகின்றன. இவற்றை கட்டுப்படுத்த, போலீசில் புகார் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதற்கென நடவடிக்கைக்கு போலீசிலும் ஏதாவது ஒரு தொலைபேசி எண் தரப்பட வேண்டும்; அல்லது எங்கு புகார் செய்ய வேண்டும் என, தெரியப்படுத்த வேண்டும்.

கோவை "சைபர் கிரைம்' போலீசார் கூறியது: மொபைல்போன்களில் விளம்பரம் செய்வதை கட்டுப்படுத்த, அந்தந்த நிறுவனத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிம்கார்டு நிறுவனங்களின் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் விளம்பரங்களை தவிர்க்க, "டூ நாட் டிஸ்டர்ப்' என்ற "ஆப்ஷனில்' பதிவு செய்து கொண்டால் விளம்பரங்கள் வராது. விளம்பர "டார்ச்சரால்' பாதிக்கப்பட்டவர்கள் யாரும், இதுவரை "சைபர் கிரைம்' பிரிவில் புகார் கொடுக்கவில்லை. இந்த மாதிரி புகார்கள் வந்தால், விளம்பரம் செய்தவர்களை அழைத்து முதற்கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்படும்,' என்றனர்.

கருத்துகள் இல்லை: