செவ்வாய், 22 நவம்பர், 2011

விலையேற்றம்: பாசிச ஜெயாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணம் போன்ற மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவைகளின் விலை இரண்டு மூன்று மடங்கு என ஜெயலலிதாவால் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலைவாசி உயர்வு உழைக்கும் மக்களின் கழுத்தை நெறிப்பதாக உள்ளது. தினசரி வருமானம் சராசரியாக 20 ரூபாய்க்கு கீழே உள்ள 80 கோடி மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டில் அடிக்கடி உயர்த்தப்படும் விலைவாசி என்பது மக்களை கடுமையான நெருக்கடியில் தள்ளியுள்ளது.
உழைக்கும் மக்களின் வருமானத்தை, வாழ்வாதாராத்தை உயர்த்தாமால் திட்டமிட்டு அவர்களின் வாழ்வை அழிப்பது போல் உள்ள இந்த விலையேற்றம் தனியார் முதலாளிகள் லாப நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வினை தனியார் பேருந்து முதலாளிகள் வரவேற்பதிலிருந்தே இந்த அரசு தனியார் முதலாளிகளுக்காக செயல்பட்டது நிரூபணமாகி உள்ளது.
இந்த அரசின் உள் நோக்கத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும், தினசரி பேருந்திற்கு மட்டும் 50 ரூபாயக்குமேல் மக்களிடம் பறிக்கும் ஜெயலலிதாவின் தடாலடி அறிவிப்பினை கண்டித்தும்,

திங்கள் 21.11.2011 அன்று காலை 10.30 மணியளவில் தி.நகர் பேருந்து நிலையம் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளைச் செயலர் தோழர் வ. கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காலை முதல் நூற்றுக்கணக்கான போலீசார், தி.நகரை சுற்றி வளைத்து அந்த சாலைகளில் இருந்த அனைவரையும் விசாரித்து விரட்டியபடி இருந்தனர். தி.நகர் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க சென்றவர்களை கூட போலீசு விட்டு வைக்கவில்லை. அங்கிருந்த சில சிவப்பு சட்டைகளை பார்த்தவுடன் சமரசம் பேசியது போலீசு.
பால் விலை, பேருந்து கட்டணம், மின்சாரம் கட்டணம் இரண்டு, மூன்று மடங்கு விசம் போல ஏறி உழைக்கும் மக்களை கொன்று கொண்டு இருக்கும் சூழலில் இதற்கு காரணமான தனியார் முதலாளிகளுக்கு உறுதுணையாக இருக்கும் இந்த அரசு உழைக்கும் மக்களுக்காக போராடும் தோழர்களிடம் பேசும் சமரசம்  எடுபடுமா என்ன?
தனியார் முதலாளிகளுக்கு அவர்களின் லாபத்திற்கு விலை போகின்ற இந்த அரசும், அதன் அடியாள் படையான போலீசையும் எதிர்த்து கண்டன முழக்கமிட்டபடி, இந்த விலைவாசி உயர்விற்கு காரணமான தனியார் முதலாளிகளை அம்பலப்படுத்தும் விதமாக சுமார் 300க்கும் மேற்பட்ட தோழர்கள் சீறிபாய்ந்து பேருந்து நிலையத்தின் முன் குவிந்தனர்.
15 நிமிடங்களுக்கு மேல் தோழர்களை முழக்கமிடவோ, ஆர்ப்பாட்டம் நட்த்தவோ அனுமதிக்காத போலீசு அனைவரையும் இழுத்து வண்டியில் ஏற்றிய சிறிது நேரத்தில் பெண்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பரித்து கண்டன முழக்கமிட்டனர். அப்போது அவர்களை பெண் போலீசார் சுற்றி வளைத்து கொண்டு இருந்தபோது குறிக்கிட்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஆர்ப்பாட்டத்தை படம் பிடித்து கொண்டு இருந்த செய்தியாளர்களை பார்த்து, ’நீங்கள் கொஞ்சம் கேமராக்களை நிறுத்துங்கள், இவர்களை நாங்கள் எப்படி வண்டியில் ஏத்துகிறோம் என்று பாருங்கள்’ என காட்டுமிராண்டிதனமாக பேசினார். இதனை பொருட்படுத்தாமல் தோழர்கள் முழக்கமிட்டபடியே இருந்தனர்.
பின்னர் அனைவரையும் கைது செய்து தி.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது. மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விலைவாசி பலமடங்கு ஏற்றி உழைக்கும் மக்களின் கழுத்தை நெறிக்கும் இந்த பாசிச பேய் ஜெயலலிதாவை பார்த்து பம்மி பதுங்கும் கருணாநிதி முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக சொல்லும் விஜயகாந்த், புலம்பிக் கொண்டு இருக்கும் போலிகள் வரை செய்வதறியாது திகைத்து நிற்கும் போது மக்களிடம் போராட்ட குணத்தை தூண்டும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த விலை ஏற்றத்தை வெறுமனே அரசு அறிவிப்பாக பார்க்காமல் நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் மயத்திற்கும் விலைபேசும் நடவடிக்கையாக புரிந்து கொள்வதும், மக்களிடையே அதை பரப்பவும் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழகம் முழுவதும் புரட்சிகர அமைப்புகள் இத்தகைய கண்ணோட்டத்தோடு மக்களை அணி திரட்டி போராடி வருகின்றன.

கருத்துகள் இல்லை: