திங்கள், 21 நவம்பர், 2011

BJP கூட்டணியில் ADMK.,? : அத்வானி பேரணியில் தம்பிதுரை பங்கேற்பு

அ.தி.மு.க.,வின் பார்லிமென்ட் கட்சித் தலைவர் தம்பிதுரை, டில்லியில் நேற்று நடந்த அத்வானியின் ரத யாத்திரை நிறைவு பேரணியிலும், அதையொட்டி நடந்த, மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். இதன் மூலம், பா.ஜ., தலைமையில் இயங்கி வரும், தேசிய ஜனநாயக முன்னணியில் அ.தி.மு.க., சேர்வதற்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பேரணியில் தம்பிதுரை பேசியதாவது:
அத்வானி நாடு முழுவதும் யாத்திரை சென்று, மத்திய அரசின் ஊழலுக்கு எதிராக, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் பெருகியுள்ளதால், மக்கள் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இழந்து விட்டனர். ரத யாத்திரை மூலம், ஜனநாயகத்தைக் காப்பாற்ற, பெரும் சேவையை அத்வானி செய்து முடித்துள்ளார்.
ஐ.மு.கூ., அரசும், குறிப்பாக அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க., அமைச்சர்களும், மிகப் பெரிய ஊழல் புகார்களை பல்வேறு கோர்ட்டுகளில் சந்தித்து வருகின்றனர். இந்த புகார்களால், நாட்டிற்கு மிகப் பெரிய அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வந்த தி.மு.க., அரசின் செயல்பாடுகளால், மாநில அரசு, மிகப் பெரிய நிதிப்பிரச்னையை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஒரு விவரமான அறிக்கையை அளித்து, ஆறு மாத காலமாகி விட்டது. இதன் மீது மத்திய அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாளை துவங்க உள்ள பார்லிமென்ட் கூட்டத்தில், இந்த பிரச்னையை எழுப்ப உள்ளேன். பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டிக்க முன்வர வேண்டும். இவ்வாறு தம்பிதுரை பேசினார்.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை: